செவ்வாய், 6 ஜூலை, 2010

ராவணன் – விமர்சனம்

கம்ப ராமாயணத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம். வால்மீகி ராமாயணத்தில் ராமன் நல்லவராக இருப்பார்… ராவணன் கெட்டவனாக காட்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் ராவணன் மாபெரும் வீரன். மணிரத்தினத்தின் படைப்பில் ராவணனாக காட்டப்படும் விக்ரம் தரப்பின் நியாயங்கள் காட்சிகளாக்கப் பட்டிருக்கின்றன. ராவணனை கிட்டதட்ட ஒரு ஹூரோவாகவே காட்டியிருக்கிறார் மணி! அந்த வகையில் இது ஒரு புதுமையே

மேகமலைப் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வரும் போலீஸ் எஸ்.பி. தேவ்ஆனந்தாக பிரித்விராஜ். எஸ்.பி.யின் மனைவி ராகினியாக ஐஸ்வர்யாராய். வீராவின் அண்ணனாக பிரபுவும், தங்கை வெண்ணிலாவாக பிரியாமணியும் கதையோடு இணைந்து வருகிறார்கள். ஃபாரஸ்ட் கார்டாக கார்த்திக் ரீ எண்ட்ரியின் கவனத்தை ஈர்க்கிறார்.




வீராவைக் கண்டுபிடிக்க அவனுடைய தங்கை வெண்ணிலாவை திருமணக் கோலத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் அழைத்துச் செல்கின்றனர். காதலித்து கைப்பிடித்த மேல்குடியைச் சேர்ந்த கணவன் போலீசைப் பார்த்து ஓடிவிட… ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வெண்ணிலாவை காவலில் வைத்து ஒட்டுமொத்த போலீசும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் தப்பிய வீராவுக்கு, தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லிவிட்டு கிணற்றில் விழுந்து உயிரை விடுகிறாள் வெண்ணிலா.



தன் தங்கையைப் பாழாக்கிய அதிரடிப்படை போலீஸ் கும்பலையும் அதன் தலைவரான எஸ்.பி. தேவ்ஆனந்தையும் பழிவாங்க கிளம்புகிறான் வீரா. எஸ்.பி.யின் மனைவி ராகினியை கடத்திச் செல்கிறான். மேகமலையில் உள்ள பழங்குடியினர் பகுதியில் ராகினியை சிறைபிடிக்கிறான் வீரா. மனைவியை மீட்க சிறப்பு அதிரடிப்படையோடு புறப்படுகிறார் தேவ் ஆனந்த். 14 நாட்கள் நீடிக்கும் இந்த சேசிங் படலத்திற்கு இடையே வீராவுக்கு எஸ்.பி.யின் மனைவி ராகினி மீது காதல் வருகிறது. இறுதியில் தன்னைத் தேடிக் கண்டுபிடித்த அதிரடிப்படையை மொத்தமாக அழித்த வீரா… எஸ்.பி. தேவ்ஆனந்தை மட்டும் கொல்லாமல் விடுகிறான். என் கணவரின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் நான் இங்கேயே இருந்திடுவேன் என்று ஒரு கட்டத்தில் ராகினி சொல்ல… அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து ராகினியை விட்டுவிடுகிறான் வீரா.



ரயிலில் ராகினியோடு ஊர் திரும்பும் எஸ்.பி. தேவ் ஆனந்த்… 14 நாளில் வீரா உன்னைத் தொடவே இல்லையா? என்று சந்தேகப்பட, ரயிலை நிறுத்தி இறங்கிவிடுகிறாள் ராகினி. மீண்டும் வீராவைத் தேடி, அவன் இடத்துக்கு வந்து அவனிடம்… என்னைப்பற்றி என் கணவரிடம் என்ன சொன்னாய் என்று கேட்கிறாள். கணவன் தன்னைச் சந்தேகப்பட்டதாக ராகினி சொன்னதும், எஸ்.பி.யின் திட்டத்தை புரிந்துகொள்கிறான் வீரா. ராகினியின் மூலம் தன்னைப் பிடிக்க திட்டமிட்டிருக்கிறார் எஸ்.பி. என்பதை உணர்ந்துகொள்கிறான் வீரா. அதே நேரத்தில் சிறப்பு அதிரடிப்படையுடன் வந்த எஸ்.பி. தேவ் ஆனந்த் ராகினியின் எதிர்ப்பையும் மீறி வீராவைச் சுட்டுக் கொல்வதுடன் முடிகிறது ராவணன்.



ராமனாக எஸ்.பி.கதாபாத்திரத்தையும், சீதையாக ராகினி கதாபாத்திரத்தையும், ராவணனாக வீரா கதாபாத்திரத்தையும், வெண்ணிலாவை சூர்ப்பநகையாகவும், ஃபாரஸ்ட் கார்டு கார்த்திக்கை ஆஞ்சநேயராகவும் நினைக்க வைக்கின்றன காட்சிகளும், வசனங்களும்.



சொந்தக் குரலில் பேசியிருக்கும் ஐஸ்வர்யாவின் முயற்சியைப் பாராட்டலாம். உலக அழகிக்கான தகுதி இப்போதும் இருக்கிறது என சொல்லாமல் சொல்கிறார் ஐஸ்வர்யா. பேசும் கண்களை அத்தனை அழகாய் கேமராவில் சிறை பிடித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் போதும்… அவர் தப்பு செய்ய மாட்டார் என உறுதியாக சொல்லும் போதும் தேவ் மீதான காதலை அழகாக வெளிப்படுத்துகிறார். வீராவின் தங்கை வெண்ணிலாவுக்கு நேர்ந்த கொடுமையை அறியும்போது கண்களில் நீர்வழிய துக்கம் தொண்டை அடைக்க அழும்போது நம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். படம் முழுக்க வந்து மொத்தமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஐஸ்.



வீராவாக வந்து, வர்க்க ரீதியான இடைவெளிகளைப் பற்றி, கூர்மையான வசனங்களை பேசும் விக்ரமின் நடிப்பும் பிரமாதம். உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் விக்ரமுக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. உயிருக்குப் பயப்படாமல் அருவியில் விழுந்துகிடக்கும் ஐஸ்வர்யா மீது உருவாகும் காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். சஞ்சலப்பட்ட மனதோடு கஷ்டப்படுவதை வெளிப்படுத்தும் காட்சிகளில் பின்னியிருக்கிறார்.



எஸ்.பி. மேல எனக்கு பொறாமையா இருக்கு. அவர் முந்திக்கிட்டாரே… என்று தன் விருப்பத்தை ராகினி ஐஸ்வர்யாவிடம் வெளிப்படுத்தும்போதும், இங்கேயே இருந்திடுறீங்களா? என்று கேட்கும் போதும் தன் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகிறார். மேட்டுக்குடி மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. நரம்புகள் முறுக்கேறுகின்றன.



அறிமுகக் காட்சியிலேயே தன்னுடைய ஆஞ்சநேய சேஷ்டைகளைக் காட்டும் கார்த்திக்கும் ரசிக்க வைக்கிறார். கண்டேன் சீதையை என்கிற ரீதியில் எஸ்.பி.யிடம்… பார்த்துட்டேன்… பார்த்துட்டேன் சார் என்று உற்சாகப்படும் இடங்களில் அவரின் டச் தெரிகிறது. சமாதானமாக போயிடு வீரா…இல்லைன்னா அழிவு வரும் என்று சமாதானம் பேசும்போதும் கார்த்திக் அழுத்தமாக தெரிகிறார். காட்சிகள் குறைவென்றாலும் மனதில் நிற்கிறார் பிரியாமணி. பிரபுவுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பதற்கான ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாரோ தெரியவில்லை! பெரிதும் பேசப்பட்ட ரஞ்சிதாவை படத்தில் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.



மொத்த நட்சத்திரப் பட்டாளத்தையும் முந்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். உசிரே போகுதே, காட்டுச் சிறுக்கி என்று பாடல்கள் அத்தனையும் தாளம் போட வைக்கும். பின்னணி இசையில் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார். கவிப்பேரரசுவின் கவிதை வரிகள் உள்ளத்தை அள்ளுகின்றன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் அழகை மொத்தமாக காட்டியிருக்கிறார்கள்.



மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மணிரத்னம். ஓப்பனிங் சீனில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி சீன் வரை தொடர்கிறது. பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன. படம் முழுக்க மணிரத்தினத்தின் ஈடுபாடும், உழைப்பும் வெளிப்படுகிறது. பழங்குடியினரிடம் அதிகார வர்க்கம் காட்டும் மூர்க்கத்தனத்தையும், வெறியையும் காட்சிகளாக்கியிருக்கும் விதத்தில் வீரப்பன் காடு நினைவுக்கு வந்துபோகிறது.



படத்தில் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் நிறைகளில் எல்லாம் மறந்துவிடுகின்றது.



கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

திங்கள், 31 மே, 2010

பில் கேட்ஸ் வாழ்க்கை.

பில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன பில் கேட்ஸின் தற்போதைய வயது 52. உலக பணக்காரர்கள் வரிசையில் “பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்திலேயே இருந்து வருகிறார். 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.


வாழ்க்கை வரலாறு

பில் கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் நாள் அமெரிக்கா, சியேட்ல், வொசிங்டன் (America, Seattle, Washington) எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்ஸ்' அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயாரின் பெயர் 'மேரி மேக்ஸ்வெல்' வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார்.

13 வயதான அக்காலத்திலேயே மென்பொருள் எழுதவும் தொடங்கிவிட்டார்.

1973 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) சென்றார். அங்கே இஸ்டீவ் பாள்மர் என்பவர் இவரது நண்பரானார். இஸ்டீவ் பாள்மரின் வீட்டில் இருந்தே படித்தார். இருப்பினும் இவரது ஆர்வம் கணனி மென்பொருள் எழுதுவதிலேயே இருந்தது.

1975 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப் பின் தனது சிறு வயது நண்பரான பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்ததோ என்னவோ, இவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொருள்களை மும்முரமாக எழுதினர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.

இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள், நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிஸ்டம்) பொருத்தவரையிலும் 85% சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே உள்ளன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் XP" ஒரு புரட்சியையே ஏற்படுத்திய இயங்கு தளமாகும். மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமான “விண்டோஸ் விஸ்டா” 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதனைக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள், 600 கோடி டொலர்கள் செலவில், 5000 கணனி மென்பொருள் வல்லுநர்கள் உழைப்பில் உருவாகியுள்ளது. இதில் 300 இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்ஸ் அவர்களின் தனிமனிதத் திறமையும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கும் அளப்பரியது. பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் "பொருளாதாரத் தந்தை" என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம் என கூறுவோரும் உளர்.


பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்

பில் கேட்ஸ் "கொலின்ஸ் எமிங்வே" (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய “Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றது. பில் கேட்ஸின் “The Road Ahead' எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அதுவும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி, எழுத்துலகிலும் தடம் பதித்தவர் பில் கேட்ஸ்.

இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.

இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்” எனப் பெயரிட்டுள்ளார். "மெலிண்டா" என்பது இவரது துணைவியாரின் பெயராகும்.

வியாழன், 6 மே, 2010

நான்தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக(SPECIAL) மாற வேண்டும் என்பதை எப்படி நிறுத்துவது?

ஏற்கனவே நீ தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்தான். எனவே தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக மாற வேண்டிய அவசியமில்லை. நீ தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன். நீ தனித்தன்மை கொண்டவன். – கடவுள் அதைவிட குறைவாக எதையும் எப்போதும் உருவாக்குவதில்லை. ஒவ்வொருவரும் முழுமையாக தனித்தன்மை கொண்டவர்கள். உன்னைப் போன்ற ஒரு மனிதன் முன்பும் இருந்ததில்லை. உன்னைப் போன்ற ஒரு மனிதன் உனக்கு பின்பும் ஒருபோதும் இருக்க போவதில்லை. கடவுள் இந்த வடிவத்தை முதலும் கடைசியுமாக எடுத்திருக்கிறார். எனவே தனிப்பட்ட சிறப்பு உடையவனாக மாற முயற்சி செய்ய வேண்டியதில்லை. நீ ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறாய். நீ தனிப்பட்ட சிறப்புடையவனாக மாற முயற்சி செய்தால் நீ சாதாரணமாகி விடுவாய். உன்னுடைய முயற்சி தவறான புரிதலில் வேர் கொண்டுள்ளது. அது குழப்பத்தை உண்டு பண்ணும். ஏனெனில் நீ தனிப்பட்ட சிறப்புடையவனாக முயற்சி செய்யும்போது நீ ஒரு விஷயத்தை ஏற்கனவே முடிவு செய்துவிட்டாய். அது என்னவெனில் நீ தனிப்பட்ட சிறப்புடையவன் அல்ல என்பதே. நீ ஏற்கனவே சாதாரணமானவனாகி விட்டாய். நீ அந்த புள்ளியை தவற விட்டுவிட்டாய்.
நீ சாதாரணமானவன் என்பதை நீ ஒருமுறை முடிவு செய்து விட்டால், நீ எப்படி தனிப்பட்ட சிறப்புடையவனாக முடியும்?
நீ அதையும், இதையும் முயற்சி செய்வாய்! நீ சாதாரணமானவனாகவே இருப்பாய். ஏனெனில் உனது அடித்தளம், உனது அஸ்திவாரம் தவறானது. நீ தையல்காரனிடம் சென்று மேலும் சிக்கலான ஆடைகளை தைத்துக் கொள்ளலாம். உன்னுடைய தலை அலங்காரத்தை நீ திரும்பவும் செய்து கொள்ளலாம். நீ அழகு பொருட்களை உபயோகப்படுத்தலாம். நீ ஒரு சில விஷயங்களை கற்றுக் கொண்டு மேலும் அறிவாளியாகலாம். நீ வரைந்துவிட்டு நீ ஒவியன் என எண்ணிக் கொள்ளலாம். நீ ஒரு விஷயத்தை செய்து புகழடையலாம். ஆனால் அடி ஆழத்தில் நீ சாதாரணமானவன் என்பதை நீ அறிவாய். இவை அனைத்து விஷயங்களும் வெளியில் உள்ளன. நீ எப்படி உனது சாதாரண ஆத்மாவை அசாதாரண ஆத்மாவாக மாற்றமுடியும்? அதற்கு வழியே இல்லை.
கடவுள் எந்த வழியும் கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருபோதும் சாதாரண ஆத்மாக்களை படைத்ததில்லை. எனவே அவர் உன் பிரச்சனையை குறித்து யோசிக்க இயலாது. அவர் உனக்கு தனிப்பட்ட அசாதாரணமான ஆத்மாவை அளித்துள்ளார். அவர் ஒருபோதும் வேறுயாருக்கும் அதனை அளித்ததில்லை. இது உனக்காகவே உருவாக்கப்பட்டது.
நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால் உன் தனிப்பட்ட சிறப்பை சரியாக அடையாளம் கண்டுகொள். அதனை பெற வேண்டிய அவசியமில்லை, அது ஏற்கனவே அங்கு உள்ளது. அதனை அடையாளம் கண்டுகொள். உனக்குள் சென்று அதனை உணர். யாருடைய கைரேகையும் உன்னுடைய கைரேகை போன்றதல்ல. கைரேகை கூட இல்லை! யாருடைய கண்ணும் உன்கண்களை போன்றதல்ல, யாருடைய குரலும் உன்னைப் போன்றதல்ல, யாருடைய வாசனையும் உன்னை போன்றதல்ல. நீ ஒரு அப்பட்டமான தனிவிதி. உன்னை போன்ற இரண்டாவது ஆள் எங்கும் இல்லை. இரட்டை குழந்தைகள்கூட வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. எவ்வளவுதான் ஒன்றுபோல தெரிந்தாலும், அவர்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு வழிகளில் செல்கிறார்கள். அவர்கள் மாறுபட்ட வழிகளில் வளர்கிறார்கள். இவர்கள் மாறுபட்ட தனித்தன்மையை பெறுகின்றனர்.
இந்த அடையாளம் காணுதல் தேவை.
நீ கேட்கிறாய்! நான் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவனாக மாறவேண்டும் என்பதை எப்படி நிறுத்துவது,
வெறுமனே உண்மையை கேள். உன்னுடைய இருப்பினுள் சென்று பார். தனிப்பட்ட சிறப்புடையவனாய் இருக்கும் முயற்சி மறைந்துவிடும். நீ தனிப்பட்ட சிறப்புடையவன் என்பதை நீ அறியும்பொழுது முயற்சி நின்றுவிடும். நீ “நான் ஏதாவது ஒரு முறையை கொடுக்கவேண்டும். அதன்மூலம் தனிப்பட்ட சிறப்புடையவனாக இருப்பதை நிறுத்திவிடலாம்” என விரும்பினால், பிறகு அந்த முறை தொந்தரவு ஏற்படுத்தும். திரும்பவும் நீ ஏதோ ஒன்று செய்ய முயற்சிக்கிறாய். திரும்பவும் நீ ஏதோ ஒன்றாக முயற்சிக்கிறாய். முதலில் தனிப்பட்ட சிறப்புடையவனாய் இருக்கமுயற்சி செய்தாய். இப்போது தனிப்பட்ட சிறப்புடையவனாய் இல்லாதிருக்க முயற்சி செய்கிறாய். ஆனால் முயற்சிக்கிறாய்....முயற்சிக்கிறாய். ஏதோ ஒரு வழியில் மேம்படுத்த முயற்சிக்கிறாய். ஆனால் நீயாக இருப்பதை நீ ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.
என்னுடைய முழு செய்தியும் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை ஏற்றுக் கொள். ஏனெனில் கடவுள் அதனை ஏற்றுக்கொள்கிறார். கடவுள் உனக்கு மதிப்பளிக்கிறார், நீ உனது இருப்பிற்கு இன்னும் மதிப்பளிக்கவில்லை. கடவுள் உன்னைப் போல இருப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார் என அதிக ஆனந்தம் கொள். கடவுள் இருப்பதற்கு உன்னை தேர்ந்தெடுக்கிறார், அவருடைய உலகத்தை பார்ப்பதற்கு, அவருடைய இசையை கேட்பதற்கு, அவருடைய நட்சத்திரங்களை பார்ப்பதற்கு, அவருடைய மக்களை பார்ப்பதற்கு, நேசிப்பதற்கு, நேசிக்கப்படுவதற்கு – இன்னும் உனக்கு என்ன வேண்டும்? கொண்டாடு! நான் திரும்ப திரும்ப கூறுகிறேன், விழிப்புணர்வுடன் அதனை கொண்டாடு.! அந்த விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டத்தில் மெதுமெதுவாக, நீ தனிப்பட்ட சிறப்புடையவன் என்பது உனக்குள் மின்னலைப் போல வெடிக்கும்.
ஆனால் நினைவில் கொள். அது மற்றவர்களோடு ஒப்பிட்ட அகங்காரமாக இருக்காது. இல்லை - அந்த நொடியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சிறப்புடையவர்கள் என்பதை நீ அறிவாய். யாரும் சாதாரணமானவர்கள் அல்ல.
எனவே இதுதான் வரையறை. நீ நான் தனிப்பட்ட சிறப்புடையவன் என நினைத்தால், அந்த ஆணை விடவும், அந்த பெண்ணை விடவும் சிறப்புடையவன் என நினைத்தால் நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அது ஆணவத்தின் விளையாட்டு. ஒப்பிட்டு பார்த்துவருவது தனிப்பட்ட சிறப்பல்ல. யாரோடும் ஒப்பிடுவதால் வருவது சிறப்பல்ல. நீ இருப்பதை போலவே இருப்பதுதான் தனிப்பட்ட சிறப்பு.
ஒரு ஜென் குரு கேட்கப்பட்டார். ஒரு பேராசிரியர் அவரை பார்ப்பதற்கு வந்திருந்தார். அப்போது கேட்டார், “நான் ஏன் உங்களை போல இல்லை? இதுதான் என்னுடைய ஆசை! நான் ஏன் உங்களை போல இல்லை? நான் ஏன் உங்களை போல மெளனமாக இல்லை? நான் ஏன் உங்களை போல ஞானம் பெறவில்லை?”
குரு, “காத்திரு, மெளனமாக அமர்ந்திரு. கவனி, என்னை கவனி, உன்னை கவனி, மற்ற அனைவரும் சென்றபிறகு அப்போதும் கேள்வி இருந்தால் நான் அதற்கு பதிலளிக்கிறேன்.” என கூறினார். முழுநாளும் மக்கள் வந்து சென்றவண்ணம் இருந்தனர், சீடர்கள் கேள்வி கேட்டனர். பேராசிரியர் மிக மிக அமைதியிழந்துகொண்டிருந்தார். – நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இந்த மனிதர் எல்லோரும் சென்றபிறகு என்று கூறியுள்ளார். பிறகு சாயங்காலம் வந்து விட்டது. இப்போது யாருமில்லை. போராசிரியர் இப்போது, “இதுபோதும், நான் நாள் முழுவதும் காத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கேள்வி என்னவாயிற்று?” எனக் கேட்டார்.
நிலவு வெளிவந்துகொண்டிருந்தது, அது ஒரு பௌணர்மி இரவு. குரு, “இன்னும் உனக்கு விடை கிடைக்கவில்லையா?” எனக் கேட்டார்.
பேராசிரியர், “ஆனால் நீங்கள் இன்னும் என் கேள்விக்கு பதிலளிக்க வில்லையே” எனக் கேட்டார்.
குரு சிரித்தார், “நான் பலரும் கேட்ட கேள்விக்கு முழு நாளும் விடையளித்துக் கொண்டிருந்தேன். நீ கவனித்திருந்தால் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் வா, நாம் தோட்டத்திற்கு போகலாம். தோட்டத்தில் முழு நிலவு உள்ளது. மற்றும் இது ஒரு அழகான இரவு,”. அங்கு குரு அவரை பார்த்து கூறினார். “இந்த மரத்தை பார், ஒரு மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளது, கிட்ட தட்ட நிலவை தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நிலவு அதன் கிளைகளுடன் பின்னியுள்ளது. இந்த சிறிய குத்து செடிகளை பார்.”
ஆனால் பேராசிரியர், “நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் என்னுடைய கேள்வியை மறந்து விட்டீர்களா?” எனக் கேட்டார்.
குரு, “நான் உங்களுடைய கேள்விக்குதான் பதிலளித்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தோட்டத்தில் இந்த மரமும் இந்த குத்துசெடியும் வருடகணக்காக இருக்கின்றன. இந்த குத்துசெடி, இந்த மரத்தை பார்த்து நான் ஏன் உன்னைப் போல இல்லை என்றோ, இந்த மரம் இந்த குத்துசெடிகளை பார்த்து நான் ஏன் உன்னைப் போல இல்லை என்றோ கேட்டு நான் பார்த்ததில்லை. மரம் மரமாக இருக்கிறது. குத்துசெடி குத்துசெடியாக இருக்கிறது. அவை இரண்டும் அவைகளாக இருப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றன.” எனக் கூறினார்.
நான் நானாக இருக்கிறேன், நீ நீயாக இருக்கிறாய். ஒப்பிடுதல் பிரிவினையை கொண்டுவருகிறது. ஒப்பிடுதல் குறிக்கோளை கொண்டு வருகிறது, ஒப்பிடுதல் நகல் தன்மையை கொண்டு வருகிறது. நான் ஏன் உங்களைப் போல இல்லை என நீ கேட்டால் பிறகு நீ என்னைப் போல இருக்க தொடங்குவாய். அது உனது முழு வாழ்க்கையையும் வாழாமல் இருப்பதாகும். நீ நகல்தன்மை உடையவனாகிறாய், ஒரு நகலாக ஆகிவிடுவாய். நீ நகல்தன்மை உடையவனாக ஆகும்போது நீ உன்மேல் உனக்கு இருக்கும் எல்லா சுயமரியாதையையும் இழந்துவிடுவாய்.
தன்னை மதிக்கும் ஒரு மனிதரை கண்டுபிடிப்பது மிகவும் அபூர்வம். ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது ஏன் வாழ்வுக்கு மதிப்பு இல்லை – உன்னுடைய சொந்த வாழ்விற்க்கு மதிப்பு இல்லை உன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு நீயே மதிப்பளிக்கவில்லை எனில் மற்றவர்களுக்கு எப்படி மதிப்பு இருக்கும் உன்னுடைய சொந்த இருப்பை நீ மதிக்கவில்லை எனில் நீ எப்படி ரோஜா இதழை, பைன் மரத்தை, மற்றும் நிலவை, மக்களை மதிக்க முடியும்?
நீ எப்படி உன்னுடைய குருவை, தந்தையை, தாயை, நண்பரை, உனது மனைவியை, கணவரை மதிக்க முடியும்? நீ உன்னை மதிக்காதபோது, உனது குழந்தைகளை எப்படி மதிக்கமுடியும்?
தன்னை மதிக்கும் ஒரு மனிதரை காண்பது மிகவும் அபூர்வம்.
ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது? – ஏனெனில் உனக்கு நகலாக இருக்க சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது – சிறு வயதிலிருந்தே ஏசுவைப் போல இரு அல்லது புத்தரைப் போல இரு என சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் ஏன் புத்தரைப் போல ஆக வேண்டும்? புத்தர் உன்னைப் போல ஆக வில்லை, புத்தர் புத்தராக இருந்தார். ஏசு ஏசுவாக இருந்தார். கிருஷ்ணர் கிருஷ்ணராக இருந்தார். நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்? நீ என்ன தவறு செய்தாய்? நீ என்ன பாவம் செய்தாய்? நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்? கடவுள் ஒருபோதும் இன்னொரு கிருஷ்ணரைப் படைக்கவில்லை. அவர் ஒருபோதும் இன்னொரு புத்தரைப் படைக்கவில்லை. இன்னொரு ஏசு - ஒருபோதும் இல்லை ஏனெனில் அவர் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை படைக்க விரும்புவதில்லை. அவர் ஒரு படைப்பாளி. அவர் ஒரு வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல – ஒரு கார் வருகிறது, அதே கார் இன்னொன்று, இன்னொன்று என கார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லாம் ஒன்று போலவே வரிசைகிரமமாக வருகின்றன. கடவுள் வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல. அவர் உண்மையான படைப்பாளி. அவர் ஒருபோதும் அதே விஷயத்தை திரும்ப படைப்பதில்லை.
அதே விஷயம் மதிப்புடையதாக இருக்காது. நினைத்துப் பாருங்கள். ஒரு கிருஷ்ணர் திரும்பவும் நடக்கிறார். அதே விதமான மனிதன். அவர் ஒரு கோமாளியை போல தோற்றமளிப்பார். அவர் ஒரு சர்க்கசில் மட்டுமே இடம் பெறுவார். வேறு எங்குமல்ல, ஏனெனில் திரும்ப படைக்கப் பட்டவர். அவர் திரும்பவும் கீதையை கூறுவார் – அர்ச்சுனன் இருக்கிறானோ, இல்லையோ, மகாபாரத போர் நடக்கிறதோ இல்லையோ – ஆனால் அவர் கீதையை திரும்ப சொல்லியாக வேண்டும். அவர் அவருடைய ஆடைகளோடு நடப்பார். அது மிகவும் பொருத்தமற்று காட்சியளிக்கும்.
ஏசு உங்களிடையே இருந்தால், திரும்பவும் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அவர் பொருந்த மாட்டார். அவர் காலாவதியானவராக இருப்பார். அவர் காட்சிப் பொருளாக இருப்பார். அவர் அருங்காட்சியகத்தில் மட்டுமே உபயோகமாக இருப்பார். வேறு எங்குமல்ல.
கடவுள் ஒருபோதும் ஒரு விஷயத்தை திரும்ப செய்வதில்லை. ஆனால் நீ எப்போதும் வேறொருவராக மாற கற்றுக் கொடுக்கப் படுகிறாய். வேறொருவராக மாறு, பக்கத்து வீட்டுப் பையனை போல மாறு எவ்வளவு புத்திசாலிதனமாக இருக்கிறான் அவன் என்று பார். அந்த பெண்ணை பார் எவ்வளவு அழகாக நடக்கிறாள்! அதுபோல இரு. நீ எப்போதும் மற்றவரை போல இருக்கவே கற்றுக் கொடுக்கப் படுகிறாய். நீ நீயாக இரு என யாரும் உனக்கு சொன்னதில்லை. உன்னுடைய இருப்பின் மேல் மரியாதை கொள். அது கடவுளின் பரிசு!
ஒருபோதும் நகலாகாதே. அதைத்தான் நான் உனக்கு சொல்கிறேன். ஒருபோதும் நகலாகாதே. நீ நீயாக இரு! அந்த அளவிற்கு கடவுளிடம் நீ கடன் பட்டிருக்கிறாய். நீ நீயாக இரு. நீ ஆணித்தரமாக நீயாக இரு. பிறகு நீ தனிச் சிறப்பு வாய்ந்தவன் என்பதை நீயே அறிவாய். கடவுள் உன்னை அளவுக்கதிகமாக நேசிக்கிறார். அதனால்தான் நீ இருக்கிறாய். அதனால்தான் நீ உருவாகி இருக்கிறாய். இல்லாவிடில் நீ உருவாகி இருக்க மாட்டாய். அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார் என்பதற்கு அடையாளம் அது.
ஆனால் உன்னுடைய தனிச்சிறப்பு மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதனால் வருவதல்ல. நீ உன்னுடைய பக்கத்து வீட்டுக் காரர்களை விடவும், நண்பர்களை விடவும், உன்னுடைய மனைவி அல்லது கணவனை விடவும், சிறந்தவன் என்று பொருளல்ல. நீ தனிச்சிறப்பு கொண்டவன். ஏனெனில் நீ தனித்தன்மை கொண்டவன். ஏனெனில் நீ மட்டுமே இருக்கிறாய். உன்னைப் போல நீ மட்டுமே இருக்கிறாய். அந்த விதத்தில் அந்த புரிதலில் தனித்தன்மை கொண்டவனாக மாறும் முயற்சிகள் மறைந்து விடும்.
நீ தனிச்சிறப்பு கொண்டவனாக மாற மேற்கொள்ளும் உன்னுடைய முயற்சிகள் அனைத்தும் ஒரு பாம்பிற்கு கால் வைப்பதைப் போன்றது. நீ பாம்பை கொன்று விடுவாய். நீ நினைக்கிறாய், உன்னுடைய கருணையின் காரணமாக நீ பாம்பிற்கு கால்களை பொருத்துகிறாய். பாம்பு பாவம்! காலில்லாமல் அது எப்படி நடக்கும்? பாம்பு பூரானின் பார்வையில் விழுந்ததை போல! பூரான் பாம்பை பார்த்து கருணை கொள்கிறது. அது நினைக்கிறது. எனக்கு நூறு கால்கள் உள்ளன. பாம்பு பாவம் பாம்பிற்கு கால்களே இல்லை! அது எப்படி நடக்கும்? அதற்கு ஒரு சில கால்களாவது தேவை. பூரான் அறுவை சிகிச்சை செய்து ஒரு சில கால்கள் பாம்பிற்கு பொருத்தினால் பாம்பை அது கொன்றுவிடும். பாம்பு அது இருப்பதை போலவே நன்றாக இருக்கிறது. அதற்கு கால்கள் தேவை இல்லை.
நீ எப்படி இருக்கிறாயோ, அதுவே நல்லது. இதைத்தான் நான் தன்னுடைய இருப்பிற்கு தரும் மரியாதை என்று கூறுகிறேன். தனக்கு மரியாதை தருவது என்பது ஆணவத்தோடு எந்த சம்பந்தமும் இல்லாதது. நினைவில் கொள். தனக்கு மரியாதை செலுத்துவது சுய மரியாதை அல்ல. தனக்கு மரியாதை செலுத்துவது என்பது கடவுளுக்கு மரியாதை. அது படைத்தவனுக்கு மரியாதை செலுத்துவது. ஏனெனில் நீ ஒரு ஓவியம். ஓவியத்திற்கு மரியாதை செலுத்துவதன் மூலம் நீ ஓவியம் வரைந்தவருக்கு மரியாதை செலுத்துகிறாய்.
மரியாதை செலுத்து, ஏற்றுக் கொள்.! அடையாளம் கண்டு கொள்! இந்த முட்டாள் தனமான தனிச்சிறப்பு வாய்ந்தவனாக மாறும் முயற்சிகள் அனைத்தும் மறைந்து விடும்.

செவ்வாய், 4 மே, 2010

சிங் இஸ் கிங்

அது ஒரு வெள்ளிக்கிழமை, மாலை நேரம்.

டெல்லியின் சர்தார் தெருவில் வார விடுமுறைக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் பெயருக்கு ஒன்றிரண்டு சீக்கியர்கள் இருந்தனர். அதில் சரண்சிங்கும் ஒருவர். வெள்ளி மாலையை மசாலா கலந்த தந்தூரி சிக்கனுடன் கொண்டாடுவது அவரது வழக்கம். அன்றும் வழக்கம் போல் தன் சமையலை ஆரம்பித்தார். மசாலா வாசம் மூக்கைத் துளைத்தது. திடீரென, படபடவென்று சிங்கின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. சிக்கனை பங்கு போட நண்பர்கள் யாரோ வந்துவிட்டார்கள் என நினைத்தவாறே கதவைத் திறக்க, அங்கே கிறிஸ்தவ பாதிரியார் நின்றிருந்தார்.

அவரை வரவேற்று விஷயம் என்னவென்று கேட்டார் சிங்.

சற்றே தயக்கத்துடன் பாதிரியார் சொல்ல ஆரம்பித்தார்,"கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமை சிக்கன் உண்ணக் கூடாது. உங்கள் தந்தூரி வாசம் எங்களை சிக்கன் பற்றி எண்ண வைக்கிறது"

ஏதோ உளறுகிறார் என நினைத்த சிங்கை, விதவிதமான கதைகள், பிரசங்கங்களைக் கூறி கிறிஸ்தவராக மாற கட்டாயப்படுத்தினார் பாதிரியார். சிக்கனை நினைத்தபடியே எல்லாவற்றுக்கும் 'சரி' என தலையாட்டிக் கொண்டிருந்த சிங், அதற்கும் தலையாட்டி விட்டார்.

உடனே புனித நீரை எடுத்த பாதர், "சீக்கியராக பிறந்து, சீக்கியராக வளர்ந்த நீங்கள், தேவலாயப் புனித நீர் உங்கள் மீது தெளிக்கப்படுவதன் மூலம் கிறிஸ்தவராகிறீர்கள்" எனக் கூறி நீரைத் தெளித்துவிட்டு கிளம்பினார்.

ரொம்ப நாட்களாய் சிங்கின் தந்தூரியை நினைத்துக் கொண்டு ஜெபம் சொல்லிக் கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள், இனி நிம்மதியாய் தேவனை ஆராதிக்கலாம் என நிம்மதிக் கொண்டனர்.

அடுத்த வெள்ளி மாலை.

மீண்டும் சிங்கின் தந்தூரி வாசம். கோபமடைந்த கிறிஸ்தவர்கள், பாதிரியாருடன் சிங்கின் வீட்டிற்கு வந்தனர்.

"கத்தோலிக்கராக மாறிவிட்ட நீங்கள், இன்று சிக்கன் சாப்பிடக் கூடாதல்லவா? ஏன் மரபை மீறுகிறீர்கள்?" என பாதிரியார் கேட்க, வந்திருந்த அனைவரையும் அமைதியாய் ஒரு முறை பார்த்த சரண் சிங், பாதிரியாரின் கையிலிருந்த புனித நீரை சிக்கன் மீது தெளித்து,"சிக்கனாகப் பிறந்து, சிக்கனாக வளர்ந்த இந்த ஆன்மா, தேவனின் புனித நீர் தெளிக்கப்படுவதன் மூலம் தக்காளியாகவும், உருளைக் கிழங்காகவும் மாற்றப்படுகிறது" என்று கூறிவிட்டு சிக்கனைக் கையிலெடுத்து சுவைக்கத் தொடங்கினார்.

திங்கள், 3 மே, 2010

பிசாசை துரத்து...

ஒருவனுடைய மனைவி மிகவும் நோய்வாய் பட்டு மருத்துவமனையில் இருந்தாள். அவள் இறக்கும் தருவாயில் தன்னுடைய கணவனிடம் "ஐ லவ் யூ சோ மச்! உன்னை விட்டுவிட்டு போகுவதற்கு மனம் இல்லை. உயிரோடு இருக்க மாட்டேன் என்பது நிச்சயம். ஆனால் எனக்கு நீ துரோகம் செய்வது பிடிக்காது. எனக்கு ஒரு சத்தியம் செயது கொடுக்க வேண்டும். நான் செத்த பின்பு வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்" என்றுக் கேட்டாள். கணவனும் அவள் கேட்டவாறே சத்தியம் செய்து கொடுத்தான். "சத்தியத்தை மீறி திருமணம் செய்தால் ஆவியாக வந்து உன்னை நான் துன்புறுத்துவேன்" என்று பயமுறுத்தி விட்டு செத்தாள்.

பல மாதங்கள் தன்னுடைய மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை தவறாமல் காத்து வாந்தான். ஆனால் முடிவில் எதேச்சையாக சந்தித்த ஒரு பெண்ணிடம் மனதை பறிகொடுத்தான். இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்யப் பட்டது. அன்று இரவு ஆவியாக அவனுடைய மனைவி வந்தாள். அவன் தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்று மிகவும் குறைபட்டுக் கொண்டாள். அதன் பிறகு ஒவ்வொரு இரவும் அவன் தூங்குபோது வந்து அவனை தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். எதிர்கால மனைவியுடன் அவன் தனிமையில் பேசிய ஒவ்வொன்றையும் அந்த பிசாசு ஒரு வார்த்தை கூட மாறாமல் திருப்பிக் கூற ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல அதனுடைய தொந்திரவு அதிகரிக்க ஆரம்பித்தது அவனால் கொஞ்சம் கூட தூங்க முடியவில்லை.

பக்கத்து கிராமத்தில் இருந்த ஸென் ஆசிரியர் ஒருவரிடம் நடந்த கதை எல்லாவற்றையும் கூறி தன்னை அந்தப் பிசாசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். "மிகவும் புத்திசாலியான பிசாசாக இருக்கும் போலிருக்கிறதே" என்று கதையைக் கேட்ட ஸென் ஆசிரியர் அவனைப் பார்த்துக் கூறினார். "ஆமாம், அது நான் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அறிந்து வைத்து இருக்கிறது. நான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நினைவு வைத்திருந்து என்னிடமே திரும்ப சொல்கிறது" என அசிரியரைப் பார்த்து பரிதாபமாக கூறினான். "அந்த பிசாசை நாம் பாராட்டமல் இருக்க முடியாது. இருந்தாலும் நான் கூறுவைதைப் போல் அடுத்த முறை செய்" என்று அவன் காதில் ஒரு விஷயத்தைக் கூறினார்.

அன்று இரவு வந்த பிசாசிடம், ஸென் ஆசிரியர் கூறியவாறு "நீ உண்மையிலேயே புத்திச்சாலியான பிசாசு" என்று கூறியவன், மேலும் தொடர்ந்து "உன்னிடமிருந்து நான் எதையும் மறைக்க முடியாது. நீ என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் அளித்தால், நான் என்னுடைய நிச்சய தார்த்தை நிறுத்தி விடுகிறேன். மேலும் வாழ்நாள் முழுவதும் தனி மனிதனாகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறேன்" என்று அவனுடைய முன்னாள் மனைவி இன்னாள் பிசாசினைப் பார்த்துக் கூறினான். "உன்னுடைய கேள்வியைக் கேள்", என்று பிசாசு கூறியது தான் தாமதம் கீழே ஒரு பெரிய பின்ஸ் மூட்டையில் இருந்து ஒரு கைப்பிடி பின்ஸை எடுத்துக் கொண்டு, "என்னுடைய கையில் எத்தனை பின்ஸ் இருக்கிறது என்று சொல்" என்றான்.

(அந்த நிமிடமே அந்தப் பிசாசு அவன் கண்களிலிருந்து மறைந்தது. அன்று சென்றதுதான் என்றுமே திரும்பி வரவில்லை.

இந்தக் கதையிலிருந்து நமக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது.
1. உன்னால் காப்பற்ற முடியாத சத்தியத்தை தராதே.
2. சத்தியத்தை கொடுத்த பின்பு மீற முயற்ச்சிக்காதே. உன் ஆழ்மனமே உன்னைக் காட்டிக் கொடுத்து விடும்.

மிகவும் அன்பான மனைவி தான் இறந்தபின்பு தன்னுடைய கணவன் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணாமல் சுய நலத்திற்காக ஒரு வரம் கேட்கிறாள். சத்தியம் செய்து கொடுத்த கணவனோ அதனைக் காப்பாற்ற முடிய வில்லை. உண்மையில் அங்கு ஒரு பிசாசும் இல்லை. அவன் செய்த அனைத்து செயல்களும் அவனுக்கு தெரியும். அவன் தன்னுடைய எதிர்கால மனைவியிடம் பேசிய ஒவ்வொன்றும் அவனுக்கு ஞாபகத்தில் இருக்கும்.

ஆழ்ந்த உறக்கத்தில் அவனுடைய ஆழ்மனது விழித்துக் கொள்கிறது. தன்னுடைய மனைவிக்கு கொடுத்த வாக்கை மீறுகிறோமே என்ற மன அழுத்தமே பிசாசாக உருவேடுக்கிறது. அதனால் மனைவிக்கு பிடிக்காமல் செய்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவன் கண்முன் தோன்றி அவனைத் தூக்கம் வரவிடாமல் அலைகழிக்கிறது.

நமது தன்னொளி பெற்ற ஸென் ஆசிரியர் இதனை புரிந்து கொள்கிறார். கைப்பிடி பீன்ஸை எடுத்து எத்தனை இருக்கிறது எனக் கேட்க சொல்கிறார். உண்மையில் பீன்ஸை எடுத்த அவனுக்கே எத்தனை பீன்ஸ் அவனுடைய கைப்பிடியில் இருக்கிறது என்று தெரியாது. அதணால் அவனுக்கு தெரியாத எந்த ஒரு விஷயமும் ஆழ்மனதிற்கும், பிசாசிற்கும் தெரியாமல் போகிறது. அதணால் அன்றிலிருந்து பதில் சொல்லத் தெரியாத பிசாசு வரவில்லை. ஸென் ஆசிரியர் கொடுத்த ஆழ்மனப் பயிற்சி ஒழுங்காக வேலை செய்கிறது.)

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புரிய வில்லை.


எதை புரிந்தாலும் புரியாவிட்டாலும்.. எந்த நிலையில் இருந்தாலும்.. அந்த நிலையே நீ அடைந்த நிலை.

பல வருடங்கள் பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் ஆசிரியர் டைனின் காடாகிரி ரோஸியிடம் வந்து "நீங்கள் முன்பெல்லாம் சொற்பொழிவு ஆற்றும் போது ஏதோ புரியும் படி இருக்கும், ஆனால் இப்பொழுது எல்லாம் நீங்கள் பேசுவது என்ன என்றே புரிய வில்லை" என்று கூறினான்.

ஆசிரியர் காடாகிரி அசட்டுத் தனமான முகத்துடன் சிரித்துக் கொண்டே, "கடைசியாக, நீ எதையோ புரிந்து கொள்வது போல் தெரிகிறதே" என்றார்.

எப்படி சொல்லுகிறாய்.


ருடாகிஜி மடத்தில் பயிற்சிக்காக வந்திருந்த அமெரிக்கர்கள் பிளிப் காப்லேவையும், பெர்னார்டு பிளிப்பையும் தனியாக அழைத்து சோயன் நாககாவா ரோஸி பின்வருமாறு கேட்டார்.
"இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்?"

காப்லே, "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று இயேசு கூறியதாக பதில் சொன்னார்.
"இல்லை" என்று கத்திய சோயன் ரோஸி, பிளிப்பினை நோக்கி, "இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்" என்று மறு படியும் கேட்டார்.
"காப்லே கூறியது சரியேன்றே எனக்குப் படுகிறது" என்று கூறிய பிளிப், "அவர் சொன்னார், 'என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?' " என்று பதில் கூறினார்.

"இல்லை" என்று மறுத்து அவர்கள் கூறிய பதிலினை ஏற்றுக் கொள்ள வில்லை சோயன் ரோஸி.

பொருமையை இழந்து "அப்படி என்றால் அவர் என்ன தான் கூறினார்?" என்று இருவரும் கேட்டார்கள்.

சோயன் ரோஸி தன்னுடைய கரங்களை மேலே தூக்கி வானத்தைப் பார்த்து கதறலான வேதனையுற்ற குரலுடன், "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று அழுது கொண்டே கத்தினார்.

வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை.


ஆசிரியர் மொகுஜென் தன்னுடைய வாழ் நாளில் சிரித்ததோ, புன்னகை செய்ததோ கிடையாது. எப்பொழுதும் முகத்தினை கடுமையாக வைத்துக் கொண்டிருப்பார். இறக்கும் தறுவாயில் இருந்த போது தன்னுடைய நம்பிக்கைக் கூறிய சீடர்களை அழைத்து, "நீங்கள் கடந்த பத்து வருடமாக ஸென்னினை என்னிடம் கற்று வருகிறீர்கள். நீங்கள் ஸென்னைப் பற்றி புரிந்து கொண்டதை பற்றி என்னிடம் விளக்கிக் காட்டுங்கள். யார் ஒருவன் மிகத் தெளிவாக விளக்குகிறானோ அவனே எனக்கு பிறகு இந்த மடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும். அவனுக்கே என்னுடைய மேலங்கியும், திருவோட்டையும் தருவேன்" என்று கூறினார்.

யாரும் பதில் கூறாமல், மொகுஜென்னுடைய கடுமையான முகத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வேகு காலமாக ஆசிரியருடன் இருந்த சீடன் என்சோ, ஆசிரியரின் படுக்கையின் அருகே வந்தான். அருகில் இருந்த மருந்துக் கோப்பையை ஆசிரியரை நோக்கி நகர்த்தினான். அதுதான் அவன் ஆசிரியருக்கு அளித்த பதில்.

அதனைப் பார்த்த ஆசிரியரின் முகம் முன்பைவிட கடுமையானது. "இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது" என்று நம்பிக்கைத் தேயந்த குரலில் கேட்டார்.

என்கோ மறுபடியும் படுக்கையின் அருகே சென்று கோப்பையை முன்பிருந்த இடத்திற்கே நகர்த்தினான்.

முகம் மலர்ந்த ஆசிரியர் மொகுஜென் அழகிய புன்னகையுடன். " பொருக்கி" என்று செல்லமாக திட்டியவர், "என்னுடன் இத்தனை வருடங்களாக இருந்திருந்தாலும் என்னுடைய முழு உடலையும் நீ பார்த்ததில்லை. என்னுடைய மேலங்கியையும், திருவோட்டையும் எடுத்துக் கொள். அது உன்னையேச் சேரும்" என்று கூறினார்.

அன்பும் துக்கமும் எங்கே?


ஹுய்சூ தன்னுடைய நண்பனும் டாவோயிஸத் துறவியுமான சூயாங்சூவினைப் பார்த்து அவருடைய அன்பு மனைவியின் மறைவிற்காக ஆறுதல் கூற வந்திருந்தார்.

சூயாங்சூவினைப் பார்த்தவர் திகைத்து விட்டார். அவர் குடிசைக்கு வந்த போது சூயாங்சூ கால்களுக்கு இடையில் மரத்தினால் ஆன பாத்திரத்தினை வைத்துக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டும், இராகம் ஒன்றினை உருவாக்கி பாட்டுப் பாடிக் கொண்டும் இருந்தார்.

ஹுய்சூ "இத்தனை வருடங்கள் உன்னுடைய அன்பான மனைவியுடன் திருப்திகரமாக குடும்பம் நடத்தி வந்தாய். உன்னுடையக் குழந்தைகளைச் சீராட்டி நல்ல முறையில் வளர்த்தாள். அவளுடைய மறைவிற்காக துக்கப் பட்டு கண்ணீர் சிந்தாவிட்டாலும் பராவாயில்லை ஆனால் தாளம் போட்டுக் கொண்டு பாட்டு பாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு சகிக்கவில்லை" என்று தன்னுடைய மனதில் தோன்றிய கோபத்தினை வார்த்தைகளாக வெளிப் படுத்தினார்.

அதற்கு சூயாங்சூ, "அப்படி இல்லை, நான் ஒரு சாதாரண மனிதன், அவள் இறந்த போது கண்ணீர் விட்டு துக்கப் பட்டேன். ஆனால் அவள் இந்த பூமியில் வருவதற்கு முன்பே எங்கோ ஜோதியாய் இருந்தாள். அந்த சமயத்தில் அவளுக்கு உடல் இல்லை. காலங்கள் கடந்த போது அவளுடைய ஆத்மாவுடன் பூத உடல் சேர்க்கப் பட்டது. சதையும், எலும்புகளும் சேர்ந்த ஆத்மாவுடன் கலந்து பிறந்தாள். எந்த ஒன்று இந்த உலகில் அவளுக்கு வாழ்வு கொடுத்ததோ அந்த ஒன்று அவளுக்கு மரணத்தினையும் கொண்டு வந்தது. குளிர்காலத்தினைத் தொடர்ந்து இளவேனிற்காலம் வருகிறது. இளவேனிற்காலம் கோடைக்காலத்தினைக் கொடுக்கிறது. கோடையும் வசந்தகாலமாக மாறுகிறது. வசந்தம் குளிர்காலமாக மாறுகிறது. இயற்கை எப்படி பருவகாலங்களைக் மாறி மாறி கொடுக்கிறதோ அதேப் போல் அவளது வாழ்வும் சாவும் மாறி மாறி வந்தது. இப்பொழுது பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடையில் எங்கோ அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கிறாள். இந்த இயற்கையின் விதியினை அறிந்த பின்பும் நான் ஏன் துக்கப் பட வேண்டும். அறியாமையில் இருப்பதில் அர்த்தம் இல்லை." என்று அமைதியுடன் பதில் கூறினார்.

பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர்.


ஆழமான தன்னொளி பெற்ற ஸாட்ஸுஜோ தன்னுடைய பேத்தி இறந்த போது அவளால் தன்னுடைய துக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

அதே ஊரில் வசித்த ஒரு கிழவர் அதை பொருத்துக் கொள்ள முடியாமல் நயமாக, "எதற்காக இந்த அளவிற்கு துக்கப் பட்டு கண்ணீர் வடிக்கிறாய்? ஊரில் இருக்கும் மற்றவர்கள் இதனைப் பார்த்து 'எதற்கு புகழ் பெற்ற ஸென் ஆசிரியர் காகுயினிடம் பயிற்சி பெற்று தன்னொளி பெற்ற இந்தக் கிழவி தன்னுடைய பேத்தியின் மறைவிற்காக இப்படி அழுது புலம்பி ஒப்பாரி வைக்கிறது என்று கேட்பார்கள்?' நீ துக்கத்தினை மறந்து மனதினை தேற்றிக் கொள்ள வேண்டும்" என்று எடுத்துக் கூறினார்.

அதைக் கேட்ட ஸாட்ஸுஜோ அந்தக் கிழவனை ஒருமுறை உற்று பார்த்து விட்டு " மொட்டைத் தலைக் கிழவா, உனக்கு என்னத் தெரியும்? அழகான பூக்களை தூவுவதோ, நறுமணப் பொருட்களை சுற்றி வைப்பதோ, மெழுகு வர்த்தி மற்றும் விளக்கினை ஏற்றி வைப்பதை விட என்னுடைய கண்ணீரும், புலம்பலும் தான் என்னுடைய பேத்தியின் ஆத்மாவை சாந்தமாக்கும்" என்று கோபமாக கத்தி திட்டி விட்டு மறு படியும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

பிக்ஷுனி ஸுங்கோயின் வாழ்க்கை.


இளமையும் அழகும் மிகுந்த ஸுங்கோயின் மற்றொரு பெயர் ஸுசு. மற்றவர்களின் தொந்தரவால் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாள். பின்பு மணமுறிவு (விவாகரத்து) எற்பட்ட போது, கல்லூரிக்குச் சென்று தத்துவம் பயின்றாள்.

அழகான ஸுங்கோவைப் பார்த்த யாரும் காதல் வயப்பட்டனர். அவளும் மற்றவர்களின் மீது காதல் வயப்பட்டாள். காதல் வயப்பட்டவளுக்கு தத்துவம் நிறைவைத் தரவில்லை. மடத்திற்கு சென்று ஸென் கற்றுக் கொள்ள முயன்றாள். ஆனால் அங்கிருந்த மாணவர்கள் அவள் மேல் காதல் வயப்பட்டனர். காதல், காதல்.. காதல் மூச்சு தினறும் அளவிற்கு காதல்.

அங்கிருக்கப் பிடிக்காமல் கியோடோ நகரத்திற்கு சென்று உண்மையான ஸென் துறவிகளுக்குரிய திடமும் உறுதியுடனும் இடைவிடாது பயிற்சியும், தியானமும் செய்தாள். கெனின் கோயிலில் இருந்த மற்ற சகோதரர்கள் அவளுடைய உறுதியைக் கண்டு வியந்தனர். புகழ்ந்தனர். அவர்களில் ஒருவன் மிகவும் உயர்ந்த நோக்கத்துடன் ஸென்னைப் பற்றியும், அவள் தன்னொளி பெறுவதற்கான வழியையும் சொல்லிக் கொடுத்தான்.

கென் கோயிலின் சமய குருவாக இருந்தவர் மொகுராய். "அமைதியான இடி" என்றுக் கூறப் படுபவர். கடுமையானவர். கோயிலின் விதிகள் அனைத்தும், புத்த தர்மங்கள் அனைத்தும் தெரிந்த அவர், மற்றவர்களுக்கு அதனைக் கூறாமல் தனக்குள்ளேயே வைத்திருந்தார். ஜப்பான் நாகரிகமாக மாறிய போது ஒரு சில துறவிகளும் அதற்கு ஏற்றவாறு மாறினர். பூஜை செயவதற்காக இருக்கும் தலைமைத் துறவி, நவ நாகரிக உலகில் மயங்கி திருமணம் செய்து கொண்டவர். மற்ற சில துறவிகளும் திருமணம் புரிந்து கொண்டனர். மொகுராய் அதனைக் கடுமையாக எதிர்த்தார்.

இந்தக் கோயிலில் இருந்த தலைமைத் துறவியின் மனைவி, ஸுங்கோவின் ஒழுக்கம், உறுதியுடன் செய்கின்ற பயிற்சி, ஆண்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் அழகு ஆகியவற்றைக் கண்டு பொறாமைக் கொண்டாள். அந்த பொறாமை என்ற அரிப்பினால், ஸுங்கோவின் மீது கட்டுக் கதை எற்றி அவளையும், அவளுக்கு உதவி செய்த மற்ற துறவியையும் இணைத்து, பழி சுமற்றினாள். அதணால் விசாரிக்காமல் ஸுங்கோ கோயிலிலிருந்து வெளியே துரத்தப் பட்டாள்.

"நான் முன்பு தவறு செய்து இருக்கலாம், ஆனால் எந்த தவறும் செய்யாத என்னுடைய நண்பனைப் பற்றி அவதூறு கூறிய தலைமைத் துறவியின் மனைவி இனி இந்தக் கோயிலில் வசிக்கக் கூடாது" என்று நினைத்தவள் 500 ஆண்டுகால பழைமை வாய்ந்த அந்தக் கோயிலிற்கு தீ வைத்து தரை மட்டம் ஆக்கினாள்.

மறுநாள் காவலாளிகள் அவளைக் கைது செய்து சிறை வைத்தனர். ஒரு இளம் வயது வக்கில் அவளுக்கு சிறைத் தண்டனையை குறைப்பதற்க்காக வாதாட முன் வந்தான். "எனக்கு உதவி செய்யாதே, நான் வேறு எதாவது செய்து மறுபடியும் சிறைக்குள் தான் இருப்பேன்" என்று கூறி மறுத்து விட்டாள்.

சிறையில் இருந்தபோது அறுபது வயது சிறைக் காவலாளி கூட அவள் அழகைப் பார்த்து ஒருதலையாகக் காதல் கொண்டான். ஏழு வருடங்கள் கழித்து வெளியே வந்தாள். ஆனால் "சிறைப் பறவை"யான அவளுக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை. ஒருவரும் அவளிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. ஸென் சகோதரர்கள் கூட அவளை வெறுத்து ஒதுக்கி வைத்தனர். ஸென்னின் குறிக்கோளான கருனை, அன்பு, பரிவு வெறும் வார்த்தையாய் போனதால்; யாருடனும் பேசாத, சரியாக சாப்பிடாத அவள் நாளைடைவில் நலிவடைந்து நோய்வாய் பட்டாள்.

ஒரு சமயம் அவளைச் சந்தித்த ஸின்சு பிரிவைச் சார்ந்த புத்த துறவி அவளுக்கு "அமிதாப புத்தாவின், அன்பும் கருணையும்" பற்றி எடுத்துக் கூறினார். அதைக் கேட்டு ஆறுதலும், மனச் சாந்தியும் அடைந்தாள். முப்பது வயதில் இளமையும் அழகுடன் இருக்கும் போதே இறந்து போனாள்.

மிகவும் வருந்திய காலத்தில் ஒரு பெண் கதையாசிரியரிடம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள். அந்தக் கதை ஆசிரியர் அவளுடைய வாழ்க்கையைப் பற்றி புத்தகமாக எழுதினாள். தீரமும், உறுதியும், காதலும், சோகமும் கொண்ட அந்தக் கதை ஜப்பானில் பலராலும் படிக்கப் பட்டது. அவள் உயிரோடு இருந்த போது வெறுத்தவர்கள் கூட அந்தப் புத்தகத்தைப் படித்தப் பின்பு அவளுடைய மறைவுக்கு வருந்திக் கண்ணீர் விட்டனர்.