புதன், 21 ஏப்ரல், 2010

உன் வாயை மூடிக் கொண்டிரு.

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.

குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்தது. அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.

அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது.

சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.

அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையைக் கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.

ஓஷோ சொல்கிறார்

இந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.

ஒன்று ; உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு: உன்னை சாணத்திலிருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.

கோப்பை இறந்தது.


ஸென் ஆசிரியர் இக்கியூ சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது. சிறுவனாக இருந்த இக்கியூ புத்திச்சாலியும் அதே சமயத்தில் துடுக்குத் தனம் கொண்டவனாக இருந்தான். ஜப்பானில் சீனாவில் இருந்து கொண்டு வந்த தேனீர் கோப்பைகள் மிகவும் அரிய கலைப் பொருட்களாக கருதப் பட்டன. ஒருவருடைய மதிப்பு அவருடைய சிறந்த கலைப் பொருட்களின் சேகரிப்பை பொருத்து இருந்தது. தங்கத்தை விடவும் மிக மதிப்புடையவையாக இவை கருதப் பட்டன.

இக்கியூவின் ஆசிரியரிடம் விலை மதிப்பில்லாத அரிதில் கிடைக்கக் கூடிய கலைப்பொருளான ஒரு தேனீர்க் கோப்பை இருந்தது. ஆசிரியர் இல்லாத சமயத்தில் ஒரு நாள் அதனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த இக்கியூ கை தவற விட்டு உடைத்து விட்டான். உடைத்தவன் நெஞ்சம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான். அசிரியர் அறையினுள் வரும் ஒசையைக் கேட்டதும் உடைந்த கோப்பையை கையில் எடுத்து தன் பின்புறமாக மறைத்துக் கொண்டான்.

ஆசிரியர் அருகில் வந்ததும், எதுவும் நடவாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு "ஐயா, எதற்காக மனிதர்கள் இறக்கிறார்கள்?" என்று கேட்டான்.
ஆசிரியர் சிறுவனுக்கு புரியும் படியாக, "எவ்வளவு நாட்கள் தான் வாழ்வது, சாவு என்பது இயற்கையான ஒன்று, உலகத்தில் பிறந்த எது ஒன்றும் இறந்துதான் ஆக வேண்டும்." என்றார்.
அதற்காகத் தான் காத்திருந்த சிறுவன் "இப்பொழுது உங்கள் தேனீர் கோப்பைக்கு சாகும் நேரம் வந்து விட்டது" என்று கூறி உடைந்த கோப்பையைக் காண்பித்தான்.

ஆசிரியர் அவனுடைய சமார்த்தியத்தை பார்த்து வியந்து சிரித்துக் கொண்டே சென்றார்.பெருமைடன் வழங்குவது ஜெய்தீப்.