திங்கள், 5 ஏப்ரல், 2010

நிறுத்து

எப்போது குறைந்தபட்சம் ஒருநாளில் 6 தடவை. அதிக பட்சம் எவ்வளவு வேண்டுமானாலும். ஆனால் திடீரெனத்தான் செய்யப்பட வேண்டும்.

தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, எதையாவது செய்து கொண்டிருக்கும் போது, திடீரென சுய உணர்வு வரும்போது, நிறுத்து – முழுமையாக நிறுத்து, அசைவுகள் இன்றி இரு. என்ன நிகழ்கிறது என்ற உணர்வோடு இரு. பின் நகர ஆரம்பி.

திடீரென நீ தன்னிலை அடையும்போது, சக்தி முழுமையாக மாற்றமடைகிறது. மனதில் ஓடிக் கொண்டிருப்பது நின்று விடும். அவ்வளவு விரைவாக மனதால் உடனே வேறொரு சிந்தனையை உருவாக்க முடியாது. அதற்கு சிறிது நேரம் பிடிக்கும், மனம் முட்டாள் தனமானது, அதற்கு உடனே செயல்பட தெரியாது. அதனால் நீ திடீரென செய்யும்போது........ அந்த நிறுத்து எனும்போது மனம் நிற்கிறது, ஒரு வினாடி எல்லாமும் தெளிவாகிறது. எல்லா எண்ணங்களும் மறைந்து விடும் – அங்கே வெறுமை. அந்த வெறுமையில் ஒரு தெளிவு. நிறுத்தும்போது அதை அதிக நேரம் செய்யாதே. ஏனெனில் அரை நிமிடத்தில் மனம் திரும்ப உயிர் பெற்று அந்த தெளிவை அழித்து விடும்.

நீ இருக்கிறாயா


எப்போது எப்போதெல்லாம் தூக்கத்தை உணர்கிறாயோ அப்போது,
முதல் படி உன்னையே கேட்டுக் கொள்
நீ இங்கிருக்கிறாயா என உன்னையே நீ கேட்டுக்கொள். திடீரென உன் எண்ணங்கள் நிற்கும்.
இரண்டாவது படி நீயே பதில் கூறு
ஆம் என பதில் கூறு. இது உன்னை கவனத்திற்குள் கொண்டுவரும். எண்ணங்கள் நின்றுவிடும்போது நீ கவனமடைவாய். இந்த கணத்தில் இருப்பாய்.
மூன்றாம் படி தூங்கப் போகும் போது கூட........
தூக்கத்தில் விழப் போகும்போது கூட திடீரென நீ இருக்கிறாயா என கேள். பதிலும் கூறு.
இருளில் நீ விழிப்புணர்வு ஜோதியாக மாறுவாய்.

மேலும் இது உன்னுடைய சொந்த இருப்பை நினைவு கொள்வதாகும். ஒவ்வொரு நாளும் காலையில் உனது வாழ்வில் சூரியன் உதிப்பதை, மலர்கள் மலர்வதை பார்க்க கிடைத்ததற்காக நன்றி கூறி, மதிப்பு தருவதாகும். தியான தன்மையுள்ள, மனதிலிருந்து செயல்படாத ஒரு மனிதன் வாழ்க்கை அவனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நன்றியோடு இருப்பான். நீ அதற்கு தகுதியானவனல்ல. யாருக்குமே தகுதியில்லை. ஆனாலும் காரணமேயின்றி வாழ்க்கை பரிசளிக்கிறது. உன்னுடைய வாழ்க்கையை மேலும் ஒரே ஒரு வினாடி கூட அதிகமாக கேட்க முடியாது. நான் தகுதியானவன், எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் சில வருடங்கள் எனக்குத் தாருங்கள் என கேட்க முடியாது. யாருக்கும் உரிமையில்லை. ஆனால் வாழ்க்கை அதனுடைய அளப்பரிய தன்மையினால் உன்மேல் வாழ்வைச் சொரிகிறது.

வாழ்வின் ஏமாற்றம்

ஒருவர் சக்ரவர்த்தி ஆவது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழக்கூடும் என்றும் அவர் ஒரு தனிப்பிறவி என்றும் அதனால் சக்ரவர்த்தியான ஒருவர் இறந்தால் அவருக்கு சொர்க்கத்தில் தனிப்பட்ட மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு.

ஜைன மத நூல்களில் சொர்க்கத்தில் இமயமலையை போன்ற ஒரு மலை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இமயமலை பாறைகளாலும் மண்ணாலும் பனியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் உள்ள அந்த மலைக்கு பெயர் சுமிரு. சுமிரு என்றால் மிக உயர்ந்த மலை எனப் பொருள். அதை விட சிறந்த, அதை விட அழகானது வேறில்லை என்பது அதன் அர்த்தம். அது தங்கத்தால் உருவானது. அதில் பாறைகளுக்கு பதிலாக வைரங்களும் பவளங்களும் மரகதங்களும் உள்ளன. சக்ரவர்த்தி ஒருவர் இறந்தால் அவரது பெயர் அந்த மலை மீது பொறிக்கப்படும்.

அப்படி ஒரு சக்ரவர்த்தி இறந்த சமயம் அவரது பெயரை சுமிரு மலை மீது பொறிப்பதற்காக அவரை கூட்டிப் போனார்கள். அது ஒரு அரிதான தருணம். அது ஆயிரம் வருடங்களில் ஒருமுறையே நிகழும். இந்த மன்னன் தன் பெயரை சுமிரு மலை மீது தான் பொறிக்கப்போவதை எண்ணி மிகவும் மனக்கிளர்ச்சியடைந்தான். இதுவரை இருந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவனாகப் போவதோடு, வரப்போகிற சிறந்தவர்களுக்கும் ஒரு பாடமாக, வழிகாட்டியாக இருக்கப்போகிறான். அந்த சக்ரவர்த்தி அசாதாரணமானவர்களில் ஒருவனாகப் போகிறான்.

அந்த வாயில் காவலன் மலைமீது அவரது பெயரை பொறிப்பதற்க்கு தேவையான கருவிகளை கொடுத்தான். சக்ரவர்த்தி தன்னுடன் இன்னும் சிலரை கூட்டிச் செல்ல விரும்பினான். சக்ரவர்த்தியின் வாழ்நாள் பூராவும் அவருடன் இருந்து அவரது வெற்றிக்கு துணை நின்ற அவரது மனைவி, அமைச்சர், தளபதி ஆகியோர் சக்ரவர்த்தி இறந்தபோது அவரின்றி வாழ முடியாது என தற்கொலை செய்துகொண்டு அவருடன் கூடவே உயிர் விட்டு அவருடன் இப்போது சொர்க்கத்துக்கு வந்துள்ளனர். அவர்களையும் கூட்டிச் செல்ல அனுமதிக்குமாறு வாயில் காப்போனைக் கேட்டார். ஏனெனில் தன்னந்தனியே போய் தன் பெயரை பதித்துவிட்டு வருவதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது—அங்கு அதைப்பார்க்க யாருமே இல்லாவிடில் மகிழ்ச்சி எப்படி வரும்—ஏனெனில் இந்த முழு உலகமும் பார்ப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது.

வாயில் காவலன், என்னுடைய பேச்சை தயவு செய்து கேளுங்கள். இது என்னுடைய பரம்பரை தொழில். என்னுடைய அப்பா, தாத்தா, அவருடைய அப்பா என நாங்கள் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக இந்த சுமிரு மலையின் வாயில் காப்பவர்கள். அதனால் என் பேச்சைக் கேளுங்கள். இவர்கள் யாரையும் உங்களுடன் கூட்டிச் செல்லாதீர்கள். இல்லையெனில் வருத்தப்படுவீர்கள். என்றான்.
சக்ரவர்த்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் அவனது பேச்சைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைத் தடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்...

வாயில் காப்போன், நீங்கள் இவர்களை இப்போதேக் கூட்டிச் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர்களைக் கூட்டிச் சென்று விட்டு பின் அங்குள்ள நிலையை பார்த்துவிட்டு ஒருக்கால் காண்பிக்க வேண்டாம் என முடிவெடுத்தால் அப்போது அதை செயல்படுத்த வழியும் இருக்காது, வாய்ப்பும் இருக்காது. அவர்கள் உங்களுடன்தான் இருப்பார்கள். எனவே இப்போது நீங்கள் தனியே சென்று உங்கள் பெயரை பொறித்துவிட்டு வாருங்கள். பின் இவர்கள் பார்க்கத்தான் வேண்டும் என விரும்பினால் திரும்பி வந்து இவர்களை கூட்டிச் செல்லுங்கள். என்றான்.
இது மிகச் சரியான யோசனையாகத் தோன்றியதால் சக்ரவர்த்தி, மற்றவர்களிடம், நான் தனியாகப் போய் எனது பெயரை பொறித்துவிட்டு திரும்ப வந்து உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன். என்றார்.

வாயில் காப்போன், இதுதான் மிகச் சரியானது என்றான்.

சக்ரவர்த்தி சென்று ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு அடியில் தகதகத்துக் கொண்டிருந்த சுமிரு மலையைக் கண்டார். – ஏனெனில் சொர்க்கத்தில் ஒரே ஒரு சூரியனோடு ஏழை போன்று இருக்க முடியாது – ஆயிரக்கணக்கான சூரியன்கள், இமயமலையைவிட பெரிதான தங்க மலை. இமயமலையே இரண்டாயிரம் மைல் நீளம் உடையது. சக்ரவர்த்தியால் கண்களை திறக்கவே முடியவில்லை. அவ்வளவு தகதகப்பு – பின் மெதுவாக கண்களை பழக்கப்படுத்திக்கொண்டு தனது பெயரை பொறிக்க சரியான ஒரு இடத்தைத் தேடினார். ஆனால் அவர் மிகவும் வியப்படைந்தார். அங்கு இடமே இல்லை. மலை முழுவதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை.

முதல் தடவையாக அவர் தான் யாரென்று உணர்ந்தார். இதுவரை ஆயிரம் வருடங்களில் ஒருமுறை மட்டுமே உருவாகக் கூடிய சிறப்பான மனிதனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் முடிவற்றது. அதில் ஆயிரம் வருடங்கள் என்பது எந்தப்பெரிய மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. அது ஒரு பொருட்டே அல்ல. அதனால் ஏகப்பட்ட சக்ரவர்த்திகள் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய மலையில் இவருடைய சிறிய பெயரை எழுத இடமே இல்லை.

அவர் திரும்பி வந்தார். உன்னுடைய மனைவி, அமைச்சர்கள், தளபதி மற்றும் நெருங்கிய நண்பர்கள் என யாரையும் உன்னுடன் கூட்டிச் செல்ல வேண்டாம் என காவலாளி தடுத்தது ஏன் என இப்போது புரிந்தது. அவர்கள் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தது நல்லது. தங்களது சக்ரவர்த்தி ஒரு அரிய பிறவி என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும்.

அவர் காவலாளியை உள்ளே தனியே அழைத்து, அங்கே இடமே இல்லை என்பதைக் கூறினார்.

காவலாளி, இதைத்தான் நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் சில பெயர்களை அழித்துவிட்டு உங்களது பெயரை எழுதிவிட்டு வாருங்கள். அப்படித்தான் செய்திருக்கிறார்கள். என் வாழ்வில் பலர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் இப்படி நடந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். எனது தாத்தா ஏன் எனது பரம்பரையில் யாருமே சுமிரு மலை காலியாக இருந்தோ, சிறிதளவு இடம் இருந்தோ பார்த்ததில்லை.

எப்போதுமே ஒரு சக்ரவர்த்தி வந்தால் அவர் சில பெயர்களை அழித்துவிட்டு தனது பெயரை எழுதுவார். இதுவரை இருந்த எல்லா சக்ரவர்த்திகளின் பெயரும் இதனுள் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. பலமுறை அழிக்கப்பட்டு பலமுறை பொறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பெயரை எழுதிவிட்டு பின் உங்களது நண்பர்களிடம் காட்ட விரும்பினால் அவர்களை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். என்றான்.

சக்ரவர்த்தி, இல்லை, நான் அவர்களிடம் காட்டவும் விரும்பவில்லை, என்னுடைய பெயரை நான் எழுதவும் போவதில்லை. அதனால் என்ன பயன் – ஒருநாள் யாராவது ஒருவர் வந்து அதை அழிக்கப் போகிறார். என்னுடைய முழு வாழ்வும் இப்போது பொருளற்றதாகி விட்டது. சொர்க்கத்தில் உள்ள சுமிரு மலையில் எனது பெயர் பொறிக்கப் படும் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதற்காகவே நான் வாழ்ந்தேன். இதற்காகவே நான் எனது வாழ்க்கை முழுவதையும் பணயம் வைத்தேன். இதற்காகவே நான் இந்த உலகம் முழுவதையும் கொல்லத் தயாராக இருந்தேன். ஆனால் இப்போது வேறு யார் வேண்டுமானாலும் வந்து எனது பெயரை அழித்துவிட்டு தங்களது பெயரை எழுதக்கூடும் எனும்போது அதில் எழுதுவதில் என்ன பொருளிருக்கிறது--- நான் அதில் எழுதப் போவதில்லை. என்றார்.

காவலாளி சிரித்தான். சக்ரவர்த்தி, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டார்.

காவலாளி, ஆச்சரியமாயிருக்கிறது. ஏனெனில் சக்ரவர்த்திகள் வந்து, இதைப் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, தங்கள் பெயரை எழுதாமல் திரும்பி போன கதையையும் நான் எனது தாத்தாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, ஒரு சிறிதளவாவது புத்திசாலித்தனம் உள்ள யாரும் இதையேதான் செய்வர். என்றான்.

உள் நோக்கி திரும்புதல்

சாதாரணமாக சக்தி உன்னிடமிருந்து போகிறது – பொருட்களை நோக்கி, லட்சியங்களை நோக்கி போகிறது. சக்தி உன்னிடமிருந்து வெளியேறுவதால் நீ வெற்றிடமாக உணர்கிறாய். வெளியேறும் சக்தி திரும்ப வருவதேயில்லை. நீ சக்தியை வெளியே வீசிக் கொண்டேயிருக்கிறாய். மெதுமெதுவாக நீ முடமானவனாக, விரக்தியாக உணர்கிறாய். எதுவும் திரும்பி வருவதில்லை. மெதுமெதுவாக நீ வெறுமையாக உணர ஆரம்பிக்கிறாய். சக்தி ஒவ்வொரு நாளும் வழிந்தோடுகிறது. – பின் மரணம் வருகிறது. மரணம் என்பது உன்னிடமிருந்து சக்தி தீர்ந்து போய் விட்டது என்பதால் வருவது.

இதை புரிந்து கொண்டு சக்தியை உள்நோக்கி திருப்புவதுதான் வாழ்வின் மிகச் சிறந்த அற்புதம். அது உள்நோக்கி திரும்புதல். அது நீ இந்த உலகை விட்டு நீங்கி விடுவது என்பது கிடையாது. நீ இந்த உலகில்தான் வாழ்கிறாய். எதையும் விட்டுவிடவோ எங்கேயும் போகவேண்டியதோ அவசியமில்லை. நீ இந்த உலகில்தான் வாழ்கிறாய், ஆனால் முற்றிலும் வேறுபட்ட விதத்தில். நீ இந்த உலகில்தான் வாழ்கிறாய், ஆனால் நீ உன்னில் மையம் கொண்டிருக்கிறாய். உனது சக்தி உன்னிடமே திரும்புகிறது.

நீ வெளியேறுபவன் அல்ல. நீ உள் செல்பவன். நீ சக்தி சேகரமாக, சக்தி தேங்கியிருக்கும் இடமாக ஆகிவிடுவாய். சக்தி ஒளி விடுகிறது. சக்தி அங்கிருக்கிறது, வழிந்தோடுகிறது, நீ ஒளி விடுகிறாய். உன்னால் பகிர்ந்து கொள்ள முடியும், நீ அன்பாய் கொடுக்க முடியும். அதுதான் வித்தியாசம். நீ உன் சக்தியை பொறாமையில் செலுத்தினால், அது திரும்பி வராது. நீ உனது சக்தியை அன்பில் செலுத்தினால் அது ஆயிரம் மடங்காக திரும்ப வரும். நீ உனது சக்தியை கோபத்திற்கு கொடுத்தால் அது திரும்ப வராது. அது உன்னை காலியாக, வெறுமையாக ஆக்கி விடும். நீ உனது சக்தியை கருணைக்கு கொடுத்தால் அது ஆயிரம் மடங்காக திரும்ப வரும்.

எங்கே போனாலும், என்ன செய்தாலும் விழிப்புணர்வு என்ற உள் வெளிச்சத்தில் செய்.
இதுதான் தியானம் – அதிக கவனமாக இருப்பது. அதே வாழ்வை வாழ். உனது கவனத்தை மட்டும் மாற்றிக்கொள். அதை இன்னும் அதிக ஆழமானதாக செய். அதே உணவை சாப்பிடு, அதே பாதையில் நட, அதே வீட்டில் வாழு, அதே பெண்ணோடு, குழந்தைகளோடு இரு, ஆனால் உள்ளே முற்றிலும் வேறுவிதமாக இரு. கவனமாக இரு. அதே பாதையில் நட, ஆனால் விழிப்புணர்வோடு நட. நீ விழிப்படைந்துவிட்டால், திடீரென அந்த பாதை பழைய பாதையாக இருக்காது. ஏனெனில் நீ பழைய ஆளல்ல. நீ விழிப்படைந்துவிட்டால் அதே உணவு அதே போன்று இருக்காது. ஏனெனில் நீ அதே ஆளல்ல. உன் மனைவி அதே போன்று இருக்கமாட்டாள், ஏனெனில் நீ அதே ஆளல்ல. உனது உள் மாறுதலோடு எல்லாமும் மாறிவிடும்.

ஒருவர் உள்ளே மாறிவிட்டால் வெளியே சகலமும் மாறிவிடும். நீ ஆழ்ந்த இருளில் இருந்தால் உலகமும் இருளாக இருக்கும். நீ உனது உள் விளக்கை ஏற்றினால் திடீரென இந்த உலகம் மறைந்து விடும், அங்கு தெய்வீகம் மட்டுமே இருக்கும். இந்த முழு விஷயமும் நீ விழிப்புணர்வுடன் இருக்கிறாயா இல்லையா என்பதை பொறுத்தே அமைகிறது. இது ஒன்றுதான் மாற வேண்டியது, இதுதான் நிலை மாற்றம் அடைய வேண்டிய ஒன்று, புரட்சி என்ற ஒன்று.

ஓஷோவின் குட்டிக் கதைகள்

ஒரு பெரிய தொழில் அதிபரின் மனைவி இறந்து வ்ட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது. நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவைகளும் வந்து துக்கம் கொன்ண்டாடினர்.
அவ்ர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விடக் கவலை கொன்ண்டவனாகக் காணப்பட்டான். சடங்குகள் முடியுமுன் தன்னை கட்டுப்படுத்தமுடியாமல் தேம்பி அழ் ஆரம்பித்து விட்டான்.

மனவியை இழந்தவர் கேட்டார் :
" தேம்பி தேம்பி அழும் அந்த புதியவன் யார் ?"

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் சொன்னார் :" தெரியாதா உஙகளுக்கு ? இறந்து போன உஙகள் மனைவியின் காதலன் அவன் ! "
மனைவியை இழந்தவர் அவனிடம் சென்றார். அவனது தேள்களைத் தட்டிகொடுத்தார். பிறகு கூறினார் :
"கவலைப்படாதே! உற்சாகமாக இரு. ஒருவேலை நான் மறுமணம் செய்து கொள்ளக்கூடும்."

மனிதன் கனவிலேயே வாழ்கின்றான்

ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.

முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.

“ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்

அந்த நாள் நசுருதீனின் பொழுது மன ஆமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பைடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.

நேரம் போய் கொண்டே இருந்தது.

அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.

இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.

அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது

ஓஷோ : மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் , இந்த கனத்தில் வாழ்வதில்லை

இந்த நூற்றாண்டின் இணையற்ற குரு..

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
”நீங்கள் உங்களுக்கு உள்ளே உள்ள பாத்திரத்திற்கும் அதில் நிரம்பிய விஷயத்திற்கும், எப்பொழுது வித்தியாசம் காண முடிகிறதோ , அப்பொழுதே உங்களுக்கு ஞானம் கிட்டும்”

புத்தர் கதை.

போதிவனத்தில் தியானத்திலிருந்த புத்தரைத் தரிசிப்பதற்காக நடுத்தர வயதுடைய ஒருவன் காத்திருந்தான்.

புத்தர் தியானம் கலைந்து கண் விழித்தார்.

புத்தரை வீழ்ந்து வணங்கினான். புத்தர் அவனிடம் " நீ யார் ? " என்று வினவினார்.

அவன் " என் பெயர் அபிநந்தன் " என்றான்.

புத்தர், " உனக்கு என்ன வேண்டும் ? " என்று கேட்டார்.

அபிநந்தன், " பெருமானே, நான் ஒரு ஏழை. எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் உலகப் பற்றிலும், உலக வாழ்க்கையிலும் உழன்று ஏராளமான துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து விட்டேன். என்னை சந்நியாசியாக்கிப் பந்த பாசங்களிலிருந்து விடுவித்து ஞானம் அருளுங்கள். " என்றான்.

புத்தர் சிறிது யோசித்து அவனிடம், " அபிநந்தா இந்த மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. காரணம் என்ன தெரியுமா? காற்று இலைகள் மீது மோதுவதால் மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. மனித மனங்கள் இந்த இலைகளைப் போன்றவை. மனித மனங்கள் மீது உலகப் பற்று என்கிற காற்று வந்து மோதுகிறது. அதனால் மனங்கள் ஆடுகின்றன. அலைபாய்கின்றன. முதலில் உன் மனத்திலுள்ள பந்த பாசங்கள் அனைத்தையும் உன்னால் நீக்கிவிட முடியுமா? " என்று கேட்டார்.

அபிநந்தன், " புத்த பெருமானே , என்னால் பந்த பாசங்களைத் துறந்து விட முடியும் " என்றான்.

" சரி அப்படியானால் நீ இன்று முதல் போதி வனத்திலேயே தங்கலாம். " என்றார் புத்தர்.

சில நாட்கள் கடந்தன.

ஒரு நாள் புத்தர் அருகிலுள்ள குளத்திற்கு நீராடுவதற்காகச் சென்றார். அப்போது அவர் ஒரு மரத்தின் கீழ் , அபிநந்தன் பக்கத்தில் ஒரு நாய்க் குட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

புத்தர் அவனிடம், " அபிநந்தா, இது ஏது? " என வினவினார்.

அபிநந்தன், " பெருமானே, இது என் நாய்க்குட்டி. இது என்னை விட்டு அகல விரும்புவதே இல்லை. எப்போதும் என்னுடனேயே இருக்க விரும்புகிறது. ஆதலால் இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்." என்று கூறி இழுத்தான்.

புத்தர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.

மேலும் சில நாட்கள் கடந்தன. புத்தர் முன்பு போலவே நீராடச் சென்று கொண்டிருந்தார்.

இப்போதும் அபிநந்தன் அதே மரத்தடியில் நின்றிருந்தான். அவன் அருகில் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.

புத்தர் " அபிநந்தா, இந்தச் சிறுவன் யார் ? " எனக் கேட்டார்.

அபிநந்தன், " ஐயனே, இவன் என் மகன். இவன் இந்த நாய்க் குட்டியுடன் எப்போதும் இருக்க விரும்புகிறான். இவனால் இந்த நாய்க்குட்டியை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவனையும்..." என்றான்.

புத்தர் மீண்டும் சிரித்தவாறு அங்கிருந்து சென்றார்.

மேலும் சில நாட்கள் கடந்தன. அன்றைய தினம் புத்தர் நீராடக் குளத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

குளத்தின் கரையிலிருந்த அதே மரத்தடியில் முன்பு போலவே அபிநந்தன் நின்று கொண்டிருந்தான். அவனருகில் நாய்க்குட்டி, சிறுவன் ஆகியவர்களுடன் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தாள்.

புத்தர்," அபிநந்தா, யார் இந்தப் பெண் ? " என்றார்.

" பெருமானே, இவள் என் மனைவி. இவளால் இந்தச் சிறுவனை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவளும்..." என்று கூறி இழுத்தான்.

புத்தர் சிரித்துக் கொண்டே இரண்டு காலிப் பாத்திரங்களை எடுத்தார்.

" அபிநந்தா, இதோ பார் " என்று சொல்லிக் கொண்டே அவர் ஒரு பாத்திரத்தில் கற்களைப் போட்டு நிரப்பினார். அதைக் குளத்து நீரில் விட்டார். அந்தப் பாத்திரம் குளத்தில் மூழ்கியது.

மற்றொரு காலிப் பாத்திரத்தைக் குளத்து நீரில் விட்டார். அது மிதந்து சென்றது.

" அபிநந்தா கனமான பாத்திரம் குளத்தில் மூழ்கி விட்டது. காலிப் பாத்திரம் குளத்தில் மிதந்து செல்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்த பாசம் எனும் உலகப் பற்று நிறைந்த பாத்திரம். அது பிறவித் துன்பங்கள் என்ற கடலில் மூழ்கிறது. காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது மூழ்காமல் மிதந்து செல்கிறது.

தலையிலிருந்து சில கேசங்கள் தாமாக உதிர்ந்து விடுகின்றன. அவ்விதம் உதிர விரும்பாத கேசங்கள், தலையில் இருந்து கொண்டே நரைத்து நம்மைக் கேலி செய்கின்றன. உதிர்ந்த கேசங்கள் ஓடி விடுகின்றன.

உலகப் பற்று இல்லாதவர்கள் உதிர்ந்த கேசங்களைப் போன்றவர்கள். பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டவர்கள் உதிர விரும்பாமல் தலையில் நரைத்து நம்மைக் கேலி செய்கிற கேசங்கள் போன்றவர்கள். விலக்க முடியாத பந்த பாசங்கள், உதிர விரும்பாத தலையில் உள்ள நரைத்த கேசங்கள் போன்றவை.

உனது மனம் உலகப் பற்றிற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கு விலையாக நீ உலகத் துன்பங்களையும், சித்ரவதைகளையும் அனுபவித்தேத் தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம், போய் வா " என்றார் புத்தர்.

ஹிட்லர்


1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். காதலியுடன் முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.

1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.

பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.

ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!

ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவே சாப்பிடுவார்.

உலகப் போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ். 1897-ல் பிறந்த கோயபல்ஸ், 8 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர். தத்துவத்தில் "டாக்டர்" பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார மந்திரியானார். உலகப்போரின்போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார். (போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக பொய் பேசுபவர்களை "கோயபல்ஸ்" என்று வர்ணிக்கும் வழக்கம் வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதற்கு மறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6 குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல் 12 வயது வரை உள்ளவர்கள்.

1931 – 1953 ஆரம்ப வருடங்கள்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ந் தேதி ஓஷோ பிறந்தார். துணிக்கடை வைத்திருந்த ஒரு ஜைனரின் பதினோரு குழந்தைகளில் ஓஷோதான் மூத்தவர். அவரைப் பற்றிய கதைகள், சிறுவயது முதலே அவர் சுதந்திரமானவராகவும், எதிர்க்கத் தயங்காதவராகவும் எல்லா சமூக, மத, தத்துவரீதியான நம்பிக்கைகளையும் எதிர்த்து கேள்வி கேட்பவராகவும் இருந்ததாக அவரை விவரிக்கின்றன. இளைஞனாக இருந்தபோது அவர் பல தியான முறைகளை சோதனை செய்து பார்த்தார். ஜபல்பூரில் உள்ள டி.என். ஜெயின் கல்லூரியில் தத்துவயியல் பயின்று கொண்டிருக்கையில் தனது இருபத்தி ஒன்றாவது வயதில் 1953 ஆம் வருடம் மார்ச் 21 ந் தேதி ஓஷோ ஞானமடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும். கௌதமபுத்தர், கபீர், இரமணர், மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.

1953 – 1956 கல்வி
1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.

1957 – 1968 பல்கலைகழக பேராசிரியர் மற்றும் பொதுமேடை சொற்பொழிவாளர்1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார்.
1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.
ஆணித்தரமாகவும் அருமையாகவும் பேசக் கூடிய பேச்சாளரான ஓஷோ இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று ஏராளமானமுறை பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் சொற்பொழிவாற்றி வருகிறார். பொதுக் கூட்டத்திலேயே சம்பிராயமான மத தலைவர்களுக்கு சவால் விடுக்கிறார்.

1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் உள்ள பரந்த மைதானங்களில் 20,00 முதல் 50,000 பேர் வரை திரளும் கூட்டங்களிடையே அவர் உரையாற்றுகிறார். பத்து நாட்கள் தியான பயிற்சி கொண்ட முகாம்களை வருடத்திற்கு நான்கு முறை நடத்துகிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார். எந்த கட்டுப்பாடும் அற்ற மூச்சு விடுதல் பயிற்சியும், உள் உணர்வுகளை வெளிக் கொட்டுதலும் பின் மௌனமும் அசையாதிருத்தலும் ஆகிய செய்முறைகளைக் கொண்ட தியானம் இது. இந்த தியானம் அப்போதிலிருந்து உலகம் முழுவதிலும் உள்ள டாக்டர்கள், ஆசிரியர்கள், தொழில்முறை பயிற்சியாளர்கள் மனோதத்துவ வல்லுனர்கள் என எல்லோராலும் இன்று வரை உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது.

1969 – 1974 பம்பாய் வருடங்கள்
1960 ன் பிற்பகுதியில் அவர் இந்தியில் பேசிய பேச்சுக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாயின.
1970 ஜூலையில் பம்பாய்க்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் இந்த உலகத்தையோ மற்ற எதையுமோ துறக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘துறவறம்’ என்பதைப் பற்றி ஓஷோ கூறுவது வழிவழியாக உள்ள கிழக்கத்திய முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவரைப் பொறுத்தவரை இந்த வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.

நாடு முழுவதிலிருந்து பேசுவதற்கு வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதை அவர் நிறுத்தி விடுகிறார். ஆனால் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் தியான முகாம்களை தொடர்ந்து நடத்துகிறார். தனது சக்திகள் அனைத்தையும் தன்னைச் சுற்றி பெருகி கொண்டே வரும் தனது சன்னியாசிகளுக்காகவே அர்ப்பணிக்கிறார்.
இந்த சமயத்தில் வெளிநாட்டவர்களும் வருகின்றனர். புது சன்னியாசம் பெறுகின்றனர். அவர்களில் பலர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மனித வளர்ச்சியின் உயர் சாத்தியக்கூறு பற்றிய இயக்கத்தை சேர்ந்த முன்னிலை மனோ தத்துவவியலாளர்கள் ஆவர். அவர்கள் தங்களது அடுத்த கட்ட உள் வளர்ச்சி நிலைக்காக அவரை தேடி வருகின்றனர். கிழக்கின் ஞானமும் மேற்கின் அறிவியலும் இணைந்த இந்த கால மனிதனுக்கான புதிய, அசலான, தியானமுறை அனுபங்களை அவர்கள் ஓஷோவிடம் அடைகின்றனர்.

1974 – 1981 பூனா ஆசிரமம்
இந்த ஏழு வருடங்கள் ஓஷோ ஒவ்வொரு நாள் காலையிலும் 90 நிமிடங்கள் ஒரு மாதம் இந்தியிலும் அடுத்த மாதம் ஆங்கிலத்திலும் என ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் யோகா, ஜென், தாவோ, தந்திரா, சூபி என எல்லா ஆன்மீக பாதைகளின் உட்பொருளையும் எடுத்துக் காட்டி உரை நிகழ்த்துகிறார். கௌதமபுத்தர், ஜூஸஸ், லாவோட்ஸீ மற்றும் அனைத்து ஞானமடைந்த ஞானிகளை பற்றியும் எடுத்துரைக்கிறார். இந்த உரைகள் 300 புத்தகங்களாக தொகுக்கப்பட்டு 20 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.

இந்த வருடங்களில் மாலையில் அன்பு, பொறாமை, தியானம், கோபம் போன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ‘தரிசனம்’ எனப்படும் இந்த கேள்வி – பதில் 64 தொகுப்புகளாக உள்ளது. அவற்றில் 40 மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காலக் கட்டத்தில்தான் கிழக்கத்திய தியான முறைகளையும் மேற்கத்திய மனோதத்துவ முறைகளையும் உள்ளடக்கிய பல்வேறு குழு மற்றும் தனி அகச்சிகிச்சை முறைகள் ஓஷோவை சுற்றி எழுந்த கம்யூனில் உருப்பெற்றது. உலகின் பல்வேறு இடத்திலிருந்தும் மனோ தத்துவ நிபுணர்கள் வந்தனர். 1980 ல் ‘உலகின் மிக சிறந்த அருமையான வளர்ச்சி மற்றும் அக சிகிச்சை மையம்’ என்ற பெருமையை ஓஷோ கம்யூன் பெற்றது. ஒவ்வொரு வருடமும் 1,00,000 மக்கள் வந்து சென்றனர்.

1981 – ஓஷோவிற்கு முதுகுவலி மோசமானது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் தினமும் உரையாற்றி வந்த ஓஷோ 1981 மார்ச்சில் சொற்பொழிவிலிருந்து அமைதிநிலையை தானே மேற்கொள்கிறார். அவசரமாக அறுவை சிகிச்சை செய்யும் நிலை வரலாம் என்பதால், அவரது டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அமெரிக்கா பயணப்படுகிறார். இந்த வருடத்திலேயே அவரது அமெரிக்க சீடர்கள் 64,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவில் ஓரேகான் என்று அழைக்கப்படும் ஒரு மாநிலத்தில் வாங்கி அவரை அங்கு அழைக்கின்றனர். இப்படியாக அவர் அமெரிக்காவில் தங்கி இருக்க சம்மதித்து நிரந்தர குடியிருப்புக்கு ஒரு விண்ணப்பம் அவர் சார்பில் கொடுக்க அனுமதிக்கிறார்.

1981 – 1985 ரஜனீஷ்புரம்
தரிசு நிலமாக பாழடைந்துள்ள மத்திய ஓரேகானின் பகுதியிலிருந்து விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட, தன்னிறைவு பெற்ற, முன்மாதிரியான கம்யூன் ஒன்று எழுச்சி பெறுகிறது. அதிக உழைப்பு தேவைப்படுவதாலும், லாபமீட்டும் அளவு பயன்கொடுக்காது என்பதாலும் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையாக்கப்படுகின்றன. ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது.

கம்யூனிற்க்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுத்தது. சமூகத்திற்கு எதிரான புது எழுச்சிகளை கண்டு எரிச்சலுறுகின்ற தன்மை அமெரிக்க சமுதாயத்தில், ஜனாதிபதி ரீகனின் இந்த காலகட்டத்தில் எல்லா மட்டத்திலும் பரவி கிடந்தது. அதற்கு ஏற்றார்ப்போல உள்ளுர் மாநில மத்திய அமெரிக்க அரசியல்வாதிகள் ரஜனீஷ்புர மக்களுக்கு எதிராக அனல் கக்கும் பேச்சை வெளிப்படுத்தினர். அமெரிக்க குடியுரிமை சேவை மையம் (INS), அமெரிக்க உளவுத்துறை(FBI), அமெரிக்க கருவூலத்துறை, மது புகையிலை மற்றும் ஆயுத ஏஜென்ஸி(ATF) போன்ற பல பல ஏஜென்ஸிகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாய் செலவு செய்து, தேவையற்ற மற்றும் எந்த பயனும் அளிக்காத கம்யூன் பற்றிய ஆய்வுகளில், கம்யூனை தொந்தரவு செய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஈடுபட்டன. அதே போன்று மிகவும் பணச் செலவு செய்து கம்யூனுக்கு எதிரான பிரசாரம், ஓரேகான் மாநிலத்தில் நடத்தப்பட்டது.

1984 அக்டோபர் – ஓஷோ மூன்றரை வருட மௌனத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திலேயே ஒரு சிறு குழுவினரிடம் பேச ஆரம்பிக்கிறார்.

1985 ஜீலை – ஜூலையிலிருந்து ஓஷோ தனது காலை சொற்பொழிவை ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடும் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள தியான மண்டபத்தில் பேச ஆரம்பிக்கிறார்.

1985 செப் – அக் ஓரேகான் கம்யூன் அழிக்கப்படுகிறது.
1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின. நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.

அக்டோபர் 23 - அமெரிக்காவின் போர்ட்லேண்ட் மாநில தலைமை நீதிபதி ஓஷோ மற்றும் ஏழு பேர் குடியுரிமை சட்டத்தை ஏமாற்ற முயன்றதாக சிறிய குற்றங்களை ரகசியமாக சுமத்துகிறார்.

அக்டோபர் 28 - எந்தவித வாரண்ட்- டும் இல்லாமல் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர். ஐந்து மணி நேரத்தில் ஓரேகான் வந்தடைந்து விடக்கூடிய பயணம் வந்துசேர நான்கு நாட்கள் பிடிக்கிறது. வழியில் ஓக்லஹோமா நகர சிறையில் ஓஷோ அவரது சொந்த பெயரில் இல்லாமல் டேவிட் வாஷிங்டன் என்ற பொய் பெயரில் வெளிஉலகத்திற்குத் தெரியாமல் வற்புறுத்தி அடைத்து வைக்கப்பட்டார். அவர் அந்த சிறையில் இருந்தபோதுதான் அவருக்கு ‘தாலியம்’ என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதற்க்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

நவம்பர் – ஓஷோவின் குடியுரிமை வழக்கிற்கு எதிராக பிரச்சாரங்களும் குரல்களும் கிளம்ப ஆரம்பிக்கின்றன. பாதுகாப்பற்ற ஓரேகானில் அவரது உயிரையும் மற்ற சந்நியாசிகளின் நிலையையும் கருத்தில் கொண்டு ஓஷோவின் வக்கீல்கள் அவர் மீது போடப் பட்ட 35 வழக்குகளில் இரண்டை “ஏற்கும் கோரிக்கை” என்ற பிரிவின் கீழ் ஒத்துக் கொள்கின்றனர். இந்த கோரிக்கையின் விதிகளின்படி பிரதிவாதி தனது குற்றமற்ற தன்மையை தொடர்ந்து வலியுறுத்தும் அதே சமயம் அரசு தரப்பில் அவரை குற்றவாளி என்று கருத இடமுண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறார். ஓஷோவும் அவரது வக்கீல்களும் ஓஷோவின் குற்றமற்ற தன்மையை கோர்ட்டில் தொடர்ந்து வலியுறுத்தவே செய்தனர். ஆனால் ஓஷோவுக்கு நான்கு லட்சம் டாலர்கள் அபராதமும் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.

ரஜனீஷ்புரத்தை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பலரும் கூறியது போலவே சார்லஸ் டர்னர் என்ற போர்ட்லேண்டின் அரசாங்க வக்கீல் பொது மேடையிலேயே அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

1985 – 1986 உலக சுற்றுப் பயணம்
டிசம்பர் 1985 - ஓஷோவின் அந்தரங்க பணியாளர்களுக்கு விசா கொடுக்க மறுத்து இந்திய அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது.

1986 ஜன, பிப்ர – ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். அங்கு அவர் இருந்த இந்த இரண்டு மாதங்களும் தினமும் இருவேளையும் சொற்பொழிவாற்றுகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.

பிப்ர, மார்ச் - முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்க்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.
இதைத் தொடர்ந்த இரண்டு வாரங்களில் அவர் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள 17 நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை.

மார்ச் – ஜூன் - மார்ச் 19ஆம் தேதி அவர் உருகுவே நாட்டிற்குச் செல்கிறார். மே 14ந் தேதி அந்த அரசாங்கம் ஓஷோ உருகுவேயின் நிரந்தர குடிமகனாக அங்கீகரிக்கப்படுவார் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்க்காக பத்திரிக்கையாளர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த கூட்டத்திற்க்கு முந்தியதினம் இரவு வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து டெலிபோன் மூலம் உருகுவே ஜனாதிபதி சன்குன் நெட்டியை அழைத்து ஓஷோவை உருகுவேயில் தங்க அனுமதித்தால் உருகுவே அமெரிக்காவிற்க்கு தர வேண்டிய 6 மில்லியன் டாலர் கடனை உடனடியாக அடைக்க வேண்டியிருக்கும் என்றும் மேற்கொண்டு கடன் எதுவும் தரப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டதாக ஜனாதிபதி சன்குன் நெட்டி பின்னர் ஒத்துக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஜீன் 18ந் தேதி ஓஷோவை உருகுவேயை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

ஜூன் – ஜூலை - இந்த மாதங்களில் அவர் முறையே ஜமைக்காவிலிருந்தும் போர்ச்சுக்கல்லில் இருந்தும் வெளியேற்றப் பட்டார். ஆக மொத்தத்தில் இதுவரை 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.

1987 – 1989 ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்
1987 ஜனவரி – அவர் பூனாவில் உள்ள ஆசிரமத்திற்கு திரும்ப வருகிறார். அது இப்போது ‘ரஜனீஷ்தாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் ஓஷோவின் அன்பர்கள் என அறியப்பட்ட வெளிநாட்டவர் அனைவருக்கும் அனுமதி மறுப்பதை தொடர்ந்து செய்கிறது.

1988 ஜூலை – ஒவ்வொரு நாள் மாலை உரையின் இறுதியிலும் ஒரு தியானத்தை தானே முன்னின்று நடத்தத் துவங்குகிறார். இது இந்த 14 வருடங்களில் இதுவே முதல் முறை. மேலும் மிஸ்டிக் ரோஸ் (சூட்சம ரோஜா) என்ற புரட்சிகரமான ஒரு புதிய தியான யுக்தியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.

1989 ஜன – பிப்ர - அவர் பகவான் என்ற பெயரை விட்டுவிட்டு ரஜனீஷ் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொள்கிறார். அப்போது அவரது சீடர்கள் அவரை ஓஷோ என அழைக்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார். வில்லியம் ஜேம்ஸின் வார்த்தையான ‘ஓஷியானிக்’ என்ற வார்த்தையிலிருந்து தான் ஓஷோ என்ற தன் பெயர் உருவானதாக விளக்குகிறார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து விடும் அனுபவம், அப்போது அதை அனுபவிப்பவர் எங்கே ? அதற்குத்தான் நாம் ஓஷோ என்று கூறுகிறோம். ‘வானம் மலர் தூவி வாழ்த்தும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவர் ‘ என்ற அர்த்தத்தில் ‘ஓஷோ’ என்ற வார்த்தை கிழக்கு நாடுகளில் முற்காலத்தில் குறிக்கப் பட்டிருப்பதை பின்னர் ஓஷோ கண்டறிகிறார்.

1989 – மார்ச் – ஜூன் அவருக்கு கொடுக்கப்பட்ட விஷம் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்ததால் அதனுடைய பாதிப்புகளிலிருந்து மீள அவர் ஓய்வு எடுக்கிறார்.

1989 ஜூலை – அவரது உடல்நிலை சிறிது சீர்படுகிறது. ஓஷோ குருபூர்ணிமா கொண்டாட்டம் என்று பெயர் மாற்றப்பட்ட விழா நாட்களில் இருவேளையும் மௌன தரிசனம் தருகிறார்.

1989 ஆகஸ்ட் – மாலை வேளை தினமும் கௌதமபுத்தா மண்டபத்தில் தரிசனத்திற்கு வந்தமர்கிறார். அவர் மௌனமாக அமர்ந்திருக்க, இசை இசைக்கப்படுகிறது. “விவரிக்க இயலாத அதை உணர மட்டுமே வேண்டும். இது உள் நிலையை, தியான வெளியைப் பெறும் ஒரு மிகப் பெரிய அனுபவம்” என்று அவர் விளக்குகிறார். அவர் ‘ஓஷோ வெள்ளை உடை சகோதர சந்திப்பு’ எனக் கூறப்படும் விசேஷமான குழுவை ஏற்படுத்துகிறார். மாலை தரிசனத்திற்காக வரும் மக்கள் அனைவரும் வெள்ளை உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். “இந்த சந்திப்பில் ஒரு அற்புதமான சக்தி சேகரமாகும், நாளுக்கு நாள் அவற்றின் திறன் மேலும் மேலும் பெருகும்.” என ஓஷோ கூறுகிறார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் மூன்றுநாள் தியானமுகாம் ஓஷோவால் வடிவமைக்கப்பட்ட தியான பயிற்சிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. பங்கேற்பவர் அனைவரும் மெரூன் நிற அங்கி அணிந்துவர கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் ஆசிரமத்தில் வேலை செய்யும் சந்நியாசிகள் அனைவரும் பகல் நேரத்தில் மெரூன் நிற அங்கியே அணியுமாறு ஓஷோ ஆலோசனை கூறுகிறார். அதனால் கம்யூன் பகல் நேரத்தில் மெரூன் நிற ஆடை அணிந்த மக்களாலும், மாலையில் வெள்ளை நிற ஆடை அணிந்த மக்களாலும் நிரம்பியிருக்கும் எனக் கூறுகிறார்.

1989 – செப் – ஓஷோ தனது ரஜனீஷ் என்ற பெயரை முற்றிலுமாக விட்டு விடுகிறார். அதன் மூலம் கடந்த காலத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விடுகிறார். அவர் ஓஷோ என்றே குறிப்பிடப் படுகிறார் அவரது ஆசிரமம் ‘ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்’ எனக் குறிப்பிடப் படுகிறது.

1990 ஓஷோ தனது உடலை விட்டு நீங்குகிறார்.
1990 ஜனவரி – ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஓஷோவின் உடல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் சீர் கெடுகிறது. ஜனவரி 18ந் தேதி மாலை கௌதம புத்தா மண்டபத்துக்கு வரமுடியாத அளவு அவர் மிகவும் பலவீனமடைகிறார்.

ஜனவரி 19 - அவரது நாடித்துடிப்பு தாறுமாறாகிறது. அவரது டாக்டர்கள் அவரிடம் இருதய சீரமைப்பு கருவி கொண்டுவருவதற்காக கேட்கும்போது ஓஷோ, “இல்லை, என்னைப் போக விடுங்கள், இயற்கை நேரத்தை நிர்ணயித்து விட்டது.” என்கிறார். அவர் மாலை 5 மணிக்கு உடலை விட்டு நீங்குகிறார். மாலை 7 மணிக்கு அவரது உடல் கௌதம புத்தா ஹாலுக்கு இறப்பு கொண்டாட்டத்திற்காக கொண்டு வரப் படுகிறது. பின் எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறது. இரண்டு நாட்களுக்குப்பின் அவரது சாம்பல் ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனலுக்கு கொண்டு வரப் பட்டு சாங் டு ஸூ அரங்கத்திலுள்ள அவரது சமாதியில் வைக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்த நாட்களில் ஓஷோவின் மணமாக கம்யூனில் வீசும் அன்பும் தியானமும் கலந்த சூழ்நிலையை அனுபவிக்கவும் கொண்டாடவும் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பறந்து வந்த வண்ணம் உள்ளனர். அவர் தனது உடலை நீக்குமுன், “என்னை கடந்த காலத்தில் பேச வேண்டாம். என்னுடைய சுமையான இந்த உடலில் இருப்பதை விட இந்த உடலை விட்டபின் என்னுடைய இருப்பு பல மடங்கு மகத்தானதாக இருக்கும். எனது மக்களிடம் கூறுங்கள். அவர்கள் என்னை பலமடங்கு அதிகமாக உணரலாம். உடனடியாக என்னை அவர்கள் அறியலாம்.” என்று கூறுகிறார்.

எப்படி இந்த கம்யூன் தொடர்ந்து பெரிதாக வேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகிறார். இனி நான் உடலில் இல்லாமல் போய் விடுகையில் மேலும் பலர் வருவார்கள், மேலும் பலர் ஆர்வம் காட்டுவார்கள், அவரது கம்யூன் நமது கற்பனைக்கு எட்டாத வகையில் விரிவடையும் எனவும் கூறுகிறார். பிறகு கூறுகிறார், “நான் எனது கனவுகளை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.”

1980 ல் உடலை விட்டு நீங்கியபின் என்ன நிகழும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஓஷோ, “நான் என் மக்களிடம் கரைந்து விடுவேன். எப்படி கடலின் எந்த துளியை சுவைத்தாலும் அது ஒரே போல உப்பு சுவை கொண்டிருக்குமோ, அதே போல என் சந்நியாசிகள் எல்லோரிடமும் நீ ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவனின் சுவையை உணரலாம். நான் என் மக்கள் ஆனந்தமாகவும், பரவசமாகவும் வாழ தயார் செய்திருக்கிறேன், அதனால் நான் உடலில் இல்லாதது அவர்களிடம் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் அதே போலவே வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் எனது இறப்பு அவர்களிடம் மேலும் ஆழத்தை ஏற்படுத்தும்.” என்கிறார்.

1989 ல் இத்தாலியன் நாட்டு டிவி- யின் அதே போன்று கேள்விக்கு பதிலளித்த ஓஷோ, “நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால் அது அழியாமல் நிலைத்திருக்கும். என்னுடைய பணியில் ஆர்வமுள்ள மக்கள் எனது தீபத்தை தொடர்ந்து ஏந்தி செல்வர். ஆனால் எதையும் யார்மீதும் கத்தியின் மூலமாகவோ, ரொட்டியின் மூலமாகவோ, உணவைக் காட்டியோ திணிக்க மாட்டார்கள். நான் எனது மக்களுக்கு தொடர்ந்து ஒரு முன்னுதாரணமாக இருப்பேன், அப்படித்தான் எனது சந்நியாசிகளும் உணர்வார்கள். நான் அவர்கள் அவர்களாகவே வளர வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான அன்பு, அதன் அடிப்படையில் எந்த சர்ச், கோயில் போன்ற ஸ்தாபனங்களையும் உருவாக்க முடியாது, அதே போன்று விழிப்புணர்வு, அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது, அதே போன்று கொண்டாட்டம், மனமற்று அனுபவித்தல், குழந்தை போன்ற தூய்மையான கண்களோடு இருத்தல் போன்ற குணங்கள் கொண்டவர்களாய், எல்லா மக்களும் வேறு யாரோ ஒருவரின் படி அல்லாமல் தாங்களோ தங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கான வழி உள்ளே இருக்கிறது.”

ஓஷோவின் செய்தி...!

நான் உனக்குச் சொல்கிறேன். வாழ்வு மட்டுமே ஒரே உண்மை. வாழ்வை தவிர வேறு கடவுள் இல்லை. எனவே வாழ்வை அதன் எல்லா வடிவங்களோடும் நிறங்களோடும் பரிமாணங்களோடும் முழு வானவில்லாக இசையின் எல்லா ஸ்வரங்களும் உன்னை ஆட்கொள்ள அனுமதி. நீ இந்த எளிமையான விஷயத்தை சமாளிக்க முடிந்தால் - இது எளிமையான விஷயம்தான். ஏனெனில் இது பிடிப்புகளை விடுதல் பற்றிய கேள்வி மட்டுமே. ஆற்றை தள்ளாதே. ஆறே உன்னை கடலிடம் கொண்டு சேர்க்கட்டும். அது ஏற்கனவே அங்குதான் செல்கிறது. நீ தளர்வாய் இரு இறுக்கமாக இருக்காதே. ஆன்மீக வாதியாக இருக்க முயற்சி செய்யாதே. பொருளுக்கும் ஆன்மாவிற்க்கும் இடையே எந்த பிளவையும் ஏற்படுத்தாதே. பிரபஞ்சம் ஒன்றே. பொருளுலகமும் ஆன்மாவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் அவ்வளவே. தளர்வாய் இரு ஓய்வாய் இரு ஆற்றோட்டத்துடன் செல். குடிகாரனாய் வாழ்வை குடிப்பவனாய் பிரபஞ்ச மதுவை பருகுபவனாய் இரு. நினைவுகளில் மூழ்காதே. நினைவுகளில் மூழ்கியவன் இறந்தவனாகவே இருக்கிறான். வாழ்வின் மதுவை பருகு அது மிகுந்த கவிநயம் கொண்டது அது மிகுந்த அன்புடையது அது மிகுந்த சாறு கொண்டது. எந்த நொடியில் வேண்டுமானாலும் நீ வசந்தத்தை கொண்டு வரலாம். வசந்தத்திற்க்கு அழைப்பு அனுப்பு. சூரியனும் காற்றும் மழையும் உன்னுள்ளே நுழையட்டும்.

அன்பு

அன்பு அறிவில் பிறப்பதில்லை,
அது உழைத்துச் சேர்ப்பதில்லை,
அது தேடி அடைவதில்லை,
அது அதிர்ஷ்டப் பரிசுமில்லை,
அது கொடுத்துப் பெறுவதில்லை,
அது வயதில் வளர்வதில்லை./

அன்பு நீ பிறக்கும்போதே இருந்தது,
நீ மூச்சு விடுவதில் வாழ்வது,
உன் இதயத் துடிப்பில் ஒலிப்பது,
உன் இன்பச் செயல்களில் ஒளிர்வது.

அன்பு உன் மென்மையின் உறுதி,
உன் படைப்பின் பெருமிதம்,
உன் இருப்பின் அழகு.

அன்பு வாழ்வின் பயிர்,
அதில் வாழ்வதே உயிர்.

ஆகவே

அன்பைத் தேடாதே,
தயவுசெய்து அதைப் பழகாதே,
அதைப் பற்றிப் படிக்காதே,
அன்பைப்பற்றி அறிவுரை கேட்காதே,
அது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறையல்ல.

இப்படித்தான் அன்பு அழிந்தது, அழிகிறது.

குழந்தையிடம் நிறைந்திருக்கும் அன்பை முறைப்படுத்தும் முயற்சியில்,
அறிவுச்சிறையிலிட்டுத்தான் அன்பு அடியோடு அழிகிறது.
அன்பு அழிந்ததால்.....வாழ்வு அர்த்தம் இழந்தது,
இயற்கை அழகு குலைந்தது.
மனிதன்....... வெறும் இயந்திரமாகிப் போனான், தந்திரமாகிப் போனான்.

எனதருமை நண்பனே,
அன்பில் நீ
அமிழலாம், கரையலாம், உணரலாம், இருக்கலாம்,
ஆனால்..... சொல்ல முடியாது.
அது சொற்சிறை கடந்த அனுபவம்,
காட்ட முடியும்......ஆம்.....தொட்டுக் காட்டலாம்.

என் இதயமே
எட்ட இருந்து பார்க்கக்கூடிய பொருளல்ல அன்பு,
கிட்டே நெருங்கி வா,
கூடிக் குலாவி அன்பில் குதூகலிப்போம்.

ஸ்ரீ ரமணர்

‘நான்’ என்ற அகந்தை எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்ற தவறான கருத்தை உண்டாக்குகிறது. உண்மையில் நாம் ஒரு கருவியே; கர்த்தா அல்ல. இதை உணர்ந்துவிட்டால் , அகந்தை நம்மிடமிருந்து வெளியேறி விடும்.

எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமொ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு.

பகவானுக்கு ருசி முக்கியமில்லை. அடியார்களது பக்திதான் முக்கியம்.

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.

பரம்பொருளைத தொடர்ந்து விடாமல் பற்றி நிற்பதே சமாதி எனப்படும்.

புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள். புதிய வாசனைகளைத் தேடிக் கொள்ளாதீர்கள். அதுவே நீங்கள் செய்திருக்கக்கூடிய தவற்றிலிருந்து மீளுவதற்க்கு உரிய பிரயச்சித்தம் ஆகும்.

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைகள். இந்த இரண்டையும் கடந்து நிற்பதே ஆன்மா அதை உணர்ந்தால் இந்த இரண்டுமே பொருள்ளற்றதாக ஆகிவிடும். தன்னை உணர்ந்த மனிதன் - இந்த நிலைகளைக் கடந்துவிடுகிறான. இறப்பு அவனைப் பாதிப்பதில்லை.

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தேடிக்கொள்ளும் நற்பலன்கள் அதிகமாக இருந்தால், அதை ஒட்டி அவனக்கு மரணத்துக்குப் பின் இனிய அனுபவம் ஏற்படுகிறது. கெட்ட பலன்களே அதிகமாக இருந்தால் துன்பம் நிறைந்த அனுபவம் உண்டாகிறது.

நூல்களில் மூன்றுவித தீஷைகள் கூறப்பட்டுள்ளன. ‘ஹஸ்த தீக்ஷை’ என்பது சீடனின் சிரசைத் தொட்டு அருள் புரிதல், ‘சக்ஷதீக்ஷை’ என்பது அருட்பார்வையால் தீக்ஷை அளிப்பது. ‘மானசீக தீக்ஷை என்பது மனதினால் அருள் புரிதல், இவற்றில் மானசீக தீக்ஷையே அனைத்திலும் சிறந்தது”

முயற்சி செய்து மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அந்த நிலையில் தொடர்ந்து நாம் இருப்போமேயானால் அதுவே நமது சாதனைக்ளுக்கு வழிவகுக்கும்

நம்மால் எதிலும் தனித்து செய்ல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான்.

தவறான செயல்களைச் செய்துவிட்டு, அகந்தையின் காரணமாக அதை மறைத்தல் கூடாது. எனவே குற்றங்களைச் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல ஒழுக்கத்துடன் வாழ்ப பழுகுதலே சிறப்பு.

அறிவின் சொரூபமே சச்சிதானந்தம்.

மனம் அடங்கிய ஜகம் மறையும்

மனம் என்பதோ ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மனம் என்று ஒரு பொருள் இல்லை. ஆகையினா நினைவே மனிதன் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்பது அன்னியமாயில்லை.

மனதின் சொரூபத்தை விசாரித்துக் கொண்டே போனால் மனம் தானாய் முடியம்.

நான், நான் என்று எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட அவ்விடத்தில் கொண்டு போய்விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகள் எல்லாவற்றிற்கும் நான் என்னும் நினைவே முதல் நினைவு. இது எழுந்த பிறகே ஏனைய மற்ற நினைவுகள் எழுகின்றன. தன்மை தோன்றிய பிறகே, முன்னிலை படர்க்கைகளை தோன்றிகின்றன. தன்மையின்றி மன்னிலைப் படர்க்கைகள் இரா!

மனம் எப்படி அடங்கும் என்றால் ‘நான்’ யார் என்னும் விசாரனையினாலேயே, நான் யார் என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் ஒழித்து முடிவில் தானும் அழியும். பிறகு சொரூப தரிசனம் உண்டாம்.

எத்தனை எண்ணங்களை எழுப்பினால் என்ன, ஜாக்கிறதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே இது யாருக்குண்டாயிற்று என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும்.

நினைவே மனிதன் சொரூபம். நான் என்னும் நினைவே மனத்தின் முதல் நினைவு. அதுவே அகங்காரம்.

மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்.

தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கிச் சொரூப மாத்திரமாய் இருக்கமுடியமா, முடியாதா என்கிற சந்தேக நினைவக்கு இடம் கொடாமல் சொரூப தியானத்தை விடாப்பிடியாகப் பிடிக்க வேண்டும். தான் பாபி என்னும் எண்ணத்தையும் அறவே ஒழித்து சொரூப தியானத்தில் ஊக்கமுள்ளவனாயிருந்தால் அவன் நிச்சயம் கடைத்ததேறுவான்.

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வயத்தாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும்.

உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் - மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளுவு கெட்டவர்களாய் இருந்தாலம் அவர்களிடத்தில் துவேஷம் வைக்கலாகாது.

எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம்.

நான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மௌனம் எனப்படும். சொரூபமே ஜகம், சொரூபமே நான், சொரூபமே ஈசுவரன், எல்லாம் சிவஸ்வரூபமே.

என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி முத்தை அடையலாம்.

எவன் தன்னையே கடவுளாகிய - சொரூபத்தினடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான்.

குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்ககும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது கரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடையவேண்டும்.

முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் த்த்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தப்போல எண்ணிக் கொள்ள வேண்டும்.

கனவில் மனம் வேறொரு தேகத்தை எடுத்துக்கொள்கிறது. ஜாக்ரம், சொப்பனமிரண்டிலும் நினைவுகளும் நாம ரூபங்ககளும் ஏக காலத்தில் நிகழ்கின்றன.

எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ள படியால் மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்து கொண்ட பின்பி நூலகளை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை.

மனம் வெளிவரும்போது துக்கத்தை அனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும்போதெல்லாம் அது தன்னுடைய யாதஸதனத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது.

நிராசையே ஞானம், நிராசை வேறு ஞானம் வேறன்று.

உண்மையில் இரண்டும் ஒன்றே. நிராசை என்பது ஒரு பொருளிலும் மனம் செல்லாமலிருப்பது.

சும்மா இருப்பதற்குத்தான் ஞானதிருஷ்டி என்று பெயர். சும்மாயிருப்பதாவது மனத்தை ஆத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே அன்றி பிறர் கருத்தறிதல், முக்கால முணர்தல், தூர தேசத்தில் நடப்பனவறிதல் ஆகிய இவை ஞான திருஷ்டியாக மாட்டா.

பந்தத்திலிருக்கும் தான் யாரென்று விசாரித்துத் தன் யதார்த்த சொரூபத்தை தெரிந்து கொள்வதே முக்தி.

உலகத்தில் நாம் எதையும் ஒரு பெயரை வதைத்தோ உருவத்தை கொடுத்தோதான் நினைவில் வைத்துக் கொள்கிறோம். கடவுளை நினைத்துத் தியானம் செய்வதற்கும் இப்படி ஒரு வழி முறை தேவைப்படுகிறது.

வெளியே பார்த்ததும், பேசியும் பழகியும், உணர்ந்தே பழக்கப்பட்ட மனத்தை உள்முகமாகத் திருப்புவது என்பது சாதாரண காரியமல்ல.

அப்படிச் செய்வதற்கு இப்படி ஒரு படிக்கட்டு அவசியமாகிறது.

எல்லா உணவுகளுக்குமே ஒவ்வொரு வகையான பாதிப்பு உண்டு. சில உணவு வகைகள் அமைதியைத் தருகின்றன. வேறு வகை உணவுகள் மந்த நிலையையம், தூக்கத்தையும் உண்டு பண்ணுகின்றன. உணர்ச்சியைத் தூண்டும் மாமிச வகையைச் சார்ந்த ராஜஸ உணவையும், மந்தநிலையையும், சோம்பலையும் தூண்டும் தாமஸ உணவையும், நாம் தவிர்க்க வேண்டும். அமைதியைத் தரும் சாத்வீக உணவே தியானத்துக்கு ஏற்றது.

பிராணயாம்ப் பயிற்சி முடிந்ததும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் யோகிகள் படிப்படியாக, இப்படி ஒரு பயிற்சி இல்லாமலே நிரந்தரமாக அமைதியுடன் இருக்கும் நிலையை அடைய விரும்புவார்கள். அதைத்தான் சகஜ சமாதி என்று குறிப்பிடுகிறோம்.

மூச்சு என்பது குதிரையைப் போன்றது. மனம் என்பது அதன் மீது சவாரி செய்து குதிரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனும் கட்டுப்படுகிறான். இதுவே பிராணயாம்ம். மூச்சின் இலக்கத்தைக் கவனித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனத்தில் ஓடும் நினைவுகளும் கட்டுபடுகின்றன.

மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பது தானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.

விதியை வெல்லவும் அதன் பிடியிலிருந்து விலகி நிற்கவும் இரு வழிகளே உண்டு. ஆன்மா விதியால் கட்டுப்படுவதில்லை என அறிதல் ஒரு வழி. இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்து நிற்பது மற்றொருவழி.

நகர்ந்து செல்லும்ம வண்டியில், உறங்கிக் கொண்டு பயணம் செய்யும் பிரயாணிக்கு சலனமோ, அசைவுகளோ எதுவும் தெரியாது. ஏனெனில் அவனது மனம் அறியாமை இருளில் ஒடுங்கிக் கிடக்கிறது.

ந்தியின் கரையைச் சேர முயலும் மனிதன் அந்த நீரின் அலையோட்டங்களால் கரைசேர முயலுவது தடைப்படுவதைப் போல, சம்சாரம் என்னும் ந்தியிலிருந்து ஆத்மஞானம் என்னும் கரையைச் சேர விரும்புபர்கள் உலக இன்பங்களால் தடைபட்டு அதை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்.

கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக்கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும்.

பிறருக்கு நன்மை செய்வதில் ஒருவர் ஈடுபட்டாலே போதும். அவர்களின் இதயத்தில் நன்மை வளரும். நன்மை, அன்பு, கடவுள் ஆகிய எல்லாம் ஒன்றே.

துறவு என்பது அனுபவிக்கப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எப்போதும் அது இருந்துகொண்டே இருப்பதுதான். வந்து போவதாகத் தோன்றுவது மனத்தின் இயல்புதான்.

விதி என்பதென்ன? இறைவனைச் சரண்டையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்?

ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.

காகம் தன் கண்ணின் மூலம் இரண்டு பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தும். யானைக்கு அதன் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், இருவிதங்களில் பயன்படுகிறது. பாம்பு தன் கண்களின் மூலம் பார்க்கவும் செய்கிறது. ஒலிகளின் மூலம் கேட்கவும் செய்கிறது. இதைப் போல ஞானி என்பவனுக்கு உறக்கம், விழிப்பு, உறக்கத்தில் விழிப்பு நிலை, விழிப்பில் உறக்க நிலை ஆகிய அனைத்தும் ஒன்றுதான்.

ஒருவன் தன்னைப்பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டும், தன்னைப்பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால், உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயலாகும். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால் அது, அடிக்கல் நடாமலே சுவர் எழுப்பியதைப் போன்ற செயலாகத்தான் இருக்கும்.

இந்த அருளை பரிபூரண சரணாகதி மூலம் அடையலாம். சரணாகதி சொல்லளவிலேயே நிபந்தனையுடன் கூடியதாகவோ இருக்கக்கூடாது. வழிபாடு என்பது வெறும் சொற்களால் ஆனது அல்ல. அது இதயத்திலிருந்து புறப்பட்டு இதயத்திற்குள்ளே கலந்து விடவேண்டும். இதற்குத்தான் வழிபாடு என்று பெயர். இது தான் அருள்.

எண்ணங்களே மனம்; அந்த எண்ணமயமானதே உலகம். அனைத்தின் மையம் இதயம்.

ராமா என்ற சொல்லில் ரா என்ற எழுத்து ஆன்ம ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. மா என்ற எழுத்து நான் என்ற ஆணவத்தைக் குறிக்கிறது. ஒருவர் ராமா என்று இடைவிடாது ஜபித்துக் கொண்டேயிருந்தால் மா என்ற எழுத்து ரா என்ற எழுத்தில் ஐக்யமாகி மறைந்து விடுகிறது. ரா என்ற ஸவரூபமே எஞ்சி நிற்கிறது. இந்நிலை ஏற்படும்போது தியானம் செய்யும் முயற்சியும் ஓய்ந்துபோய் தமுத உண்மை நிலையாம் நிரந்தர தியானம் நிலைத்து விடுகிறது.

ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை. உள்மனதில் யார் அமைதியை எற்படுத்துகிறார்களோ அவரையே உன் குருவாக்கிக் கொள்.

உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது. வீட்டைத் துறப்பதும் சந்நியாசமல்ல. உண்மையில் மனத்திலுள்ள பாசத்தையும் பந்தத்தையும் ஆசையையும் துறப்பதே சந்நியாசமாகும். உலக வாழ்வைத் துறப்பவன் தன் அன்பின் பெருக்கால், உலகையே மூழ்கடிக்கிறான். துறவென்பது உறவைச் சுருக்கிக் கொள்வதல்ல. உலகளவு பரந்து விரிந்தாய் ஆக்கிக் கொளவதே துறவின் லட்சணம்.

உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டும் போதும். அதைதான் பணிவு என்றும் நமஸ்காரம் என்றும் சொல்கிறோம். தூய்மையில்லாத உள்ளத்துடன் நமஸ்கரித்தால் அதை ஓர் ஏமாற்றுச்செயல் என்றே சொல்ல வேண்டும். அது ஒரு அபசாரமும் கூட.

ஆனந்தம் அமையியில்தான் பிறக்கிறது. குழப்பமில்லாத மனதில் அமைதி நிலைபெற்று இருக்கும். குழப்பம், கலக்கம் ஆகியவற்றிற்கு மனதில் எழும் எண்ணங்களே காரணம்.

அருளின் உயர்ந்த வடிவம் மொனம். அதுவே மிக உயர்ந்த உபதேசம்.

மௌன விரதம் என்பது ஒரு விரதமே. அது தியானத்திற்கு ஓரளவு உதவும். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்வதில் என்ன பயன்?
சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை கடவுள் நம்மைப் பற்றிய எல்லா செயல்களுக்கும் பொறுப்பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். இது முழுமையாக நம்மைக் கடவுளிடம் அர்ப்பணித்து விடுவதில் இருக்கிறது.

நீங்கள் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். ஆனால் அதனோடு திருப்தி அடைந்துவிடக்கூடாது. ‘துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தது யார் என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் கடக்கும் வரை சாதனையைத் தொடருங்கள் இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நிற்கும்.

கலங்கிய மனதால், காமத்தினால் செய்யப்படுவதெல்லாம் தீய கரும்ம். சாந்தமான தூய மனதுடன் அனைத்தும் நற்கருமம்.

மரணத்திற்கு பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

நீ விரும்புவதை எல்லாம் பகவான் உனக்கு தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.

உலகம் மெய் என்ற அபிப்பாரய்த்தை விட்டொழிக்காவிட்டால், மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.

”என்னுடைய மதம் இப்படி” என்று ஒரு மத்த்தின் மீது அபிமானமும் பிற மதங்களின் மீது துவேஷம்ம் கொள்ளச்செய்வது, அகந்தை தான், இதை விட்டொழிக்க வேண்டும்.

பலன் கருதா பக்தி என்பது சாத்யமே. அதற்கு உதாரணமாக பிரஹலாதனுடைய பக்தியையும், நாரதமுனிவரின் பக்தியையும் கூறலாம்.

சராணாகதி என்று பேசுவதெல்லாம் வெல்லத்தில் செய்த பிள்ளையாரைக் கிள்ளி சிறிது வெல்லத்தை எடுத்து, அந்த வெல்லப் பிள்ளையாருக்கே நைவேத்யம் செய்வது போலாகும்.

மூன்றாவது காஷாயம். இது முற்பிறவிகளில் அனுபவித்த புலன் நுகர்ச்சிகள் பற்றிய எண்ணங்களும் ஆசைகளும் ஆகும்.

புத்தி பூர்வமாக அறிந்திருப்பது அதிஞானம். அதாவது உறுதிப் படாத ஞானம் ஆகும். காலம் வரும் போது நீ திட ஞானத்தில் - அதாவது உறுதியற்ற ஞானத்தின் நிலை பெறுவாய். இதுதான் முடிவான உண்மை. தன்னை உணர்ந்திருப்பதே ஞானம் ஆகும்.

கடல் பொங்கினால் அற்ப ஜந்து தலையெடுக்க முடியாது. அதுபோல ஞான வெள்ளம் அற்பமான அகந்தை தோன்றாது.

நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக இரு. நான் என்று கூறிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே.

உலகம் மெய் என்ற அபிப்ராயத்தை விட்டொழிக்காவிட்டால் மனம் எப்பொழுதும் உலகத்தையே நாடி நிற்கும்.

ஆபிரகாம் லிங்கன்

மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது.

பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக்கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது.

அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் ஆபிரகாம் லிங்கன்.

ஏழ்மைக் குடும்பத்தில் 1809 பிப்ரவரி 12-ல் ஆபிரகாம் லிங்கன் பிறந்தார்

சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார்.

காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். அப்போது அவருக்கு வயது ஒன்பது.

சிறுவயதிலயே தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார்.

பிறருக்கு உதவி செய்தால், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது.

எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன.

ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அவர் மனம் துடித்தது.

இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார்.

அரசியலில் ஈடுபடுவதன் மூலமே இதுபோன்ற அடிமைத் தனங்களை ஒழிக முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்தார்.

1834இல் முதன் முதலாக சட்ட மன்றத் தேர்தலில் லிங்கன் போட்டியிட்டார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார்.

அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் - கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார்.

லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்க செனட் உறுப்பினர்களில் லிங்கனின் பணி முற்றிலும் வேறுப்பட்டிருந்தது. மக்களின் அடிப்படை உரிமைகளையும், அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி லிங்கன் முழங்கினார். கறுப்பர் இன மக்களிடம் லிங்கனின் செயல்பாடுகளும், சொற்பொழிவுகளும் வரவேற்பைப் பெற்றன.

1861-ல் அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும் லிங்கன் போட்டியிட்டார்.

மக்களை மட்டுமே லிங்கன் நம்பினார். ஆனால் லிங்கனை எதிர்த்தவர்கள் தங்கள் பணபலத்தாலும், படை பலத்தாலும், பதவியின் துணையாலும் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணினார். இறுதியில் ஆபிரகாம் லிங்கனே அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஒரு தேசத்தின் தலைவர் எப்படிப்பட்டவராக இருத்தல் வேண்டும்; அவருடைய செயல்கள் எத்தகைய எளிமை மிக்கதாக இருத்தல் வேண்டும் என்பதற்கு ஆபிரகாம் லிங்கன் மிகச்சிறந்த சான்று.

லிங்கன் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த போது அவருடைய காரை அவரே ஓட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள் அமெரிக்க பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆபிரகாம் லிங்கன் காரை ஓட்டிச் சென்றார்.

வழயில் ஒரு பள்ளத்தில் விழுந்த ஒரு பன்றிக்குட்டி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்த வழியில் சென்ற எவரும் பள்ளத்தில் தவிக்கும் பன்றிக் குட்டியைப் பார்க்கவில்லை; பார்த்த சிலரும் அதுபற்றிக் கவலையில்லாமல் கடந்த சென்றனர்.

ஆனால் இதைக் கண்ட ஆபிரகாம் லிங்கனால் அந்த இடத்தைக் கடந்து செல்ல இயலவில்லை. தாம் ஓட்டி வந்த காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, பள்ளத்தில் தவித்த பன்றிக் குட்டியைத் தூக்கிக் கரை ஏற்றினார். அதன் பின் பாராளுமன்றக் கூட்டத்திற்கு லிங்கன் பயணம் மேற்கொண்டார்.

ஆபிரகாம் லிங்கன் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது பாராளுமன்றம் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. தாமதமாக வந்ததற்கு அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்” என்று சொல்லியபடி பாராளுமன்றத்திற்குள் ஆபிரகாம் லிங்கன் நுழைந்தார்.

ஆபிரகாம் லிங்கன் ஆடை முழுவதும் சேறும் சகதியும் அப்பியிருந்தன….அதைக் கண்டு அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.. அதைப் புரிந்துகொண்ட ஆபிரகாம் லிங்கன் வழியில் நடந்ததை விவரித்தார். அதைக் கேட்ட அனைவரும் ஒரு ஐந்தறிவு ஜீவனான பன்றியைக் காப்பாற்றுவத்றாக ஆபிரகாம் லிங்கன் பாடுபட்டதைச் சொல்லிப் பாராட்டினார்.

அப்போது, ” ஒரு பன்றிக்குட்டியை நான் காப்பாற்றியதற்காக நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள்…. ஆனால் இதில் என் சுயநலமும் அடங்கியிருக்கிறது” என்றார் ஆபிரகாம் லிங்கன்.

“இதில் என்ன சுயநலம் இருக்கிறது?” என்று அனைவரும் விழித்தனர்.

“பள்ளத்தில் தவித்த பன்றியைப் பார்த்து என் மனம் தவித்தது.. அந்தப் பன்றியைக் காப்பாற்றியதன் மூலம் என் மனம் நிம்மதி பெற்றது.. அதனால் என் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகிறது.

அந்த நேரத்தில் அந்தப் பன்றியை நான் காப்பாற்றாமல் வந்திருந்தால், அந்த கவலையால் இந்தப் பாராளுமன்ற விவாதத்தில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது போயிருக்கும்… அதன் பின் சாலையோரங்களில் எந்தப் பன்றியைப் பார்த்தாலும், பள்ளத்தில் தவித்த பன்றியின் காட்சியே என் கண்ணில் தெரியும்.

தக்க சமயத்தில் அந்தப் பன்றிக்கு உதவாமல் வந்து விட்டோமே என்று என் உள்மனம் உறுத்திக் கொண்டே இருக்கும்… அந்த வடு என் வாழ்நாள் முழுமையும் நீடிக்கும்… அத்தகைய சூழலிலிருந்து விடுபடுவதற்காகத்தான் அந்தப் பன்றியை நான் காப்பாற்றினேன். இதில் என்னைப் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை” என்ற சொல்லிச் சிரித்தார்.”.

ஆம்! செய்த உதவிக்காக கிடைக்கின்ற பாராட்டுதலைக்கூட உதறித்தள்ளும் மனப் பக்குவத்தைக் கொண்டிருந்தார் ஆபிரகாம் லிங்கன்!

அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் களவரங்கள் ஏற்பட்டன.

‘அடிமைத்தனம் தொடர வேண்டும் அது ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபிரகாம் லிங்கன் யார்?’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெறுபவர்கள் தூண்டிவிட்டனர்.

அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின.

அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்கள விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். உள்நாட்டு போர்மூண்டது.

இவற்றையெல்லாம் லிங்கன் முறியடித்து நாட்டின் ஒற்றுமயைக் காப்பாற்றினார். அடிமைத்தனத்தையும ஒழித்தார்.

‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி, என்று மக்களாட்சிக்கு லிங்கன் விளக்கம் கொடுத்தார்.

லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.

ஆனால், தங்கள் சுயநலம் எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

அமெரிக்க குடியரசில் அடிமைத்தனத்தை ஒழித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய ஆபிரகாம் லிங்கனை 1868 - ல் ஒரு பைத்தியக்காரன் சுட்டுக் கொன்றான்.