வியாழன், 8 ஏப்ரல், 2010

என் சைக்கிளை ஒட்டுகிறேன்.


ஆஸ்ரமத்தின் ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்புவதை தலைமை குரு பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்ததும் ஐவரையும் அழைத்தார் .


ஐவரையும் நோக்கி '' நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? '' என்று வினவினார்.

'' அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா '' முதலாமவன் பதிலளித்தான்.

அவனைத்தட்டிகொடுத்து ''நீ பெரிய அறிவாளி , நீ வயதானகாலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய் '' என்றார் குரு.

இரண்டாவது சீடனோ '' நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது ஐயா ''

அவனை அருகில் அழைத்து '' உன் கண்கள் திறந்திருக்கின்றன நீ உலகை ரசிக்கிறாய் '' என்றார்.

மூன்றாவது சீடன் '' ஐயா நான் பயணிக்கையிலும் கூட மந்திரங்களை ஜெபிக்க முடிகிறது ''


குரு தன் கண்கள் விரிய '' அடேயப்பா உன் புத்திக்கூர்மை வியக்கவைக்கிறது'' என்று இரண்டு கைகளையும் சத்தமாக தட்டினார்.

நான்காவது சீடன் '' நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன் ஐயா '' என்றான்

குரு மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி '' நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணிக்கிறாயடா '' என்றார்.



ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின் '' என் சைக்கிளை ஒட்டுவதற்காக என் சைக்கிளை ஒட்டுகிறேன் ஐயா! '' என்றான் .

குரு அவன் காலில் விழுந்து '' ஐயா, என்னை மன்னியுங்கள் , நீங்கள் என் சீடனாக இருக்க முடியாது , நான்தான் உங்கள் சீடன் '' என்றார்.பெருமையுடன் வழங்குவது உங்கள் ஜெய்தீப்...

கிறித்தவ மதத்தை மட்டும் ஏன் குறிப்பாக தாக்குகிறீர்கள்.


கிறித்தவ மதத்தை மட்டும் ஏன் குறிப்பாக தாக்குகிறீர்கள் “என்று கேட்கிறீர்கள் ,அதற்க்கு முக்கிய காரணம் ,நான் அவர்கள் மேல் வைத்திருக்கும் உண்மையான அன்புதான் .அவர் “அன்பே கடவுள் “என்றார் . அந்த அன்பு வடிவத்தையே நான் கடவுளாக காணுகிறேன் .அந்த யதார்த்தமான ,உண்மையான தைரியமான தன்னை யார் என்று உணர்த்துக் கொண்ட ஒரு குருவை .சிலுவையில் அறைந்து ,சிலையாக வடித்து அவர்பெயரில் ஒரு மதத்தை உண்டாக்கிக் கொண்டு பணத்தை வாரி இறைத்து ,கிறித்துவத்தையும் ,கிறித்துவ மதத்தையும் சரியாக புரிந்துக் கொள்ளாமலேயே ,இந்த உலகத்தில் பரப்புவது எந்த விதத்தில் நியாயம் ?
ஒன்று மட்டும் கூறிக் கொள்ளுகிறேன் .நான் எந்த மதத்தையும் சேராதவன் . எனக்கு என்று எந்த மதமும் கிடையாது , மதம் என்ற குறுகிய எல்லைக்குள் ,என்னை அடைத்துக் கொள்ள நான் ஒரு நாளும் விரும்ப மாடேன் .என்னுடைய மதம் மதமற்ற மதம்( Religion without any religion ) நான் எல்லா மதத்துக்கும் உடையவன் .நான் ஒரு உண்மையான கிருத்துவனை விட ,இந்துவை விட ,முகமதியரை விட ,ஜைனரை விட எந்தவிதத்திலும் குறைத்தவன் இல்லை .இதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள் .ஆகவே எந்த ஒரு உண்மையான ,கிருஸ்துவை உண்மையாக புரிந்துக்கொண்ட யாருடைய மனத்தையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல .குறிக்கோளும் இல்லை .தேவையும் இல்லை .அப்படி அவர்களுடைய மனதை புண்படுத்தினால் ,என்னுடைய மனதையே ,நானே புண்படுத்தி கொள்வதற்கு சமம் .என்னை சரியாக புரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு கேள்வி ஓராயிரம் கேள்விகளை உண்டுபண்ணும் .அது உண்மைதான் .இப்போது நம்மால் கிறிஸ்துவையும் ,கிறிஸ்துவ மதத்தையும் தாண்டி இன்னும் செல்ல முடியவில்லை .
ஆமாம் ,”நீங்கள் சொல்லுவது உண்மைதான் .இந்து மதத்தை தோண்ட தோண்ட ……!எதுவோ சொல்லுவார்கள் . அதற்க்கு இந்த புத்தகம் போதாது.இப்படி பல மதங்களில்
பல மூட நம்பிக்கைகள் ஊடுரிவி தான் இருக்கும் .நம்மவர்கள் கடவுளை நம்புங்கள் என்றுதான் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள் தவிர “கடவுளை அடையுங்கள்” “கடவுளை அறிந்துக் கொள்ளுங்கள் ” “கடவுளை உணர்ந்துக் கொள்ளுங்கள் “என்று சொல்லவில்லை .நீங்கள் ஒன்றை அறிந்திக் கொள்ளாத பொழுது ,உணர்த்துக் கொள்ளாத பொழுது தான் “நம்புதல் ” என்று வருகிறது .நம்புதலுக்கு அடித்தளம் மூடக்கொள்கை ,மற்றும் பொய் ,பயம் ,ஆசை இவை தான் .
அதை போலத்தான் ஜீசஸ் யை நம்புங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்களேத் தவிர ஜீசஸ்யை உண்மையாக புரிந்துக் கொண்டு ,உணர்ந்துக் கொண்டு நம்புங்கள் என்று எந்த பாதிரிமாரும் பிரச்சாரம் செய்வது இல்லை .ஏன் என்றால் அவர்களே ஜீசஸ் யை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை .இதனால் , ” என்னை சாப்பிடுங்கள் ,என்னை குடியுங்கள் ” என்று ஜீசஸ் சொன்னதற்க்காக இன்றைக்கு ஆப்பத்தையும் ,ஓய்ன் என்ற மதுபானத்தையும் சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாக ஆடுகிறார்கள் .ஆகவே நம்புதல் என்பது ஒருவர் புரிந்துக் கொண்டதால் தானே வரவேண்டும் .தவிர வெறும் நம்பிக்கை மூடநம்பிக்கைகளை மட்டும் வளர்க்கும் .
பெருமைடன் வழங்குவது உங்கள் ஜெய்தீப்.

“வாழு!”“உணர்வோடு வாழு”.

ஓஷோ சொல்கிறார்,“வாழு!”“உணர்வோடு வாழு”.
நாம் என்ன உணர்வில்லாமலா வாழ்கிறோம்? என்று ஒருவர் கேட்கிறார்.
ஆம். அதிலென்ன சந்தேகம்?
எப்படி அது? மறுபடியும் கேள்வி.
நமக்கு இயற்கையோடு என்ன தொடர்பு இருக்கிறது?
பிரபஞ்ச இயக்கத்தோடு என்ன தொடர்பு இருக்கிறது?
உலகின் இயக்கத்தோடு, உலக வாழ்வின் உண்மை நிலையோடு என்ன தொடர்பு இருக்கிறது?
அப்படியானால் தொடர்பு எதுவும் நமக்கு இல்லை என்கிறீர்களா?
கேள்வி மறுபடியும்.

அப்படியல்ல தொடர்பு இருக்கிறது! நல்லவேளையாக நாம் இன்னும் நூறு சதவீதம் இயந்திரங்களாக வில்லை. ஆனால் அந்தத் தொடர்பு பற்றிய உணர்வு ஒரு சிறிதும் நமது நடவடிக்கைகளில், வாழ்க்கையில் இல்லை என்பதே உண்மை.
நமது வாழ்க்கையாக இருப்பது என்ன?
பணம் சம்பாதிக்கும் குறிக்கோள்
பக்கத்து வீட்டுக்காரனை மிஞ்சும் வேகம்
சமுதாய மதிப்பு பெறுவதற்கான நடிப்பு.
போலி கௌரவத்தை பாதுகாக்கும் முயற்சி
தலைவனை எதிர்பார்க்கும் அடிமைத்தனம்
கட்டுப்பாட்டை மீறும் தயக்கம்
சொல்லிக்கொடுத்த படி வாழும் பணிவு
இப்படி ஒரு இயந்திர மனிதனின்(ROBOT) அனைத்து குணாதிசயங்களும் கொண்டது நமது நல்ல பொறுப்புள்ள
சமூக மனிதனின் வாழ்வு.

ஒரு கம்யூட்டர் எப்படி தனியாக இயங்குகிறதோ, எப்படி அதன் திட்டஅமைப்போ(PROGRAMME) அதன்படி இயங்குகிறதோ, எப்படி அதைவிடப் பெரிய கம்யூட்டருக்குக் கட்டுப்படுகிறதோ, எப்படி அதற்கு அதன் திட்டஅமைப்பிற்கு மேல் எதையும் உணரும் சக்தியில்லையோ, அப்படித்தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை இருக்கிறது.

தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர்
தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர்
தனது தொழிலில் ஒரு பத்து பேர்
தனது வீதியில் ஒரு பத்து பேர்
தனது ஜாதியில் ஒரு பத்து பேர்
இந்த ஐம்பது பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக, என்று காட்டிக் கொள்வதுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த ஐம்பது பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே அவனை பாதிக்கின்றன.
மற்றபடி,
உலகின் வெப்பம் உயர்வதோ, கதிர்வீச்சின் ஆபத்தால் கான்ஸர் பெருகிவரும் அபாயமோ, அரசியல்வாதிகள் சுயநலத்தால் உலகத்தின் அழிவு நெருங்கி வருவதோ, அண்டார்டிகாவில் பனி முழுவதும் இவ்வருடம் உருகிய ஆபத்தோ, இலங்கையில் தினமும் பல்லாயிரம் பேர் பரிதவிப்பதோ, அவனுக்கு உரைப்பதில்லை. அவனுக்கு அவனை குழந்தை, கணவன் அல்லது மனைவி மட்டுமே பாதிக்கின்றனர்.
சுவிஸ் வங்கியில் 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி இந்திய அரசியல்வாதிகளின் சுருட்டல் பணம் சேமிப்பாக இருக்கிறதாம்.
இதில் ஒரு சிறு பங்கே இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன். இந்தப் பணம் இந்திய மக்கள் பணம். இது வந்தால் இந்த பஞ்சமும், பட்டினியும், பள்ளியில்லாக் குறையும் போய்விடும்.

ஆனால் நாம் இதை சிந்தித்துப் பார்த்து போராட மாட்டோம். நமது அறிவில் பக்கத்து வீட்டுக்காரன் நம் வீட்டில் எறிந்த குப்பைக்கு நியாயம் தேடுவதே முக்கியமாக இருக்கிறது.

அதே போல் சூரிய உதயமோ, மறையும் மாலைப் பொழுதின் அழகோ, பௌர்ணமி பிம்பமோ, பூக்களின் மணமோ, அருவிகளின் அழகோ, கடலின் ஆர்ப்பரிப்போ, மனிதனை தொடுவதில்லை. போகுமிடத்திலெல்லாம் போட்டோ எடுத்துக் கொண்டு அடுத்தவரிடம் காட்டி பெருமைப் படும் சிறுமையே அவனிடம் உள்ளது.

பாதையில் அப்போதுதான் கடந்து வந்த ஒரு மரத்தைப் பற்றிக் கேட்டால் அவனுக்குத் தெரியாது. காலையில் சாப்பிட்ட டிபனை மதியம் கேட்டால் தெரியாது. ஆனால் சாகும் வரை போட்டுள்ள திட்டம் பற்றி, கனவு பற்றி, குறிக்கோள் பற்றி, துல்லியமாகத் தெரியும். அதோடு எப்போதும் அதைப் பற்றிய கவலை வேறு அவனுக்கு.

இந்த முழு பிரபஞ்சத்திலும் மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் பேராசையும், குறிக்கோளும், திட்டமிடலும், முடிவுகளும் இல்லாமலேயே இருக்கின்றன. அவை செய்வது வாழ்தல் மட்டுமே. எந்த குறிப்பிட்ட பாதையும் அமைத்துக்கொள்ளாமல், கருத்தும், கொள்கையும், உயர்வும், தாழ்வும், குறிக்கோளும், கோட்பாடும் இல்லாமல் கணத்துக்கு கணம் வாழ்கின்றன. ஆனாலும் அழகாய் இருக்கின்றன. இசைவாய் இருக்கின்றன. உயிர்துடிப்போடு இருக்கின்றன.

ஏன் மனிதன் மட்டும் தனக்குக் கிடைத்த தன்னுணர்வோடு வாழ்வை நேரடியாக சந்தித்து வாழக் கூடாது?
ஏன் அடிமையாய், தலைவனுக்கோ, கடவுளுக்கோ, கொள்கைக்கோ, குடும்பத்திற்கோ அடிமையாய் வாழ வேண்டும்?

ஏன் பெரும்பான்மை பெண்கள் டிவி சீரியலுக்கும், இளைஞர்கள் சினிமாவுக்கும், ஆண்கள் பணப் போராட்டத்துக்கும், அரசியல்வாதிகள் அதிகார வெறிக்கும், குழந்தைகள் புத்தகச் சுமைக்கும், அடிமையாய் இருந்து மடிய வேண்டும்?

இது ரோபோ வாழ்க்கையல்லவா?
இது இயந்திரமாக வாழ்வது அல்லவா?

இடையில் ஒரு சில கணங்கள் மட்டுமே, அதுவும் வேறு வழியின்றி செக்ஸ், பசி, பயம் எனும் இயற்கை தன் கட்டுப்பாட்டை விட்டுவிடாமல் வைத்திருக்கும் உணர்வுகளால் மட்டுமே மனிதன் இயற்கையோடு இணைந்திருக்கிறான். இதிலிருந்து விடுபட்டு முழு இயந்திரமாகிப் போகும் முயற்சியும் நடக்கிறது.

மூச்சு விடுவது மனிதனின் கையில் இல்லை.
இரத்த ஓட்டம் மனிதனின் கையில் இல்லை.
ஜீரணம் நடப்பது மனிதனின் கையில் இல்லை.
சுரப்பிகள் சுரப்பது மனிதனின் கையில் இல்லை.
இறப்பு மனிதனின் கையில் இல்லை.
இதனால் மட்டுமே இந்தத் தொடர்புகள் தொடர்கின்றன.
மற்றபடி எல்லா உணர்வுகளும் மனதின் கட்டுப்பாட்டில் நடக்கும் நடிப்பாக மாறுகின்றன.
இப்படி மனிதன் இயந்திரமாகிவிட்ட விலையில் வளர்ச்சியோ, ஆன்மீகமோ, நிலைமாற்றமோ ஏது?
இயந்திரங்கள் மேலும் மேலும் சுறுசுறுப்பாக தனது திட்ட அமைப்புபடி செயல்படுமே அல்லாது அதற்கு உணர்வுநிலை வளர்ச்சி ஏது? உணர்வே அற்றதல்லவா அது !
இப்படி இறந்துபோன மனித கூட்டத்திற்கு எதிரானவர் ஓஷோ.

மற்ற சாமியார்களுக்கும் ஓஷோக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு கேள்வி.
பதில் இதுதான்
மற்ற எல்லா சாமியார்களும், மதங்களும், அமைப்புகளும், உங்கள் திட்ட அமைப்பை(PROGRAMME) உயர்த்த உதவும், அல்லது இருக்கும் திட்ட அமைப்புக்கு பதிலாக வேறு ஒன்றை கொடுக்கும். அவரவர்களுடையதே உயர்ந்ததென்று விளம்பரம் செய்யும், வியாபாரம் செய்யும்.
அந்த திட்ட அமைப்பின் எல்லைகள், படிகள், அதனால் அடையும் குறிக்கோள்கள் எல்லாம் தெளிவாய் இருக்கும்.
ஆனால்
ஓஷோ,
எல்லா திட்ட அமைப்புகளையும் உடைத்தெறி, என்னிடம் எந்த திட்டஅமைப்பும், வழியும், குறிக்கோளும், கட்டுப்பாடும் இல்லை. என்னையும் சேர்த்து விலக்கிவிட்டு உன் வாழ்வை வாழு, என்கிறார்.

இதை தெளிவாக்க ஒரு சம்பவம் சொல்கிறேன்.
ஒரு அன்பர் என்னிடம் வந்து, “எனது நெருங்கிய நண்பன் முதலில் குடிப்பான், செக்ஸில் ஈடுபாடு, கோபப் பட்டு விடுவான், செலவழிக்க தயங்க மாட்டான். அதனால் குடும்பத்தில் பிரச்னை, மற்றவர்களுக்கும் கஷ்டம். மனைவிக்கு நிம்மதியில்லை. உடம்பு கெட்டுபோகிறதே என்ற பயமும், கவலையும் வேறு. இப்படிபட்ட சூழ்நிலையில் இருந்தவன் ஒரு நல்ல ஆன்மீக அமைப்பில் சேர்ந்தான். ரெகுலராக தியானமும் யோகாவும் கற்று வந்தான். இப்போது முற்றிலுமாக மாறிவிட்டான். குடி இல்லை, கோபம் இல்லை. குடும்பத்தில் நிம்மதி. அவனே சந்தோஷமாயிருக்கிறான். தான் இப்படி மாறியதற்கு யோகாசனம் செய்ததும், அவர்கள் கற்றுத் தந்த தியானமுமே காரணம் என்று பலரையும் அந்த அமைப்பில் சேர்த்துவிடுகிறான். தான் இப்போது சந்தோஷமாயிருப்பதாக அவனே கூறுகிறான்.

ஆனால் நீங்கள் யோகா, டாய் சி, தியானம்,இயற்கைஉணவுமுறை என்று மனிதனின் வாழ்வு வளத்திற்கும், தேக ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும், திருப்தியான குடும்பத்திற்கும், அதிக திறமைக்கும் உதவும் அமைப்புகள் அனைத்தையும் ஆன்மீகமே அல்ல என்றும், உண்மையில் மனிதனுக்கு உதவுபவை அல்ல என்றும், ஓஷோ சுட்டிக் காட்டுவது முற்றிலும் மாறுபட்டது என்றும் கூறுகிறீர்கள். அது எப்படி?” என்றார்.

“சரியான கேள்வி என்பது போலத்தான் தெரிகிறது அல்லவா,” என்று கூறிய நான், “ஓஷோவின் ஒரு பதில் எனக்கு ஞாபகம் வருகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு அவனது குடும்பம், சமூகம், நண்பர்கள், வீடு, சொத்து, பணம், வியாபாரம், எல்லாம் மறைந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். அதோடு செடி, பாறை, நதி என உள்ள இந்த உலகமும் மறைந்து விட்டது. வெளி உலகமே இல்லை. அவன் மட்டும் தன்னந் தனியாக இருக்கிறான். அப்போது அவன் மகிழ்ச்சியாக உணர்வானேயானால் அதுதான் உண்மையான மகிழ்ச்சி. ஆனந்தம். உண்மையான ஆன்மீகத்தில் பிறக்கும் அனுபவம்.
மற்றதெல்லாம் தவறே, போலியே, கெடுதலே என்கிறார்.

இப்போது உங்கள் நண்பரின் சந்தோஷம் என்பது என்ன? சமூகத்தில் நல்ல பெயர், மற்றவர்களை விட அதிக ஆயுள் வாழ்வோம் என்று வந்துள்ள நம்பிக்கை, தவறு செய்கிறோம் என்ற குற்றவுணர்வுலிருந்து விடுதலை, இப்படி மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்து கிடைக்கும் சந்தோஷம், தனது பேராசை நிறைவேறும் என்ற நம்பிக்கை, சமூக மதிப்பீட்டில் உயர்ந்துவிட்ட ஆணவம் இவைகளே அவரது சந்தோஷம். உள்ளிலிருந்து வந்திருப்பதல்ல இது.

இவர் கற்ற தியானமும், யோகமும், அவரை இந்த சமூகத்திற்குப் பொருத்தமானவனாக சமூகத்தையும், அதன் நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும் மதித்து கடைபிடிப்பவனாக, அதற்காக பெருமைப் படுபவனாகவே மாற்றியுள்ளன. ஆரோக்கியமான உடம்பு பெறுவதும் தன்னை சூழ்ந்துள்ளவர்களை விட நீண்ட ஆயுள் வாழும் பேராசையின் விளைவேயன்றி உடலைக் கொண்டாடி அனுபவப்படுவதற்கு அன்று”. என்றேன்.

“சரி சார். ஆனால் அவருக்கு இப்போது முன்பு போல கோபம் வருவதில்லையே. அது ஒரு உள் வளர்ச்சியில்லையா?” என்றார்.
“உங்கள் நண்பரை விசாரியுங்கள். கூர்ந்து கவனியுங்கள். ஆபீஸ் பையனோ, கூட்டும் பணியாளோ தவறு செய்தாலும் கோபப் படுவதில்லையா? அல்லது சமூகத்தில் சொல்வது போல் அனாவசியமாகக் கோபப் படுவதில்லையா?” என்றேன்.

“தப்பு செய்தால் கோபப்படத்தான் செய்வார், ஆனால் முன்போல அனாவசியமாகக் கோபப் படுவதில்லை.” என்றார்.

அப்படியானால் அவர் உள்ளே கோபம் அப்படியேதான் இருக்கிரது. அதை எப்படி கட்டுப்படுத்துவது, கையாளுவது என்பதையே உங்கள் தியானமும், யோகமும் கற்றுத் கொடுத்திருக்கின்றன.
இதைத் தான் ஓஷோ சொல்கிறார். எல்லா அமைப்புகளும் உன் திட்ட அமைப்பை, கட்டமைப்பை, கட்டுப்பாடுகளை, கோட்பாடுகளை, வரையறைகளை, அணுகுமுறைகளை, சுருக்கமாகக் கூறினால் உன் மனதை சமூகத்தின் மதிப்பீட்டுப்படி அதற்குப் பொருந்தும்படியாக, ஏற்றபடியாக, உயர்வும், பாராட்டும் கிடைக்கும்படியாக, திருப்தி கிடைக்கும்படியாக மாற்றி அமைப்பதையே செய்கின்றன. ஆகாதவற்றை நீக்கி, வைரஸ்களை களைந்து, ஓவர்ஆயில் செய்து, சமூகத்திற்குத் தகுந்தபடி வேலைசெய்யுமாறு மாற்றியமைத்துத் தருகின்றன.

ஆனால் ஆன்மீகம் என்பது உள்உணர்வுப்படி வாழ்வது!
உணர்வின் தெளிவில் வாழ்வது!
இயற்கையுணர்வில் ஐக்கியப்பட்டு வாழ்வது !
தன்னுணர்வோடு வாழ்வது.!

அப்படி வாழும் போது உடலில் பிறப்பது யோகாசனம், டாய் சீ.
இதயத்தில் பிறப்பது அன்பு, கருணை.
அறிவில் பிறப்பது கலை, விஞ்ஞான கண்டுபிடிப்புகள்.
ஆகவே ஓஷோவின் செயல்முறைகளும், தியானங்களும், சுட்டிக்காட்டுதல்களும் ஒருவரை உள்ளே மாற்றுவது.
உள்ஒளி தருவது.! மற்றவையெல்லாம் உன்னைக் குருடனாகவே வைத்திருந்து வழிகாட்டும், திறமையைக் கொடுக்கும், அமைப்புகளே.” என்றேன்.

ஒரு மரம் என்ன செய்கிறது?
கணத்துக்குக் கணம் வாழ்கிறது.
வாழ்வை முழுமையாக சந்திக்கிறது.
நேர்கொள்கிறது.
அப்படி வாழ்வின் எல்லாப் பருவங்களையும், காலங்களையும், பஞ்சபூதங்களையும், இந்த உலக நடப்புகளையும் நேர்கொண்டு
கணத்துக்குக் கணம் வாழும்போது அதன் வளர்ச்சி தானாய் நடக்கிறது. திடீரென துளிர்கள். ஒருநாள் மலர்கள்.
பின்பு கனி.

இது போலவே மனிதன் வாழ்வை தன்னிடமுள்ள தனித்தன்மையான தன்னுணர்வுடன் நேர்கொண்டு வாழும்போது வாழ்க்கை அவனை பக்குவப்படுத்தும். அப்படி வாழ்ந்து கிடைக்கும் கனியான அனுபவம் எதுவானாலும் அதுவே உண்மை. அதுவே சத்தியம். அதுவே மேன்மை. அதுவே அடைய வேண்டியது. அதுவே வாழ்வின் அர்த்தம். அதுவே வாழ்வின் பயன். அதுவே வாழும் வழி.

ஆகவே இயந்திரத்தனத்தை உடையுங்கள். இறந்தவனாய் இருக்காதீர்கள்.
அதைவிட விலங்காய் இருப்பது முற்றிலும் மேலானது. ஏன்? ஏனெனில் இயந்திரத்திற்கும், இறந்தவனுக்கும் உணர்வு இல்லை.
வாழ்க்கை இல்லை. உணர்வு நிலை வளர்ச்சி சாத்தியமில்லை.
ஆனால் விலங்காய் இருந்தாலும் வாழ்வின் அம்சமாய், உணர்வின் வெளிப்பாடாய் உள்ள நிலை அது. அங்கிருந்து தன்னுணர்வு பெற்ற வளர்ச்சியடைந்த உணர்வுநிலைதான் மனிதன். அப்படி மனிதனாய் மனித உணர்வுகளோடு வாழ்ந்த சிலர் அடைந்த உணர்வுநிலை உயர் அனுபவம்தான் புத்தா.

ஒரு நதி வரைபடத்தைப் பார்த்து வழி கண்டுபிடித்து கடலை அடைவதில்லை.
பறவைகள் கருவியால் இடம் கண்டு கூடுகட்ட வருவதில்லை.
இயற்கையோடு இணைந்திருக்கின்றன. அவ்வளவே. உணர்வுப்படி நடக்கின்றன. அவ்வளவே.
இயற்கை உணர்வை, பிரபஞ்சத்தொடர்பை விட்டுவிட்ட மனிதனை, இயந்திரமாகிவிட்ட மனிதனை, உணர்வுள்ள, தன்ணுணர்வோடு கூடிய மனிதனாக்குவதே முதலில் செய்ய வேண்டியது என்கிறார் ஓஷோ.

ஆகவேதான் ஆரம்ப காலங்களில் லட்சக்கணக்கானோர் முன் பேசிய ஓஷோ அவர்களை லட்சியம் செய்யாமல் வடிகட்டத் துவங்கினார்.

உணர்வோடு கூடிய மனிதர்களே எனக்குத் தேவை. பழைய மனிதனை, அவனது திட்ட அமைப்பை முன்னேற்றுவதோ, மாற்றுத் திட்டஅமைப்பு கொடுப்பதோ எனது வேலை அல்ல.
மாறாக அதைச் செய்யும் சாமியார்கள், மதங்கள், மதநூல்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், கடவுள்கள், அரசியல்வாதிகள், கோட்பாடுகள் எல்லாவற்றையும் நான் எதிர்க்கிறேன்.

மனித உணர்வோடு கூடியவர்கள் என்னுடன் வாருங்கள். ஒவ்வொருவரும் சுதந்திரத்தோடும், முழு உணர்வோடும், கிடைத்த வாழ்க்கையை வாழ்வோம். வளர்வோம், பக்குவமாவோம். இதுவே எனது அறைகூவல்.
இப்படி தனித்தன்மையோடும், தன்னுணர்வோடும் முழுசுதந்திரத்தோடும் வாழும் மனிதனே என் புதிய மனிதன். என் ஜோர் புத்தா. அப்படி மனிதன் வளரும்படியாக வாழும் சூழ்நிலையை உருவாக்குவதே என் கம்யூன் என்கிறார் ஓஷோ.

எனவே நமக்கு இறந்த சமூகம் வேண்டாம். உயிருள்ள கம்யூன் வேண்டும். அதை நோக்கி வழி நடப்போம். பெருமையுடன் வழங்குவது உங்கள் அன்பு ஜெய்தீப்..

அடக்கி வைத்தலின் விளைவு.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏழைவிவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்யபிராயத்து நண்பன் அவனை காண வந்தான்.

விவசாயி,“வா!வா! இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்? உள்ளே வா, நான் சிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால் அவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன். வந்தபின் நாம் பேசலாம்.” என்றான்.

அந்த நண்பன்,“இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய உடை மிகவும் அழுக்காக இருக்கிறது. நீ எனக்கு வேறு மாற்றுடை கொடு. நான் மாற்றிக் கொண்டு உன்னுடன் வருகிறேன்,’’ என்றான்.

பல நாட்களுக்கு முன், அரசர் சில விலை மதிப்பான ஆடைகளை விவசாயிக்கு பரிசாக கொடுத்திருந்தார். அவன் அதை விசேஷ காலங்களில் அணிய என்று பாதுகாப்பாக வைத்திருந்தான். அதை எடுத்து சந்தோஷமாக நண்பனிடம் கொடுத்தான்.

நண்பன் மேல்அங்கி, தலைப்பாகை, வேட்டி, அழகான ஆடம்பரமான செருப்பு என எல்லாவற்றையும் போட்டுக் கொண்டான். அவன் இப்போது அரசனைப் போல காட்சியளித்தான். தன்னுடைய நண்பனை பார்த்த விவசாயிக்கு சிறிது பொறாமை ஏற்பட்டது. ஒப்பிடும்போது இவன் ஒரு வேலைக்காரன் போல தோன்றினான். தன்னுடைய அழகிய ஆடைகளை கொடுத்து, தான் தவறு செய்துவிட்டோமோ என்று வருத்தப்பட்டான். தன்னை தாழ்வாக உணர்ந்தான். இப்போது எல்லோரும் தன் நண்பனையே பார்ப்பார்கள், தான் ஒரு வேலைக்காரன் போல தோன்றுவோம் என நினைத்தான்.

அவன் தன்னை நல்ல நண்பன் என்றும் தெய்வம் போன்றவன் என்றும் தன் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித்தான். தெய்வத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களை பற்றியும் மட்டுமே நினைப்பதாக முடிவு செய்தான். `நல்ல அங்கி, விலையுயர்ந்த தலைப்பாகையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதனாலென்ன?’ என நினைத்தான். ஆனால் அவன் என்ன முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப அங்கியும் தலைப்பாகையும் தான் அவன் மனதில் அலை மோதின.

அவர்கள் நடந்து செல்லும்போது வழியில் கடந்து செல்வோர் அனைவரும் நண்பனையே கவனித்தனர். யாரும் விவசாயியை கவனிக்க வில்லை. அதனால் அவன் வருத்தமடைந்தான். தன் நண்பனுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவனுள்ளே அங்கியும் தலைபாகையுமே ஓடிக்கொண்டிருந்தன.

போகவேண்டிய வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் அவன் தன் நண்பனை அறிமுகம் செய்தான். “இவன் என் நண்பன், சிறுவயதுமுதல் நண்பன், மிகவும் அன்பானவன்.’’ என்றவன் திடீரென,``ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை’’ என்றான்.

நண்பன் திகைத்து நின்றான். வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப் பட்டனர். இதை சொல்லியிருக்கக் கூடாது என உணர்ந்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவன் தனது தவறுக்காக வருத்தப்பட்டான், உள்ளுக்குள்ளே தன்னை கடிந்து கொண்டான்.

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபின், தன் நண்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். நண்பன், “நான் திகைத்துவிட்டேன். அந்தமாதிரி ஏன் சொன்னாய்’’ எனக் கேட்டான்.

விவசாயி,“மன்னித்துவிடு, வாய் தவறி விட்டது. நான் தப்பு செய்து விட்டேன்.’’ என்றான்.

ஆனால் நாக்கு பொய் சொல்லாது. மனதில் இருப்பது மட்டுமே வாயிலிருந்து குதித்து வெளி வரும். நாக்கு ஒருபோதும் தவறு செய்யாது. விவசாயி, “என்னை மன்னித்து விடு. நான் எப்படி அந்தமாதிரி சொன்னேன் என எனக்கு தெரியவில்லை’’ என்றான். ஆனால் அந்த எண்ணம் தனது மனதிலிருந்து தான் வெளி வந்தது என்பது மிக நன்றாக அவனுக்குத் தெரியும்.

மற்றோர் நண்பனின் வீட்டிற்கு போனார்கள். இப்போது விவசாயி இந்த துணிமணிகள் தன்னுடையது என சொல்லக்கூடாது என்று உறுதியான தீர்மானம் செய்துகொண்டான். தனது மனதை நிலைப் படுத்திக் கொண்டான். அந்த நண்பனின் வீட்டு கேட்டை அடையும் போது அந்த துணிமணிகள் பற்றி எதுவும் பேசக் கூடாது என மாற்றமுடியாத தீர்மானம் செய்துகொண்டான்.

அந்த அப்பாவி மனிதனுக்கு, எதுவும் சொல்லக் கூடாது என தீர்மானம் செய்ய செய்ய, அந்த உறுதியான தீர்மானமே இந்த துணிமணிகள் என்னுடையவை என்பதை உள் மனதில் ஆழமாக கொண்டு செல்லும் என்பது தெரியாது. மேலும் இந்த உறுதியான தீர்மானம் எங்கு செய்யப் படுகிறது.

ஒருவன் பிரம்மச்சரிய விரதம் பூணும்போது அவன் தன்னுடைய காம உணர்ச்சியை வலுக்கட்டாயமாக உள்நோக்கி தள்ளுவது போல, உணவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ, பட்டினி கிடப்பதாகவோ முடிவு செய்தால் அவன் அதிகமாக சாப்பிடும் ஆசையை அடக்கி வைப்பது போல, இது போன்ற முயற்சிகள் உள்ளே தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்விளைவை ஏற்படுத்தும். நமது பலவீனம் எதுவோ அதுவே நாம். ஆனால் நாம் அதை அடக்கி ஆள முடிவு செய்கிறோம். அதை எதிர்த்து போராட தீர்மானிக்கிறோம். – இது தானாகவே ஆழ்மனதில் தகராறு உருவாக ஒரு அடிப்படையாக அமைகிறது.

ஆகவே உள்ளே இந்த சச்சரவுடன், நமது விவசாயி அந்த வீட்டிற்க்குள் சென்றான். அவன் மிகவும் ஜாக்கிரதையாக, ‘இவன் எனது நண்பன்.’ என்றான். யாரும் அவன் சொல்வதை கவனிக்கவில்லை. எல்லோரும் நண்பனையும் அவன் துணிமணியையுமே ஆச்சரியத்தோடு கவனித்தனர். இது என்னுடைய அங்கி இது என்னுடைய தலைப்பாகை என அவனுக்கு தோன்றியது. ஆனால் உடையை பற்றி பேசுவதில்லை என்ற தீர்மானத்தை நினைவு படுத்திக் கொண்டான். அவன் உறுதி எடுத்திருந்தான்.

எல்லோரிடமும் எளிமையானதோ அழகானதோ உடைகள் உண்டு. இது ஒரு விஷயமே அல்ல என தனக்குதானே விளக்கம் கூறிக் கொண்டான். ஆனால் அந்த உடைகள் அவனது கண்களுக்கு முன் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது.

அவன் மறுபடியும் அறிமுகம் செய்தான். “இவன் எனது நண்பன். சிறுவயது முதலே நண்பன். நாணயமானவன். ஆனால் இந்த உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல”

எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். யாரும் இப்படி ஒரு அறிமுகத்தை கேட்டதேயில்லை. “உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல.”

அங்கிருந்து வந்தபின் திரும்பவும் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ‘மிகப் பெரிய தப்பு!’ என்று அவன் ஒத்துக்கொண்டான். இப்போது அவன் என்ன செய்யக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமடைந்தான். ‘உடைகள் இதற்கு முன் இதுபோல நினைவில் இருந்ததேயில்லை. கடவுளே எனக்கு என்ன நடந்தது.?’

அவனுக்கு என்ன நடந்தது ? அவன் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட முறையை கடவுளே முயற்சி செய்தால் கூட அந்த உடைகளை பற்றிய நினைப்பு கடவுளையும் பற்றிக்கொண்டு விடும். அந்த செயல்முறை அப்படிப் பட்டது என்பது அந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது.

நண்பன் மிகுந்த மன வருத்தத்துடன்,“இனி நான் உன்னுடன் வரவில்லை” என்றான். விவசாயி அவன் தோளைப் பற்றி, “அப்படிச் செய்யாதே! என் வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பனிடம் இப்படி நடந்து கொண்டேனே என சங்கடத்துடனேயே நான் இருக்க நேரிடும். நான் சத்தியமாக திரும்பவும் இந்த உடைகளை பற்றி குறிப்பிட மாட்டேன். இதயபூர்வமாக, கடவுள் சத்தியமாக நான் உடைகளை பற்றி எதுவும் கூறவே மாட்டேன்.” என்றான்.

ஆனால் ஒருவர் சத்தியம் செய்யும்போது அதைப் பற்றி அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு உறுதியான முடிவு எடுக்கும்போது அடி ஆழத்தில் வேறு ஏதோ அதனுடன் இணைந்துள்ளது. உறுதியான முடிவு மேல் மட்ட மனதில் எடுக்கப் படுகிறது, அதற்கு எதிரானது உள் மனதில் எங்கோ செருகப் படுகிறது. மனம் பத்து பிரிவுகளாக இருந்தால், மேற் பகுதியில் உள்ள ஒரு பிரிவு மட்டுமே முடிவு செய்கிறது. ஆனால் மீதி உள்ள ஒன்பது பிரிவுகளும் அந்த முடிவுக்கு எதிராக உள்ளன. பிரம்மச்சரியம் ஒரு பிரிவால் எடுக்கப் படும் முடிவு எனில் மீதி உள்ள மனம் அனைத்தும் உடலுறவுக்கு அலைகின்றன. இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஈடு செய்யமுடியாத அந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காக ஏங்குகின்றன.

அவர்கள் மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர். விவசாயி தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான். இறுக்கமானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் ஒரு எரிமலையே அவர்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. வெளிப்பார்வையில் அவர்கள் கண்டிப்பானவர்களாக, கட்டுபாடானவர்களாக, இருப்பார்கள். ஏனெனில் அவர்களது இயல்பான போக்கை தன்னிச்சையாக விடாமல் உள்ளே பிடித்துவைத்து சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.


நினைவில் கொள், கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் தொடரவும் முடியாது, நிறைவு பெறவும் முடியாது. ஏனெனில் அதில் அளவற்ற சிரமம் ஏற்படுகிறது. நீ சில சமயங்களில் ஓய்வாக இருக்கவேண்டும். சில சமயங்களில் தளர்வு கொள்ள வேண்டும். உன்னுடைய முஷ்டியை நீ எத்தனை நேரம் இறுக்க மூடி வைத்திருக்க முடியும் 24 மணி நேரமுமா? நீ இறுக்க இறுக்க அது சோர்வடைந்து விடும். அதனால் அந்த அளவு வேகமாக அது திறந்து விடும். கடின வேலை செய்தால் அதிக சக்தி செலவாகி சீக்கிரத்தில் சோர்வாகி விடுவாய். எப்போதும் ஒரு செயலுக்கு ஒரு எதிர்செயல் இருக்கும், அந்த எதிர்செயல் எப்போதும் உடனடியாக நிகழும். உனது கைகள் எல்லா நேரமும் திறந்தே இருக்கலாம், ஆனால் முஷ்டியை இறுக்கமாக எல்லா நேரமும் வைத்திருக்க முடியாது. அது உன்னை சோர்வடைய செய்யும் அதன்பின் எந்த விஷயமும் வாழக்கையின் இயற்கையான பாகமாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் நீ கட்டாயப்படுத்துகிறாயோ, அப்போதெல்லாம் ஓய்வு நேரம் தொடர்ந்து வந்தே தீரும். அதனால் ஒரு துறவி எந்த அளவு கட்டுப்பாடானவனோ, அந்த அளவு அவன் ஆபத்தானவன். இருபத்தி மூன்று மணி நேரம் இறுக்கமாக சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றிய பின், குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தன்னை தளர்த்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவன் தன்னுள் அடக்கிவைத்த அத்தனை தேவையற்றவைகளையும் வெளியேற்றியாக வேண்டிய அவசரம் ஏற்படுகிறது.

இந்த விவசாயி உடைகளை பற்றி பேசக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இறுக்கமாக வைத்துக் கொண்டான். அவனது நிலையை கற்பனை செய்து பார். உனக்கு ஒரு சிறிதளவு மத அனுபவம் இருந்தால் போதும், அவனது மனநிலையை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். சத்தியம் செய்திருந்தாலோ அல்லது சபதம் எடுத்திருந்தாலோ அல்லது விரதம் என்பதற்க்காக உன்னை கட்டுப் படுத்தி வைத்திருந்தாலோ உனக்கு அனுபவம் இருக்கும். இப்போது அந்த விவசாயியின் பரிதாபத்துக்குரிய மனம் என்ன பாடுபடும் என்பதை உன்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

அவர்கள் மற்றொரு வீட்டிற்க்கு சென்றனர். அந்த விவசாயி களைத்துபோய்விட்டான், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. அந்த நண்பன் கவலைப் பட்டான். விவசாயி வேதனையால் உறைந்து போய்விட்டான். மெதுவாகவும் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாகவும் பேசியவாறே அவன் அறிமுகம் செய்தான். ‘இவன் எனது நண்பன், சிறு வயது நண்பன், மிகவும் நல்லவன்.’

ஒரு வினாடி அவன் தடுமாறினான். அவன் உள்ளிருந்து ஒரு உந்துதல் வந்தது. தான் மதியிழப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் சத்தமாக,“இந்த உடைகள் என்னை மன்னித்து விடுங்கள். நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன்.!”

இந்த மனிதனுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவேதான் மனிதஇனம் முழுமைக்கும் நிகழ்கிறது. ஏனெனில் கட்டுப்படுத்தப்படுவதால், காமம் என்பது ஒரு வெறியாக, ஒரு நோயாக, நெறி தவறிய ஒன்றாக மாறிவிட்டது. அது விஷமாகி விட்டது.பெருமையுடன் வழங்குவது உங்கள் யோகி...

ஓஷோ குடும்பத்தைப் பற்றியும், அதன் எதிர்காலம் பற்றியும் என்ன கூறுகிறார்?

மிகவும் அதிகமாக காலாவதியாகிபோன விஷயம் குடும்பம். அது அதன் வேலையை செய்துவிட்டது, அது இனிமேல் தேவையில்லை. உண்மையில் அது இப்போது மனித வளர்ச்சிக்கு மிகவும் தடையாக உள்ள விஷயமாக உள்ளது. குடும்பம் தேசங்கள், மாநிலங்கள், கிறிஸ்துவ மடாலயங்கள், ஆகியவற்றின், அசிங்கமான எல்லாவற்றின் ஒரு பகுதி.

ஒரு விதத்தில் போப் குடும்பம் மறைந்துவிட்டால் கிறிஸ்துவ மடாலயதிற்கு எதிர்காலம் இல்லை என்று கூறுவது சரிதான் — ஏனெனில் குடும்பமும் அதன் ஆழ்மன கட்டுபாடுகளும் இன்றி நீங்கள் எங்கிருந்து கிறிஸ்துவர்களையும், இந்துகளையும், முகமதியர்களையும் உருவாக்குவீர்கள்?

அதனால்தான் குடும்பம் மறைந்தாக வேண்டும் என நான் கூறுகிறேன். குடும்பம் மறையாமல் இருந்தால் இந்த அசிங்கமான எல்லா பூதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பமே நமது எல்லா மனநோய்களுக்கும் மூலகாரணம். நாம் குடும்பத்தின் மனோரீதியான கட்டமைப்பை, அது மனித விழிப்புணர்வை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முதல் விஷயம்: குழந்தையை குடும்பம் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கைகளுக்குள், அரசியல் கருத்துக்குள், ஏதோ ஒரு தத்துவத்திற்குள் பொருத்துகிறது. குழந்தை மிகவும் வெகுளியாகவும், மிகவும் ஏற்றுகொள்ளகூடியதாகவும், மிகவும் திறந்த தன்மையுடனும் உள்ளது, அதன்மேல் அதிகாரம் செலுத்தபடமுடியும். அவன் இன்னமும் முடியாது என கூறமுடியாது, முடியாது என்று சொல்வதைப் பற்றிய யோசனைகூட அவனுக்கு இன்னும் வரவில்லை, மேலும் அவன் முடியாது என்று சொல்லமுடியும் என்றாலும் கூட அவன் அதனைச் சொல்லமாட்டான் ஏனெனில் அவன் முழுமையாக, முழுவதுமாக குடும்பத்தைச் சார்ந்துள்ளான். அவன் மிகவும் உதவியற்றவனாக உள்ளதால் குடும்பம் எந்த முட்டாள்தனத்திற்கு அவன் ஒத்துபோக வேண்டும் என நினைக்கிறதோ அதற்கு அவன் குடும்பத்துடன் ஒத்துபோயாக வேண்டும்.

குடும்பம் குழந்தை விசாரிக்க உதவுவதில்லை, அது நம்பிக்கைகளை தருகிறது, நம்பிக்கைகள் விஷம். ஒருமுறை குழந்தை நம்பிக்கைகளால் சுமையேற்றப் பட்டுவிட்டால் அவனுடைய விசாரிப்பு ஊனமுற்றதாகிவிடும், இயங்காது. அவனுடைய இறக்கைகள் வெட்டபட்டுவிட்டன. அவன் தானாகவே விசாரித்தறியும் நேரம் வரும்பொழுது அவன் ஏற்கனவே சமூக கட்டுதிட்டங்களை பெற்றிருப்பான். அவன் எல்லா விசாரிப்பையும் ஒரு குறிப்பிட்ட கருத்துடனே செய்வான்- ஒரு கருத்தோடு செய்யும்பொழுது உனது விசாரிப்பு உண்மையானதல்ல. நீ ஏற்கனவே செய்யபட்ட ஒரு முடிவை சுமந்துகொண்டுள்ளாய். நீ வெறுமனே உனது உணர்வற்ற முடிவுக்கு துணை செய்யும் சாட்சிகளை தேடுகிறாய். நீ உண்மையை கண்டறிய முடியாதவனாகிவிட்டாய்.

அதனால்தான் உலகில் ஒரு சில ஞானிகளே உள்ளனர். அடிப்படை காரணம் குடும்பம். இல்லாவிடில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதே ஞானிதான், உச்ச உணர்வு நிலையை அடையும் சக்தியோடு, உண்மையை கண்டறியவும், பரவச வாழ்க்கையை வாழவுமே வருகிறது. ஆனால் குடும்பம் இந்த பரிமாணங்களை எல்லாம் அழித்துவிடுகிறது. அது அவனை சமதரையாக ஆக்கிவிடுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் மிகவும் புத்திகூர்மையோடு வருகிறது ஆனால் குடும்பம் அவனை மந்த புத்தியுள்ளவனாக்கிவிடுகிறது. ஏனெனில் ஒரு புத்திகூர்மையுள்ள குழந்தையோடு வாழ்வது பிரச்சனைக்குரியது. அவன் சந்தேகப்படுவான், அவன் கேள்வி கேட்பான், அவன் விசாரிப்பான், அவன் சொல்வதை கேட்கமாட்டான், அவன் ஒரு புரட்சியாளன் – குடும்பத்திற்கு சொல்வதை கேட்கும், பின்தொடர தயாராக இருக்கும், காப்பியடிக்கும் ஒருவன் தேவை. எனவே மிகவும் ஆரம்பத்திலேயே புத்திகூர்மையின் விதை அழிக்கபட வேண்டும். கிட்டதட்ட முழுவதும் எரிக்கபட வேண்டும், எனவே அதிலிருந்து எந்த முளைவிடுதலுக்கும் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

ஜரதுஷ்ட்ரா, ஜீசஸ், லாவோட்சு, புத்தர் போன்ற ஒரு சில மக்கள் சமுதாய கட்டுமானத்திலிருந்து, குடும்ப கட்டுபாட்டிலிருந்து தப்பியது ஒரு அதிசயமே. அவர்கள் உணர்வுநிலையின் உயர்ந்த சிகரங்களாக தெரிகிறார்கள், ஆனால் உண்மையில் எல்லா குழந்தைகளும் இதே குணத்துடனேயே அதே சக்தியுடனேயே பிறக்கின்றனர்.

தொண்ணூற்று ஒன்பது புள்ளி ஒன்பது சதவீத மக்கள் புத்தர்களாக முடியும். வெறுமனே குடும்பம் மறைய வேண்டும். இல்லாவிடில் கிறிஸ்துவர்கள் மற்றும் முகமதியர்கள் மற்றும் இந்துகள் மற்றும் ஜைனர்கள் மற்றும் புத்தமதத்தை சார்ந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் புத்தர்கள் அல்ல, மகாவீரர்கள் அல்ல, முகமதுகள் அல்ல, அதற்கு சாத்தியமில்லாமல் போய்விடும். முகமது அவரது பின்புலத்தை எதிர்த்து எழுச்சி கொண்டார், புத்தர் அவரது பின்புலத்தை எதிர்த்து எழுச்சி கொண்டார், ஏசு அவரது பின்புலத்தை எதிர்த்து எழுச்சி கொண்டார். இவர்கள் அனைவரும் எழுச்சியாளர்கள் – குடும்பம் எழுச்சிகரமான ஆத்மாவிற்கு முற்றிலும் எதிரானது.

நான் கம்யூனை கற்பிக்கிறேன். குடும்பத்தை அல்ல. கம்யூன் குடும்பத்திற்கு மாற்று. குடும்பம் குழந்தையை முதலில் கட்டமைக்கிறது. அதுவே எல்லாவிதமான பைத்தியகாரதனங்களுக்கும் காரணம்.

ஒரு குழந்தை ஒரே ஒரு பெண்ணினால், தாயால், ஒரே ஆணால், தந்தையால், வளர்க்கபடுகிறது. குழந்தை ஒரு பையனாக இருந்தால் தாயின்மீது பிணைப்பு கொள்கிறான், குழந்தை ஒரு பெண்ணாக இருந்தால் தந்தையின் மீது பிணைப்பு கொள்கிறாள். இப்போது இவை மனோரீதியாக நிருபிக்கபட்ட உண்மைகள். பையனின் மனதில் தாயின் உருவம், குணம்.......பதிந்துவிடுகிறது.....இப்போது அவன் தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் அப்படியே அவனுடைய தாயை போலவே உள்ள பெண்ணை தேடிகொண்டிருப்பான். இதே விஷயம் பெண்ணை பொறுத்தவரையிலும் உண்மையே, அவள் அப்படியே தன்னுடைய தந்தையை போலவே உள்ள காதலனை கண்டுபிடிக்க முயல்வாள். இப்போது இது சாத்தியமற்றது – அவர்கள் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை.

அதனால்தான் எல்லா காதல்களும் தோல்வியடைகின்றன. அவைகள் தோல்வியடைந்தே ஆகவேண்டும். மிகவும் தொடக்கத்திலிருந்தே காதல் வெற்றியடைய முடியாத வண்ணம் எல்லாவற்றையும் நாம் சமாளித்துள்ளோம். நீ எங்கு உன்னுடைய தாயையோ, அல்லது தந்தையையோ, கண்டுபிடிக்கமுடியும்? அது முடியாத காரியம். ஏனெனில் யார் இருவரும் ஒருவரை போலவே ஒருவர் இருப்பதில்லை. ஆனால் இதுவே உணர்வற்ற நிலையின் தேடலாக இருக்கிறது. ஒவ்வொரு முறை நீ ஒரு ஆணுடனோ அல்லது ஒரு பெண்ணுடனோ காதல் வயப்படும்பொழுது நீ திரும்பவும் இந்த பெண் உனது தாயாக இருப்பாள் என நம்புகிறாய். இது சுயஉணர்வு நிலையில் அல்ல, இது ஒரு ஆழமான உணர்வற்ற நிலையின் பதிவு. ஆனால் விரைவில் நீ உன்னுடைய உணர்வற்ற நிலையின் பதிவுடன் அவள் பொருந்துவதில்லை என கண்டறிவாய் – போராட்டம் துவங்குகிறது நீ உடைய தொடங்குகிறாய். எந்த ஆணும் உனது தந்தையாக முடியாது, எந்த பெண்ணும் உனது தாயாக முடியாது. இப்போது இந்த குடும்பம் என அழைக்கப்படுவது தொடர்ந்தால், பிறகு காதல் உலகில் வெற்றிபெறமுடியாது. அன்பு இல்லாமல், அங்கு பரவசம் இருக்கமுடியாது, அன்பு இல்லையெனில் துன்பம்தான் நமது விதி. நாம் குடும்பத்தை தேர்ந்தெடுத்தால் நாம் துன்பத்தை தேர்ந்தெடுத்துவிட்டோம்.

ஒரு கம்யூன் முற்றிலும் மாறுபட்ட ஒரு விஷயம். ஒரு கம்யூனில் குறிப்பிட்ட மனிதர்களோடு பிணைப்பு இருக்காது. இங்கே குறைந்தபட்சம் முன்னூறு சிறு சந்நியாசிகள் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் உள்ளனர் பல சிறு பையன்களும் பெண் குழந்தைகளும் தந்தை, தாயுடன் தங்குவதற்கு இரவில் வருவதில்லை – அவர்களுக்கு பல அங்கிள்களும், ஆன்ட்டிகளும் உள்ளனர். முழு கம்யூனும் அவர்களுடையது! இந்த கம்யூனில் சிறு குழந்தைகள் அவர்களுக்கென தனித்தன்மை கொண்டுள்ளனர், அவர்கள் தனியாக செல்ல தொடங்குகின்றனர். அவர்கள் தாயுடன், தந்தையுடன், குடும்பத்துடன் பிணைப்பு கொள்வதில்லை, அவர்கள் வேறுபட்ட மக்களுடன் பழகுகின்றனர். அவர்களுடைய தந்தையும், தாயும் கூட ஒருவர் மீது ஒருவர் பிணைப்பு கொண்டவர்கள் அல்ல.

திருமணம் இறந்துவிட்டது. அது ஒரு மாறாத விஷயம். அது வாங்கபடுவது, அது ஒரு பொருளை போன்றது.....அது சாமானை போன்றது. அது ரோஜா இதழ் வளர்வதைப் போன்றதல்ல, இன்று செடி முழுவதும் மலர்களால் நிறைந்துள்ளது. நாளை எல்லா மலர்களும் போய்விடும், இன்று அது மிகவும் பசுமையாக உள்ளது, நாளை இலைகள் மஞ்சளாக தொடங்குகின்றன, அவை விழ தொடங்குகின்றன. இங்குள்ள ஒருவன் எல்லா பருவங்களையும் காண்பான், எல்லா உணர்வுகளையும் காண்பான், எல்லா சண்டைகளையும், எல்லா துன்பங்களையும், எல்லா இன்பங்களையும் காண்பான். அவன் மிகவும் மையம் கொண்டவனாகவும், நிலை கொண்டவனாகவும் இருப்பான், வாழ்வு மாறாத தன்மை கொண்ட விஷயமல்ல என்பதை அவன் அறிவான். அவன் எதையும் எதிர்பார்க்கமாட்டான், ஏனெனில் வாழ்வு பொருத்தபட்டதல்ல. எல்லாவிதமான மாறுதல்களுக்கும் அவன் தயாராக இருப்பான். வாழ்வோடு சேர்ந்து அவனால் மாறமுடியும். அவன் ஒருபோதும் அடி தவறமாட்டான். அவன் எப்போதும் வாழ்வின் இலயத்தோடு இணைந்திருப்பான்.

மனித இனத்தை மேலும் முழுமையானதாக்க, மேலும் ஆரோக்கியமானதாக்க, மேலும் அன்புடையதாக்க, மேலும் பரவசமுடையதாக்க, அதுதான் தேவை. தேவாலயம் மறைந்துவிடும், தேசங்கள் மறைந்துவிடும், இனங்கள் மறைந்துவிடும், மேலும் அவை மறைய வேண்டியவை – அவை ஏற்கனவே மிக அதிக காலம் வாழ்ந்துவிட்டன. அவை இறப்பிற்கு பின் வாழ்வதைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளன.

அவை எரிக்கப்பட வேண்டும். புதைக்கப்பட வேண்டும். நாம் பிணங்களை சுமந்து கொண்டிருக்கிறோம், அந்த பிணங்கள் நாற்றமடிக்கின்றன. நீ அவைமீது வாசனை திரவியத்தை அடித்துகொண்டே, வீட்டில் பிணங்களோடு வாழ்வதை சமாளித்துக்கொண்டே இருக்கலாம். அவை கடந்தகாலத்தில் ஏதோ ஒரு அர்த்ததோடுதான் இருந்தன என்பதை நான் அறிவேன். உன்னுடைய தந்தை உயிரோடு இருந்தபொழுது அது ஒரு விஷயம். ஆனால் இப்போது உனது தந்தை இறந்துவிட்டார். எனவே சிறிது அழுது புலம்பு. ஆனால் சுமையை எறிந்துவிடு, ஆனால் பிணத்தை உனது வாழ்நாள் முழுவதும் உனது தோள்களில் சுமக்க வேண்டிய தேவை இல்லை. ஒரே ஒரு பிணம் மட்டும் இல்லை, பல பிணங்கள் உள்ளன, உனது வீட்டில் இறந்துபோன மக்கள் பலர் உள்ளனர். அதனால் உயிரோடு இருப்பவர்கள் வாழ இடம் இல்லை. உயிரோடு இருப்பவர்கள் வீட்டிற்கு வெளியே வாழ்கிறார்கள். இறந்து போனவர்கள் முழு இடத்தையும் பிடித்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு இடம் தேவை.

குடும்பம் இறந்துபோன ஒரு விஷயம், ஆனால் நாம் எப்படியோ அதற்கு ஒட்டு போட்டு கொள்கிறோம். விவாகரத்து என்றால் என்ன? அது ஒரு ஒட்டு போடுதல்.

நான் மக்கள் அடையமுடியாத இலட்சியங்களில் ஆர்வம் கொள்வதை விரும்பவில்லை. நான் இலட்சியவாதியே அல்ல. நான் பூமியில் இருப்பவன். நடைமுறையாளன், ஒரு உண்மையாளன்.

மக்கள் ஆழ்ந்த நெருக்கத்தில் ஒருங்கிணைந்து வாழ விரும்பினால் அவர்கள் பிடித்து வைத்து கொள்பவர்களாக இருக்ககூடாது. அவர்கள் சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும். அதுதான் திருமணம் அற்ற உறவு என்பது – சுதந்திரம். ஆனால் மக்கள் மிகவும் மாறுபட்டவர்கள்.

யாரும் யாருக்கும் சுதந்திரம் தர தயாராக இல்லை. மக்கள் அழகான வார்த்தைகளை கூறுகிறார்கள், இனிப்பானவை, அர்த்தமற்றவை. அவை மிகவும் நல்லதாக காட்சியளிக்கின்றன, முழு சுதந்திரம், நிபந்தனையற்ற அன்பு, பிடித்துவைத்துகொள்ளும் தன்மையற்ற நெருக்கம். என்று சத்தம் நன்றாக உள்ளது, ஓம்..... என்பதைப் போல அது நல்ல சத்தமாக உள்ளது, ஆனால் நீ அதை வைத்துகொண்டு வேறு என்ன செய்யமுடியும் ?

திருமணம் – தாண்டிய உறவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, மன வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் மிகவும் உதவிகரமானவை, ஏனெனில் நீ வேறொரு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ ஒருநாள், அல்லது இரண்டு நாள், அல்லது சில நாட்கள் பழக தொடங்கும் பொழுது உனக்கும் உனது பழைய காதலனுக்கும் ஒரு தொலைவு உண்டாகிறது. அந்த தொலைவு மிகவும் உதவிகரமானது. நீ ஒருவருக்கொருவர் காதல் வயப்படுவதற்கு முன் இருந்த அதே தொலைவு வந்தால், மீண்டும் ஒரு தேனிலவு சாத்தியம். அந்த தொலைவு புதிய தேனிலவை அனுமதிக்கும், நீ மீண்டும் ஆர்வம் கொள்வாய், நீ திரும்பவும் வாய்ப்பளிக்க தொடங்குவாய். முழு விஷயத்தையும் திரும்பவும் யோசிப்பாய்.

புதிய ஆணுடன் புதிய பெண்ணுடன் இருக்கும் பொழுது அவர்கள் அவ்வளவோன்றும் வித்தியாசமாக இல்லை என்பதை நீ காண்பாய். எனவே ஏற்கனவே உருவான ஒரு குறிப்பிட்ட நெருக்கத்தை அழிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எந்த காம உறவை விடவும் நெருக்கம் மிகவும் அதிக நிறைவளிக்ககூடியது.

உண்மையிலேயே இருவர் நெருக்கமாக இருந்தால் அவர்கள் பரிபூரண சுதந்திரத்தை அனுமதிப்பர், ஏனெனில் நெருக்கம் அதிகமான அழகுடையது, அதிக முக்கியத்துவமானது – என்பதை அவர்கள் அறிவர். அவர்கள் அதனை அனுபவித்துள்ளனர். எனவே எந்த காம உறவாக இருந்தாலும் அது வெறும் திருப்பம் மட்டுமே அதனால் மட்டுமே எதுவும் தவறாக போய்விடமுடியாது.

ஆனால் திருமணத்தை பற்றிய பழையகருத்து பிடித்து வைத்துகொள்ளும்தன்மை உடையது. தங்களுடைய எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற எளிமையான காரணத்திற்காக எல்லா மதங்களும் கருத்தடை முறைகளுக்கு எதிராக உள்ளன. இது ஒரு அரசியல் விளையாட்டு.
யாரிடம் அதிக எண்ணிக்கை உள்ளது ? கத்தோலிக்கர்களிடமா அல்லது ப்ரோடஸ்டண்ட்களிடமா,
இந்துகளிடமா அல்லது ஜைனர்களிடமா அல்லது முகமதியர்களிடமா? இந்துகள் முகமதியர்கள் அதிகரித்துகொண்டேயிருந்தால், விரைவிலோ அல்லது அப்பறமாகவோ இந்தியா இரண்டு பகுதிகளாக மறுபடியும் பிரிக்கபடவேண்டும் என்ற காரணத்தால் கருத்தடை முறைகளுக்கு எதிராக உள்ளனர். முகமதியர்கள் எண்ணிக்கையில் அதிகமானால் அவர்கள் இது வேண்டும், அது வேண்டும் என கேட்க தொடங்குவர். அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக வளரமுடியும் ஏனெனில் முகமதியர்கள் அவர்களுடைய மதத்தால் நான்கு பெண்கள் வரை மணந்துகொள்ள அனுமதிக்கபட்டுள்ளனர்.

இது இப்படியே போனால், இயற்கையாகவே, அவர்கள் எண்ணிக்கையில் அதிகரித்துவிடுவர் என இந்துகள் பயப்படுகின்றனர். இந்துகள் கருத்தடை முறைகளை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தபட்டால் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்துவிடுவர். முக்கியமாக ஐனநாயகத்தின் காரணமாக முழு அரசியலும் எண்ணிக்கையினாலானது. ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஓட்டு கொண்டுவருகிறான். நீ எவ்வளவு குழந்தைகளை பெற்றிருக்கிறாயோ அவ்வளவு ஓட்டுகளை நீ வைத்திருக்கிறாய். யாரிடம் அதிக ஓட்டுகள் உள்ளனவோ, அவர் தேசத்தை ஆள்வார், உலகத்தை ஆள்வார். எனவே எல்லா மத தலைவர்களும், எல்லா மத அமைப்புகளும், எல்லா மதவாதிகளும் கருத்தடைக்கு எதிராக உள்ளனர்.

ஆனால், உண்மையில், கருத்தடை என்பது முழு மனித வரலாற்றிலேயே மனித இனத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. அது மிகப்பெரிய புரட்சி. கருத்தடை சாதனங்களை கண்டுபிடித்ததை ஒப்பிடும்பொழுது அதைவிட சிறந்த புரட்சி ஏதுமில்லை. ஏனெனில் கருத்தடை சாதனங்களின் வாயிலாக பெண் ஆணுக்கு இணையாக முடியும். கருத்தடை சாதனங்களின் வாயிலாக மட்டுமே ஆண் எப்போதும் தனக்குரியது என கூறிவந்த உரிமைகளை எல்லாம் பெண் பெறமுடியும். இல்லாவிடில் அவள் கிட்டதட்ட எப்போதும் கர்ப்பமாகவே இருந்தாள்.

அவள் தொழிற்சாலையில் வேலை செய்யமுடியாது. அவள் அலுவலகத்தில் வேலை செய்யமுடியாது. அவள் ஒரு மருத்துவராக முடியாது. அவள் ஒரு பேராசிரியராக இருக்கமுடியாது. அதிகபட்சமாக அவள் ஒரு வீட்டிலிருக்கும் மனைவியாக முடியும், அப்படி என்றால் அது வீட்டு–வேலைக்காரி என்று பொருள். அவளுடைய முழு வாழ்க்கையும் குழந்தைகளை பெற்றெடுப்பதற்கே வீணாக போகிறது. அவள் வேறு எதுவும் செய்ய முடியாது – அவள் வரையமுடியாது, அவள் கவிதை எழுத முடியாது, அவள் வாத்தியம் வாசிக்க இயலாது, அவள் நடனமாடமுடியாது. நீ தொடர்ந்து கர்ப்பமாகவே இருந்தால் நீ எவ்வாறு நடனமாடமுடியும்? அது மிகவும் அருவருக்கதக்கது, மிகவும் வயிற்றை குமட்டக்கூடியது.

ஆனால் கடந்த காலத்தில் அவளுடைய முழு வேலையும் ஒரு தொழிற்சாலையைப் போலவே இருந்தது – குழந்தைகளை பெற்றெடுத்துகொண்டே இருக்கவேண்டியது. அது பதினான்கு வயதிற்கு அருகில் தொடங்கி ஆணிற்கு குழந்தை பெற தகுதி உள்ளவரை தொடர்ந்தது. இருபத்து நான்கு குழந்தைகள் என்பது விதிவிலக்கல்ல, பணிரெண்டு குழந்தைகள் என்பது மிகவும் சாதாரணம். ஒரு டஜன் குழந்தைகளையோ அல்லது இரண்டு டஜன் குழந்தைகளையோ பெற்று உலகிற்கு தரும் ஒரு பெண்ணிற்கு வேறு எதற்கும் நேரம் இருக்காது.

அதுதான் பெண்ணின் அடிமைத்தனத்திற்கு மூல காரணம்.அவள் தொடர்ந்து கர்ப்பமாகவும், கர்ப்பத்தினால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்பொழுதும், அவள் ஆணை சார்ந்தே இருந்தாகவேண்டும் – பொருளாதார ரீதியாக ஆணை சார்ந்திருக்கவேண்டும். நீ பொருளாதார ரீதியாக ஒரு ஆணை சார்ந்திருந்தால் நீ சுதந்திரமாக இருக்கமுடியாது. பொருளாதாரம் மிகவும் அடிப்படையான விஷயங்களில் ஒன்று. பணம் ஆணிடமிருந்து வந்தால், பிறகு பணம் நிபந்தனைகளுடனேயே வருகிறது.

ஆணும் பெண்ணும் சமமாக இருக்கும் ஒரு சமுதாயம் நமக்கு தேவை என்றால், பிறகு கருத்தடை சாதனங்கள் எவ்வளவு பரவலாக முடியுமோ அவ்வளவு பரவலாக பயன்படுத்தபட வேண்டும். அவை சாதாரணமாக வேண்டும். பிறகு மட்டுமே திருமணத்திற்கு பிறகு வரும் தொடர்புகள் மிகவும் எளிமையான விஷயமாகும். நீ திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டு பெண் கர்ப்பமுற்றால், அது பெரிய பிரச்சனை என்பதே முழு பிரச்சனையாக இருந்தது. கருத்தடை சாதனங்கள் அந்த பிரச்சனையை முழுவதும் போக்கிவிட்டன. கருத்தடை சாதனங்கள் உபயோகபடுத்தபட்டால் திருமணத்திற்கு முந்தைய உறவுகளை தடுக்கமுடியாது. அவற்றை தடுப்பது சோகமயமானது, ஒரு பெண் கர்ப்பமானால் எல்லா கெளரவத்தையும், மரியாதையையும் இழந்துவிடுவோம் என மிகவும் பயப்பட்டாள். பெண் ஒரு ஆணால் கர்ப்பமானால் அந்த ஆண் அவளை மணந்துகொண்டேயாக வேண்டும் என ஆண் மிகவும் பயப்பட்டான். ஒருவேளை அவன் அதற்கு தயாராகாமல் இருக்கலாம். அது வெறும் நொடி நேர விஷயமாக இருக்கலாம். அது வெறும் ஒரு விளையாட்டாக இருக்கலாம், ஆனால் இப்போது அது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகிவிடும், முழு வாழ்க்கையின் பொறுப்பாகிவிடும்.

கருத்தடை சாதனங்கள் காமத்தின் தன்மையையே மாற்றிவிட்டன, காமம் விளையாட்டாகிவிட்டது. காமம் முன்னால் இருந்ததை போல ஒரு மிக இறுக்கமான விஷயமல்ல. அது வெறும் ஒரு விளையாட்டுதன்மை நிறைந்ததாகிவிட்டது – இரு உடல்கள் ஒருவருக்கொருவர் விளையாடுவது, அவ்வளவுதான். அதில் தவறு ஏதுமில்லை. நீ கால்பந்து விளையாடுகிறாய் – அதில் என்ன தவறு இருக்கிறது?

இரு உடலின் சக்திகள் பங்கேற்கின்றன.

காமமும் கூட ஒரு விளையாட்டுதான், ஆனால் முன்பு அது ஒரு விளையாட்டல்ல. கருத்தடை சாதனங்களுக்கு முன்பு அது ஒரு இறுக்கமான விஷயம். கருத்தடை சாதனங்கள் காமத்தை பற்றிய முழு இறுக்கதன்மையையும் போக்கிவிட்டன. இப்போது மதங்கள் பயப்பட்டாக வேண்டும், ஏனெனில் அவர்களுடைய கட்டமைப்பு கருத்தடை சாதனங்களினால் குலைந்துவிடக்கூடும். நாத்திகர்கள் நூற்றாண்டுகளாக செய்யமுடியாததை, கருத்தடை சாதனங்கள் பத்தாண்டுகளுக்குள் செய்துவிடும். அவை ஏற்கனவே செய்துவிட்டன. கருத்தடை சாதனங்கள் மனிதனை பூசாரிகளிடமிருந்து விடுவித்துவிட்டன.

கருத்தடை சாதனங்கள் ஒரு ஆசீர்வாதம், ஆனால் போப் அதனை ஆதரிக்க இயலாது ஏனெனில் போப்புடையது மட்டுமின்றி மற்ற எல்லா மத தலைவர்களின், சங்கராசாரியார் மற்றும் அயதுல்லா, மற்றும் இமாம் எல்லாருடைய முழு அதிகாரமும் ஆபத்தில் உள்ளது. அவர்கள் அனைவரும் கருத்தடை சாதனங்களுக்கு எதிராகத்தான் இருப்பார்கள், அவர்களுடைய முழு வியாபாரமும் ஆபத்தில் உள்ளது.

நான் கருத்தடை சாதனங்களை முழுமையாக ஆதரிக்கிறேன், அவை பரவலாக உபயோகபடுத்தபடவேண்டும். குழந்தைகள் பெற்றோர்களாலும், பள்ளிகளாலும், கருத்தடை சாதனங்களை எப்படி உபயோகபடுத்துவதென சொல்லிகொடுக்கபட வேண்டும், அப்போது காமம் வெறும் விளையாட்டாகிவிடும். அதன் இறுக்கம் அனைத்தையும் அது இழந்துவிடும். பிறகு மட்டுமே பெண் விடுதலையடைய முடியும். கருத்தடை சாதனங்கள் இன்றி பெண் அடிமையாகத் தான் இருந்தாக வேண்டும், பாதி மனித இனம், அடிமைத்தனத்தில் வாழ்வது பார்ப்பதற்கு நல்ல காட்சி அல்ல. மதங்கள் கரு கலைப்புக்கு எதிராக உள்ளன. ஏன் இந்த மக்கள் கரு கலைப்புக்கு எதிராக உள்ளனர் ? ஒரு பக்கம் அவர்கள் ஆத்மாவின் அழிவற்ற தன்மை குறித்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். பிறகு ஏன் கருக்கலைப்பை கண்டு பயப்படவேண்டும்?– ஆத்மா அழிவற்றது எனவே அதில் எந்த பாவமும் இல்லை. கருக்கலைப்பு மூலம் நீ செய்ததெல்லாம் ஆத்மா இந்த உடலுக்குள் நுழைவதை தடுத்தது மட்டுமே. ஆத்மா மற்றொரு உடலை கண்டுபிடித்துகொள்ளும், இந்த பூமியில் இல்லாவிட்டால், பிறகு வேறு ஏதாவது பூமியில், ஏனெனில் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் கிரகங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள் -- குறைந்தபட்சம். வாழ்க்கை உள்ள கிரகங்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை இது. ஒருவேளை அதிகமாக இருக்கலாம், ஆனால் ஐம்பதாயிரம் என்பது கிட்டதட்ட உறுதியான ஒன்று. எனவே இந்த கிரகத்தில் இல்லாவிட்டால் பிறகு வேறு ஏதாவது கிரகத்தில்....மக்களை மாற்றுவது நல்லது....அதில் தவறு என்ன இருக்கிறது ? இந்த கிரகத்தில் கூட்டம் அதிகமானால், ஒரு சில மக்களை மற்ற கிரகங்களுக்கு மாற்றுவது......அதுதான் கருக்கலைப்பு. ஆத்மா நான் உள்ளே வரலாமா மேடம் என கேட்கிறது நீ இல்லை இங்கே அதிக கூட்டமாக உள்ளது. வேறு ஏதாவது கதவை தட்டு என கூறுகிறாய்.

இந்துகள் இப்போது கிருஷ்ணரையும் அவருடைய ஸ்ரீமத் பகவத் கீதையையும் வழிபடுகின்றனர். அவர் ஸ்ரீமத் பகவத் கீதையில் நீ உடலை வெட்டினால் கூட ஆத்மா வெட்டபடுவதில்லை எனவும், நீ உடலை எரித்தால் கூட ஆத்மா எரிவதில்லை எனவும் கூறுகிறார்.....உடலை அழித்தால் கூட எதுவும் அழிவதில்லை— நீ அதனை வாளால் வெட்டமுடியாது......நீ அதனை தீயால் எரிக்கவும் முடியாது. இந்துகள் கருக்கலைப்புக்கு எதிராக உள்ளனர்- ஏன்?-- ஏனெனில் நீ ஒரு உயிரைக் கொல்கிறாய். எதுவும் கொல்லப் படவில்லை. எதுவும் கொல்லப்படமுடியாது. அங்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன, ஒன்று ஆத்மா அழிவற்றது, பிறகு எதுவும் கொல்லப்படவில்லை. அல்லது ஆத்மா அழிவுறகூடியது, பிறகும் எதுவும் கொல்லபடவில்லை. இவை இரண்டு மட்டுமே வாய்ப்புகள். நீ ஆத்மா அழிவற்றது என்பதை நம்பினால், பிறகு எதுவும் கொல்லப்படவில்லை, ஏனெனில் எதுவும் கொல்லப்படமுடியாது – அல்லது நீ ஆத்மா இல்லை என நம்பினால், பிறகு கொல்வதற்கு எதுவும் இல்லை. உண்மையில் அங்கு எந்த ஆத்மாவும் இல்லை, உடல் மட்டுமே உள்ளது.
இந்த கிரகத்தில் எத்தனை மக்கள் ஆனந்தமாக வாழமுடியும் என நாம் முடிவெடுத்தாகவேண்டும். ஆனால் அதன் பின்னால் ஒரு மறைக்கபட்ட திட்டமும் உள்ளது. மத பூசாரிகள், போப் மற்றும் மற்றவர்கள், மக்கள் ஆனந்தமாக, மகிழ்ச்சியோடு, பரவசமாக வாழ தொடங்கினால் அவர்களுடைய சொர்க்கலோகத்தை பற்றி யார் அக்கறைபடுவார்கள் என்ற எளிமையான காரணத்தால் மனிதன் ஆனந்தமாக வாழ்வதை விரும்பமாட்டார்கள். மக்கள் மிகவும் துன்பகரமான நிலையில் வாழவேண்டும், பிறகு மட்டுமே அவர்கள் பார் இந்த வாழ்க்கை துன்பமயமானது. அடுத்த வாழ்வை தேடு. கடந்த வாழ்வை தேடு. இந்த வாழ்க்கை நரகம், எனவே இந்த வாழ்க்கையை வாழ்வதில் உனது நேரத்தை வீணடிக்காதே. மற்றொரு வாழ்வை, தெய்வீக வாழ்வை கண்டறிய உனது நேரத்தை பயன்படுத்து என அவர்கள் கற்று தர இயலும்.

உலகம் துன்பத்தில் இருந்தால் அது அவர்களுக்கு வசதியாக இருக்கும். மனோரீதியாக உன்னை துன்பத்தில் வைத்திருப்பதை அவர்கள் சமாளித்துவிட்டனர். உலகரீதியாக உன்னை துன்பத்திலேயே வைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். உடல்ரீதியாகவும்...... சாத்தியமாகும் அனைத்து வழிகளிலும் நீ மிகவும் துன்பத்தில் இருக்கும்படி செய்யும்போது அவர்களிடம் அறிவுரை கேட்க நீ சென்றாக வேண்டும். நீ அவர்களை நிமிர்ந்து பார்க்கும்போது அவர்கள் உன்னை காப்பாற்றுபவர்களாக உனக்கு தெரிய வேண்டும்.

என்னுடைய முழு பார்வையும் மாறுபட்டது.

இப்போது இங்கே வாழ்வதன் மூலம், இந்த கிரகத்தில் எந்த துன்பமும் இல்லை, அன்பு பொங்கி வழிகிறது, மக்கள் மலர்ந்து கொண்டிருக்கிறார்கள், மக்கள் தாமரைகளாக இருக்கின்றனர், என்னும் நிலையைக் கொண்டு வாருங்கள். பெருமையுடன் வழங்குவது உங்கள் ஜெய்தீப்..9790113638

பெண்களை நேசியுங்கள்.

இந்த உலகில் நீ பார்க்கும் பெண் உண்மையான பெண் அல்ல.அவள் நூற்றாண்டு காலமாக கறை படுத்தப் பட்டு வருபவள். பெண் கறை படிந்தவளாக இருக்கும் போது ஆண் மட்டும் இயற்கையானவனாக இருக்க முடியாது.ஆணுக்குப் பிறப்பளிப்பவளே அந்தப் பெண்தானே. அவள் இயல்பாக இல்லையெனில் அவள் குழந்தைகளும், அது ஆணோ, பெண்ணோ – அந்த குழந்தைகளும் இயல்பாக இருக்காது.

பெண்களுக்கு விடுதலை மிக மிகத் தேவை. ஆனால் விடுதலை என்ற பெயரால் நடந்துக் கொண்டிருப்பவை வெறும் முட்டாள்தனமானவையே.அது வெறும் காப்பியடித்தல், வேஷமிட்டுக் கொள்ளல், விடுதலை அல்ல.

உண்மையான விடுதலையென்பது பெண்களை மிகச் சரியான ஒரு பெண்ணாய்தான் மாற்றும். ஆணின் நகலாக அல்ல. ஆனால் இப்போது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.பெண்கள் ஆண்கள் போல ஆக விரும்புகின்ற்னர். ஆண் சிகரெட் குடித்தால் பெண்ணும் சிகரெட் பிடிக்க வேண்டும். ஆண் ஒரு விஷயத்தைச் செய்தால் பெண்ணும் அதைச் செய்தாக வேண்டுமென்கிறாள். பெண் இரண்டாம் தர ஆணாக மாறிக் கொண்டிருக்கிறாள்.

பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் நிஜமாகவே ஆண் ஆக சுதந்திரம் என்றும் கிடைக்காது. பெண்ணின் சுதந்திரம் ஆணின் சுதந்திரத்திற்கு மிக அவசியம்.அடிமைப் படுத்தப் பட்ட ஒரு பெண் வெகு நிச்சயம் ஆணையும் அடிமையாக்க முயலுவாள்.அவள் வழி நுட்பமானது. மிக மிக நுட்பமான வழிகளில் அவள் ஆணை அடிமைப் படுத்த முயலுவாள்.

அவள் உன்னுடன் நேராக மோத முயல மாட்டாள். அவள் சண்டை மறைமுகமானது. அவள் அழுவாள். கதறுவாள். அவள் உன்னை அடிக்க மாட்டாள். தன்னைத் தானே அடித்துக் கொள்வாள். மனைவி தன்னைத் தானே அடித்துக் கொள்வதன் மூலம், அழுது கதறுவதன் மூலம், மிகப் பலமான ஆண் கூட அவளுக்கு அடிமையாவான். பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவள் அதை ஆணுக்கும் தர முடியும்.

கடந்த காலத்தில் ஆண் பெண்களை மிகவும் புனிதமானவர்கள், தேவதைகள் என்று நம்ப வைத்தான். ஆண் தூய்மையற்றவன். பையன்கள் பொறுக்கிகள். ஆனால் பெண்? அவள் தெய்வீகமானவள். ஆண் பெண்ணை உயரமான பீடத்தில் ஏற்றி வைத்தான். பெண்ணை அடக்கி வைக்க அவனது தந்திரம் அது.

ஆண் அவளை வணங்கினான். அப்படி வணங்குவதன் மூலம் அவளை அடக்கி வைத்தான்.ஆம். அப்படி இயல்பாக பீடத்தின் மேல் அமர்த்தப்பட்ட பெண் தன்னை தெய்வீகமாய் நினைத்துக் கொண்டாள். அதனாலேயே ஆண்கள் செய்தவற்றையெல்லாம் அவளால் செய்ய முடிய வில்லை.

அவளது ஈகோவை, ஆணவத்தை மீறி அவளால் எதுவும் செய்ய முடிய வில்லை. அந்த உயர்ந்த பீடம் அவளது ஈகோவிற்கு மிகவும் திருப்தியளித்தது. அவள் ஒரு தாய். அவள் ஒரு தெய்வம். ஆணை விட அதிக தெய்வத்தன்மை உடையவள்.

அதனாலேயே ஆண் காலம் காலமாய் அவனது வழியிலேயே இருந்து வருகிறான். பெண் மட்டும் எப்போதும் புனிதத் தன்மையுடையவளாய் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கப் பட்டு வருகிறாள். பெண் சராசரியாக இருக்க என்றுமே அனுமதிக்கப் பட்டதில்லை. சராசரி பெண்கள் மோசமானவர்கள் என்ற கற்பிதத்தை இந்த சமூகத்தில் ஆண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படைகளில் ஒன்று இது: நீ யாரையாவது அடிமைப் படுத்தினால் நீயும் கடைசியில்,முடிவான அடிமைதான் ஆவாய், சுதந்திரமாக இருக்க முடியாது. நீ சுதந்திரமாக இருக்க விரும்பினால், மற்றவர்களுக்கும் விடுதலையைக் கொடு.

மார்க்ஸ் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்த்தார். ஏழைகள் பணக்காரர்கள் என்று. நான் இந்த சமுதாயத்தை இரண்டு இனமாகப் பார்க்கிறேன். ஆண்கள். பெண்கள்.

ஆண் பல நூற்றாண்டுகளாய் எஜமானனாய் இருக்கிறான். பெண் அடிமையாய் இருக்கிறாள். அவளை ஏலம் போட்டார்கள். விற்றார்கள். உயிருடன் எரித்தார்கள். எந்த ஒரு காரணத்தின் பொருட்டாவது அவளை கற்பழிக்க முனைந்தார்கள்.

பெண்களுக்கு போர்களில் ஈடுபாடு கிடையாது. பெண்களுக்கு அணுகுண்டு ஆயுதங்களில் ஈடுபாடு கிடையாது. அவர்களுக்கு கம்யூனிசத்திலும், முதலாளித்துவத்திலும் ஈடுபாடு கிடையாது.

இந்த எல்லா இசமும் தலையிலிருந்து வந்தவை. பெண்கள் வாழ்வை அனுபவிப்பதில், வாழ்வின் சின்ன சின்ன அழகான விஷயங்களை ரசிப்பதில், தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் ரசனையுடன் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

ஆண்களே உங்களது வாழ்க்கை சொர்க்கமாய் அமைய வேண்டுமா? பெண்களை நேசியுங்கள்.
*ஓஷோ.