வெள்ளி, 30 ஏப்ரல், 2010

வெளிப் படையாக காதலி..

ஒரு ஸென் ஆசிரியரிடம் இருபது புத்த பிக்ஷுக்களும், ஒரே ஒரு புத்த பிக்ஷுனியும் தியானத்தினை பயிற்சி செய்து வந்தனர்.

ஈஸுனின் தலை மொட்டை அடிக்கப் பட்டிருந்தாலும், காவி உடையினை அணிந்திருந்தாலும், மிகவும் அழகாகவே பார்ப்பவர்களுக்குத் தெரிந்தாள். இயற்கையிலேயே அழகான அவள், துறவியாக இருந்த போதும் மற்றவர்களை சுண்டி இழுக்கும் வசிகரத் தோற்றத்தினைப் பெற்றிருந்தாள்.

எல்லாத் துறவிகளும் மனதிற்குள் அவளைக் காதலிக்க ஆரம்பித்தனர். அதற்கும் மேலே போய் ஒரு துறவி அவளுக்கு காதல் கடிதம் எழுதி தனிமையில் சந்திக்க வேண்டும் என்று அனுமதியும் கேட்டான். ஈஸுன் அவனுக்கு பதில் எதுவும் எழுத வில்லை. தகுந்த நேரத்திற்காக காத்திருந்தாள்.

மறுநாள் ஆசிரியர் பயிற்சியினை ஆரம்பித்து உரையாற்றிக் கொண்டிருந்தார். உரை முடிந்ததும், இது தான் சமயம் எனக் காத்திருந்த ஈஸுன் வெடுக்கென எழுந்து , காதல் கடிதம் எழுதியவனைப் பார்த்து, "நீ உண்மையாகவே என்னை மிகவும் விரும்பிக் காதலிக்கிறாய் என்றால், அருகில் வா, வந்து இப்பொழுது எல்லார் முன்னிலையிலும் என்னை கட்டி அனைத்துக் கொள்" என்றாள். அவ்வளவுதான் அங்கிருந்தவர்கள் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

அன்றிலிருந்து ஒருவரும் அவள் நின்றிருந்த பக்கம் கூட தலை சாய்த்துப் பார்க்க வில்லை. தன்னுடைய பிக்ஷுனி பயிற்சியை சிறப்பாக முடித்தாள். தன்னொளி பெற்று பிறர் பெறவும் உதவி புரிந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக