வெள்ளி, 30 ஏப்ரல், 2010

அன்பும் துக்கமும் எங்கே?


ஹுய்சூ தன்னுடைய நண்பனும் டாவோயிஸத் துறவியுமான சூயாங்சூவினைப் பார்த்து அவருடைய அன்பு மனைவியின் மறைவிற்காக ஆறுதல் கூற வந்திருந்தார்.

சூயாங்சூவினைப் பார்த்தவர் திகைத்து விட்டார். அவர் குடிசைக்கு வந்த போது சூயாங்சூ கால்களுக்கு இடையில் மரத்தினால் ஆன பாத்திரத்தினை வைத்துக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டும், இராகம் ஒன்றினை உருவாக்கி பாட்டுப் பாடிக் கொண்டும் இருந்தார்.

ஹுய்சூ "இத்தனை வருடங்கள் உன்னுடைய அன்பான மனைவியுடன் திருப்திகரமாக குடும்பம் நடத்தி வந்தாய். உன்னுடையக் குழந்தைகளைச் சீராட்டி நல்ல முறையில் வளர்த்தாள். அவளுடைய மறைவிற்காக துக்கப் பட்டு கண்ணீர் சிந்தாவிட்டாலும் பராவாயில்லை ஆனால் தாளம் போட்டுக் கொண்டு பாட்டு பாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு சகிக்கவில்லை" என்று தன்னுடைய மனதில் தோன்றிய கோபத்தினை வார்த்தைகளாக வெளிப் படுத்தினார்.

அதற்கு சூயாங்சூ, "அப்படி இல்லை, நான் ஒரு சாதாரண மனிதன், அவள் இறந்த போது கண்ணீர் விட்டு துக்கப் பட்டேன். ஆனால் அவள் இந்த பூமியில் வருவதற்கு முன்பே எங்கோ ஜோதியாய் இருந்தாள். அந்த சமயத்தில் அவளுக்கு உடல் இல்லை. காலங்கள் கடந்த போது அவளுடைய ஆத்மாவுடன் பூத உடல் சேர்க்கப் பட்டது. சதையும், எலும்புகளும் சேர்ந்த ஆத்மாவுடன் கலந்து பிறந்தாள். எந்த ஒன்று இந்த உலகில் அவளுக்கு வாழ்வு கொடுத்ததோ அந்த ஒன்று அவளுக்கு மரணத்தினையும் கொண்டு வந்தது. குளிர்காலத்தினைத் தொடர்ந்து இளவேனிற்காலம் வருகிறது. இளவேனிற்காலம் கோடைக்காலத்தினைக் கொடுக்கிறது. கோடையும் வசந்தகாலமாக மாறுகிறது. வசந்தம் குளிர்காலமாக மாறுகிறது. இயற்கை எப்படி பருவகாலங்களைக் மாறி மாறி கொடுக்கிறதோ அதேப் போல் அவளது வாழ்வும் சாவும் மாறி மாறி வந்தது. இப்பொழுது பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடையில் எங்கோ அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கிறாள். இந்த இயற்கையின் விதியினை அறிந்த பின்பும் நான் ஏன் துக்கப் பட வேண்டும். அறியாமையில் இருப்பதில் அர்த்தம் இல்லை." என்று அமைதியுடன் பதில் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக