வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கடவுள்தன்மையின் கதை..

எனக்கு ஓரு அழகான கதை நினைவுக்கு வருகிறது. ஓருவன் பக்கத்து வீட்டுகாரர்கள் அனைவருக்கும் ஓரே தொந்தரவாக இருந்தான் ஏனெனில் அவன் தொடர்ந்து கடவுளை எதிர்த்து, சொர்க்கத்தை எதிர்த்து, நரகத்தை எதிர்த்து வாதித்துகொண்டேயிருந்தான். அவன் ஓரு நாத்திகன் முழு நாத்திகன். அந்த எல்லைக்கு உட்பட்ட அரசன் கூட அவனைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் அரசவைக்கு அழைக்கப்பட்டான். அரசவையில் இருந்த அறிஞர்களால் கூட அவனை ஓப்புக்கொள்ள வைக்க முடியவில்லை.

உண்மையில் ஓரு நாத்திகனை ஓப்புக்கொள்ள வைப்பது என்பது கிட்டதட்ட முடியாத காரியம். நீ என்னைப்போல ஓரு மனிதனைக் கண்டுப்பிடிக்காவிட்டால், நாத்திகன் உன்னுடைய வாதங்கள் அனைத்தையும் அழித்துவிடுவான். ஏனெனில் நீ நம்பும் கடவுளைப் பற்றி வாதம் புரிகிறாய். நீ எந்த ஆதாரத்தையும் காட்டமுடியாது. நீ கண்ணால் பார்த்த சாட்சியை காட்டமுடியாது, நீ ஆதாரபூர்வமான வாதம் எதையும் கூறமுடியாது. கடவுளைக் குறித்த எல்லா வாதங்களும் நூற்றாண்டுகளாக நாத்திகர்களால் உடைத்து தூக்கி எறியபட்டே வருகிறது.

அந்த அரசன் மேலும் ஓரே ஓரு வாய்ப்பு கொடு. எனக்கு ஓரு மனிதரை தெரியும்.......அவர் மட்டுமே இந்த விஷயத்தைக் குறித்து ஏதாவது செய்யமுடியும் என்று அந்த நாத்திகனிடம் கேட்டான். அவர் இருக்கும் முகவரியை கொடுத்து நாத்திகனை அரசன் அந்த அடுத்த கிராமத்திற்கு போக சொன்னார். ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கோவிலில் அவரை நீ காண்பாய். அவருடைய பெயர் ஏக்நாத். அவர் ஓருவர்தான்........... அவர் உன்னை மாற்றினால்தான் உண்டு இல்லையெனில் உன்னை மாற்றுவது முடியாத காரியம் என அரசர் கூறினார்.

அதற்கு அந்த நாத்திகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இது ஓரு மிகப்பெரிய சவால். எனவே அவன் அந்த கிராமத்திற்கு சென்றான். நேரம் கிட்டதட்ட காலை ஓன்பது மணி இருக்கும். இந்த நேரத்தில் அவர் பூஜை மற்றும் குளியல் இவைகளை முடித்திருக்கவேண்டும் எனவே இதுதான் அங்கு செல்வதற்கு சரியான நேரம் என கூறிக்கொண்டு அவன் கோவிலுக்கு சென்றான். அங்கு அவனால் அவன் கண்களையே நம்பமுடியவில்லை, ஏக்நாத் தூங்கிகொண்டிருந்தார் – தூங்கிகொண்டிருப்பது மட்டுமில்லாமல் அவர் தனது கால்களை கடவுளின் சிலைமீது வைத்திருந்தார். அவர் கடவுளின் சிலையை கால்களை வைப்பதற்கு நல்ல இடமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

நாத்திகன் அவன் வாழ்விலேயே முதல்முறையாக, “கடவுளே நான் கூட கடவுளின் சிலைமீது கால் வைக்கமுடியாது நான் நாத்திகன் கடவுளை நம்புவதில்லை என்றாலும் கூட ஆனால் யாருக்கு தெரியும் முடிவில் கடவுள் இருந்துவிட்டால், எனவே என்னால்கூட இதை செய்ய இயலாது. இந்த மனிதர் ஓரு சந்நியாசி, அதிகாலையில் சூரியன் எழுவதற்கு முன் எழுந்திருக்க வேண்டியவர். இப்போது மணி ஓன்பது, அவர் தூங்கிகொண்டிருக்கிறார். இவர் கடவுளை குறித்து என்னை ஓப்புக்கொள்ள வைக்கப் போகிறாரா அவர் இன்னும் குளிக்கவில்லை, அவர் இன்னும் வழிபடவில்லை. அவர் வழிபடுவார் என எனக்கு தோன்றவில்லை – அவர் தனது கால்களை கடவுளின் சிலைமீது வைத்துள்ளார். இந்த மனிதர் ஆபத்தானவர் போல தெரிகிறது” என எண்ணியபடி பயத்துடன் நாத்திகன் கோவிலில் அமர்ந்து அவர் கண்விழிப்பதற்காக காத்திருந்தான்.

அரை மணிநேரம் கழித்து ஏக்நாத் எழுந்தார் மன்னித்துகொள், தூக்கத்தில் கால்களால் உன்னை தொட்டுவிட்டேன் என்று கூட கடவுளிடம் அவர் வேண்டவில்லை, அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

நாத்திகன், “நீங்கள் ஓரு சந்நியாசியா? வேதங்களில் சந்நியாசி என்பவன் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது அல்லவா?” என கேட்டான்.


ஏக்நாத், ஆமாம் கூறப்பட்டுள்ளது ஆனால் அதற்கான என்னுடைய புரிதல் என்னவென்றால் – ஓரு சந்நியாசி எழுந்திருக்கும் பொழுதெல்லாம் சூரியன் உதிக்க வேண்டும். யார் இந்த சூரியன்? அவன் என்னைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் நான் எதற்காக அவனைப் பற்றி கவலைப்படவேண்டும் எனக் கூறினார்.

ஆச்சரியமாக உள்ளது, ஆனால் நீங்கள் உங்களுடைய காலை கடவுளின் மீது, கடவுளின் தலையில் - என நாத்திகன் கேட்டான். நான் வேறு எங்கு என் காலை வைத்துக்கொள்ளமுடியும் -ஏனெனில் வேதங்கள் கூறுகின்றன கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் நீ நான் காலை எந்த இடத்திலும் வைக்ககூடாது என கூற வருகிறாயா என ஏக்நாத் கேட்டார்.

கோபபடாதீர்கள் ஆனால் உங்கள் வாதம் நியாயமானதாக உள்ளது கடவுள் எல்லா இடத்திலும் இருப்பாரானால், நீங்கள் எப்போது எந்த இடத்தில் காலை வைத்தாலும் அது கடவுளின் தலை மீதே உள்ளது என நாத்திகன் கூறினான்.

எனவே என்ன பிரச்சனை? இது என் கால்களுக்கு நன்கு ஓய்வளிக்கிறது. சில முட்டாள்கள் இதுதான் கடவுள் என நினைக்கிறார்கள். கடவுள் எல்லா இடங்களிலும் உள்ளார் – எனவே அவர் எவ்வாறு இந்த கல்லில் மனிதனால் உருவாக்கபட்ட இந்த கல்லில் மட்டும் இருக்கமுடியும் நீ என்னை முட்டாளாக்கமுடியாது, என ஏக்நாத் கூறினார்.

அதிகாலையில் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடுவதற்க்கு என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் நான் வேறொரு கிராமத்திலிருந்து வருகிறேன். என்னை மன்னர் அனுப்பினார் உங்களிடம் என்ன சொல்வது என்று எனக்கு குழப்பமாக உள்ளது. ஏனெனில் நான் ஓரு நாத்திகனாக இருந்தேன்.
ஆனால் இந்த மனிதனோ இதுவரை அவன் பார்த்த மனிதர்களிலேயே பெரிய நாத்திகராக இருக்கிறார்.

மிகவும் நல்லது. நீ நாத்திகனாக இருக்கலாம். அதில் தவறேதும் இல்லை. அதைப் பற்றி கடவுள் பொருட்படுத்துவதில்லை. என்னை நம்பு. இப்போது போய்விடு என ஏக்நாத் கூறினார்.

ஆனால் மன்னர் எனக்கு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார். நான் கடவுளை ஓப்புகொள்ள வைக்கப் படுவதற்காக வந்துள்ளேன் என நாத்திகன் கூறினான்.

கடவுளை ஓப்பு கொள்ள வைக்கபடுவதற்காகவா? கடவுளிடம் உனக்கு என்ன வேலை? என ஏக்நாத் கேட்டார்.

இல்லை, எந்த வேலையுமில்லை, என அவன் கூறினான்.

பிறகு உபயோகமில்லாத விஷயங்களை பற்றி ஏன் கவலைப்படுகிறாய். உபயோகமாய் ஏதாவது செய். நான் இப்போது போகிறேன். ஏனெனில் இது எனது சாப்பாட்டு நேரம்
என ஏக்நாத் கூறினார்.

நீங்கள் ஆற்றில் குளிக்க போவதில்லையா என நாத்திகன் கேட்டான்.

ஆற்றைப் பற்றி யார் கவலைபடுவார்கள். அது எப்போதும் அங்கேயே உள்ளது.. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குளிககலாம். நடு ராத்திரியில், மத்தியானத்தில் – என்ன அவசரம் அது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இன்று சாப்பாடு போடுகிறேன் என்று சொன்ன வீட்டிற்க்கு நான் சரியான நேரத்திற்க்கு செல்லா விடில் அது கஷ்டமாகி விடும். எனவே நான் என் உணவை சாப்பிட்ட பிறகு குளிப்பேன் - என ஏக்நாத் கூறினார்.

ஆனால் குளிக்காமல் வழிபடாமல் உணவை உண்ணும் சந்நியாசிகள் பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை என நாத்திகன் கூறினான்.

நீ பழைய சந்நியாசிகளை பற்றி பேசிக்கொண்டிருக்கிறாய். நான் இந்த காலத்து மனிதன். என்னுடைய நேரத்தை வீணடிக்காதே. நீ குளித்து விட்டு வழிபாடு செய். நான் எனது உணவுடன் வருகிறேன் என ஏக்நாத் கூறினார்.

உணவு தருவதாக வாக்களித்திருந்த அந்த யாரோ ஓருவர் உணவை இங்கேயே கொண்டு வந்துவிட்டார். உடனே ஏக்நாத் கோவிலின் முன் சாப்பிட அமர்ந்தார். அப்போது ஓரு நாய் ஓடிவந்து அவருடைய சப்பாத்திகளில் ஓன்றை எடுத்துக்கொண்டு ஓடியது. நாத்திகன் இதை கவனித்துக்கொண்டிருந்தான். உடனே ஏக்நாத் “முட்டாளே நில்!” என கத்திக் கொண்டே நாயின் பின் ஓடத் தொடங்கினார்.

கடவுளே அந்த சப்பாத்தியை இவர் திரும்ப வாங்கப் போகிறாரா என எண்ணிய படியே நாத்திகனும் பின் தொடர்ந்தான்.

ஏக்நாத் நாயை பிடித்து விட்டார். அவர் நாயிடம் “உனக்கு ஓரு சப்பாத்தி வேண்டுமென்றால் அங்கேயே காத்திரு என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். நான் உன்னை வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட அனுமதிக்க மாட்டேன்” என கூறிக்கொண்டே சப்பாத்தியை அதன் வாயிலிருந்து பிடுங்கி வெண்ணெயை அதில் தடவி சப்பாத்தியை திரும்ப கொடுத்தார். அவர் நாயை பார்த்து “ராம் ராம் இப்போது நீ இதை சாப்பிடலாம் ஆனால் எப்போதும் இங்கிதமாக நடந்து கொள்” எனக் கூறினார்.

நாத்திகன் இந்த முழு நிகழ்ச்சியையும் கவனித்தான். நாயை அவர் கடவுள் என அழைக்கிறார். அது மட்டுமின்றி வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட நாயை அனுமதிக்கவில்லை.......
ஓரு ஆச்சரியமான தனித்தன்மையுள்ள மனிதன். அரசர் சரியாகதான் கூறியுள்ளார் போலும். இந்த மனிதர் என்னை கடவுள் இருக்கிறார் என ஓப்புக்கொள்ள வைக்க முடிய வில்லை எனில் பிறகு வேறு யாராலும் முடியாது.

அவன் ஏக்நாத்தின் காலைத் தொட்டு வணங்கினான். என்னை மன்னித்துவிடுங்கள்.....நான் உங்களை மிகவும் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். இது கடவுளின் சிலை மீது காலை வைப்பதை நியாயபடுத்துதல் அல்ல. ஓரு நாயிடமும் நீங்கள் கடவுளை காண்கிறீர்கள்.வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிட நீங்கள் நாயை அனுமதிக்க மாட்டீர்கள். அதன் சப்பாத்தியில் வெண்ணெய் தடவுவதற்க்காக நீங்கள் அரை மைல் ஓடியிருக்கிறீர்கள். நானும் ஓடியிருக்கிறேன். என்றான்.

நான் வெண்ணெயோடு சப்பாத்தி சாப்பிடும் போது கடவுள் வெண்ணெய் இல்லாமல் சப்பாத்தி சாப்பிடுவது சரியென்று எனக்கு படவில்லை. நான் அவனிடம் சொல்லியிருக்கிறேன் ஆனால் அவன் மிகவும் மடத்தனமான கடவுள். கிட்டதட்ட எல்லா நாட்களிலும் இது நடக்கிறது. நான் எனது உணவை திறக்கும்பொழுது அவன் எங்கேயோ மறைந்துள்ளான். நீ வேதங்களில் கண்டிப்பாக படித்திருப்பாய். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். இந்த கடவுள் எல்லா இடங்களிலும் எப்போதும் இருப்பார்.

ஆனால் நானும் பிடிவாதமான மனிதன். இன்று அரைமைல் மட்டுமே. ஓரு நாள் பத்து மைலாகிவிட்டது. ஆனால் வெண்ணெயை போட்டுத் தரும் வரை நான் அவனை சப்பாத்தி சாப்பிட அனுமதிக்க மாட்டேன். அது சரியானதாக எனக்கு பட வில்லை. ஓருவர் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் - என ஏக்நாத் கூறினார்.

அந்த மனிதன், “உண்மைதான், அதிகாலையில் இருந்தே உங்களுடைய மென்மையான நடத்தையை காண்கிறேன். மேலும் உங்களிடம் எனக்கு வாதம் செய்ய ஏதும் இல்லை, நான் வீட்டிற்க்கு ஓரு ஆத்திகனாக போகிறேன். ஏனெனில் என்னுடைய வாழ்வில்முதல் முறையாக ஓரு ஆத்திகரை காண்கிறேன். மற்ற எல்லா ஆத்திகர்களும் வெறும் வார்த்தைகளை உபயோகப்படுத்தினார்கள். கடவுளைப் பற்றி எதையும் அறிந்து கொள்ள வில்லை. உங்களுக்கு நிச்சயமாக ஏதோ ஓன்று தெரியும். ஓவ்வோர் அசைவும் அதை உணர்த்துகிறது. அது தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடும். நானும் முதலில் தவறாகத்தான் புரிந்து கொண்டேன். ஆனால் நான் இப்போது பார்க்கிறேன்” என கூறினான்.

இது எல்லாவற்றையும் மறந்து விடு. வந்து என்னோடு சாப்பிடு. நம் இருவருக்கும் போதுமான அளவு உணவு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனெனில் நீ இங்கு காத்துக் கொண்டிருப்பாய் என நான் அறிவேன் - என ஏக்நாத் கூறினார்.

அவன் “ஆனால் நான் குளிக்க வேண்டும்” என கூறினான்.

குளிப்பதை பற்றி மறந்து விடு. நான் உனக்கு கூறியதைப்போல ஆறு நாள் முழுவதும் ஓடி கொண்டேயிருக்கிறது. நீ எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். எந்த தடையும் இல்லை - என ஏக்நாத் கூறினார்.

ஆனால் நான்........ நாத்திகனாக இருந்திருந்தாலும் கூட நான்
கோவிலின் உள்ளே சென்று காலை தொட்டு .............
என அவன் கூறினான்.

நீ கோவிலுக்குள் சென்றால் என்னை விட மோசமான மனிதனை நீ பார்க்க மாட்டாய். முதலில் சாப்பிடு. பிறகு நீ என்ன முட்டாள்தனம் செய்ய நினைக்கிறாயோ அதை செய். எனக்கு பசியாக உள்ளது. என்னால் காத்திருக்க முடியாது. ஆனால் நீ என் விருந்தாளி – இந்த கோவில் என்னுடைய வீடு. நான் இங்கு வாழ தொடங்கியதிலிருந்து எல்லோரும் உள்ளே வருவதை நிறுத்தி விட்டார்கள். இது என் முழு வாழ்க்கையின் அனுபவம். எங்கு நான் சென்றாலும் எந்தக் கோவிலில் நான் நுழைந்தாலும்........ விரைவில் வழிபடுபவர்கள் மறைந்து விடுவர். ஏனெனில் கோவிலில் நான் எல்லாவிதமான காரியங்களையும் செய்வேன்....நீ அதிகம் பார்க்கவில்லை. நீ வந்து உன் உணவை எடுத்துகொள் - என ஏக்நாத் கூறினார்.


நான் உனக்காகவே காத்திருக்கிறேன்.



முன்னொரு நாள் மிகப் பழமை வாய்ந்ததும் கம்பீரமானதும் ஆன ஒரு மரம் இருந்தது.
அதன் கிளைகள் வான்வரை விரிந்து பரவிக் கிடந்தன.அது பூத்துக் குலுங்கும் தருணத்தில் எல்லா வண்ணங்களிலும் சிரிதும் பெரிதுமான எல்லாவித வண்ணத்துப் பூச்சிகளும்
அதைச் சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கும்.

அது மலர்ந்து கனிகளைத் தாங்கிக் கொண்டிருக்கையில் தொலைதூர பிரதேசங்களிலிருந்து பறவைகள் வந்து அதில் பாடும்.

நீண்டு திறந்திருக்கும் கைகளைப் போன்ற அதன் கிளைகள் அதன் நிழலில் வந்து இளைப்பாறும்
அனைவரையும் ஆசிர்வதிக்கும்.

அதன் அடியில் எப்பொழுதும் ஒரு சிறுவன் வந்து விளையாடிக்கொண்டிருப்பான்.அந்த மரம் அந்த சிறுவனிடம் ஒரு நேசத்தை வளர்த்துக்கொண்டது.
பெரியவர் தான் பெரியவர் என்ற நினைப்பைக் கொண்டிருக்காவிட்டால் பெரியவர்க்கும் சிறியவர்க்கும் நட்பு சாத்தியமே.

அந்த மரத்திற்கு அது மிகவும் பெரிது என்பது தெரியாது. அந்த விதமான அறிவை மனிதன் மட்டுமே கொண்டிருக்கிறான்.

பெரியது எப்பொழுதும் தனது ஆணவத்தையே முக்கியமாகக் கருதும்.ஆனால் அன்பிற்கு சிறியது பெரியது என்று எதுவும் கிடையாது.
நெருங்கிவரும் எவரையு ம்தழுவிக் கொள்வது அன்பு.
இப்படியாக அந்த மரம் எப்பொழுதும் தன்னருகில் விளையாடுவதற்காக வரும் அந்த சிறுவனிடம் அன்பை வளர்த்துக்கொண்டது.
அதன் கிளைகளோ உயர்ந்திருப்பவை ஆனால் அது அவைகளை அவனுக்காக வளைத்துத் தாழ்த்திக் கொடுத்தது.

அப்போதுதானேஇந்த மனிதர் ஆபத்தானவர் போல தெரிகிறதுஅவன் அதனுடைய பூக்களையும் பழங்களையும் பறிக்கமுடியும்.
அன்பு எப்போதும் வளைந்து கொடுக்கத் தயாராயிருக்கும் ஆணவம் ஒருபோதும் வளைந்து கொடுக்காது.
நீ ஆணவத்தை நெருங்கினால் அதன் கிளைகள் இன்னும் எட்டமுடியாமல்
மேல்நோக்கி நீளும். அது நீ அதை நெருங்க முடியாதபடி விரைத்து நிற்கும்.

அந்த விளையாட்டுச் சிறுகுழந்தை வந்தான் அந்த மரம் தனது கிளைகளைத் தாழ்த்திக் கொடுத்தது
அந்தச் சிறுகுழந்தை சில பூக்களைப் பறித்துக்கொண்டதில் அந்த மரத்துக்குப் பெருமகிழ்ச்சி.அதன் முழு இருப்பும் சப்த நாடியும் அன்பின் ஆனந்தத்தில் நிறைந்தது.
எப்பொழுதும் எதையாவது கொடுக்க முடியும்போது சந்தோஷப்படுவது அன்பு.
எப்பொழுதும் எதையாவது பெற முடியும்போது சந்தோஷப்படுவது ஆணவம்.

சில நேரங்களில் அந்தச் சிறுவன் அந்த மரத்தின் மடியில் படுத்து உறங்கினான் சில நேரங்களில் அவன் அதனுடைய பழங்களைப் பறித்து உண்டான்.
இப்படியாக அவன் வளர்ந்து வந்தான்.

சிலநேரம் அவன் அந்த மரத்தின் மலர்களால் கிரீடம் செய்து அணிந்துகொண்டு காட்டு ராஜாவைப்போல நடித்துக் கொண்டிருப்பான்.

அன்பில் மலர்கள் நிறைந்திருக்கும்போது ஒருவன் அரசனாகி விடுவான்.
ஆனால் ஆணவத்தின் முட்கள் அங்கிருந்தால் ஒருவன் துன்பமும் ஏழ்மையும் உள்ளவனாகவே இருப்பான்

அந்தச் சிறுவன் மலர்கிரீடம் அணிந்து ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அந்த மரம் ஆனந்தத்தால் பூரித்தது.

அது அன்பில் தலையசைத்ததுஅது தென்றலில் இசைபாடியது.
அந்தச் சிறுவன் மேலும் வளர்ந்தான் அவன் அந்த மரத்தின் கிளைகளில் ஊஞ்சலாடுவதற்காக மரத்தின் மேல் ஏற ஆரம்பித்தான்.

அந்தச் சிறுவன் அதனுடைய கிளைகளின் மேல அமர்ந்திருக்கையில் அந்த மரம் மிக மிக சந்தோஷப்பட்டது.
யாருக்காவது சுகத்தை அளிக்க முடியும்போது சந்தோஷப்படுவது அன்பு.

கஷ்டத்தைக் கொடுக்கையில் மட்டுமே சந்தோஷப்படுவது ஆணவம்.
கால ஓட்டத்தில் அந்தச் சிறுவனுக்கு மற்ற பொறுப்புகளின் சுமை சேர்ந்தது.
குறிக்கோள்கள் வளர்ந்தன.

அவன் தேர்ச்சி பெற வேண்டிய தேர்வுகள் இருந்தன அவன் அரட்டை அடிக்க ஊர் சுற்ற நண்பர்கள் சேர்ந்தனர்.
எனவே அவன் அடிக்கடி அந்த மரத்திடம் வருவதில்லை.

ஆனால் அந்த மரம் அவனுடைய வரவை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்தது.

அது அதனுடைய ஆன்மாவிலிருந்து அழைப்பு விடுத்தது.
வா....வா. நான் உனக்காகக் காத்திருக்கிறேன்.

அன்பு இரவும் பகலும் காத்திருக்கும்.இப்படியாக அந்த மரம் காத்திருந்தது.

அந்தச் சிறுவன் வராததால் மரம் சோகத்தில் ஆழ்ந்தது.பகிர்ந்துகொள்ள முடியாதபோது அன்பு சோகத்தில் ஆழ்கிறது.

எதையும் கொடுக்க முடியாதபோது அன்பு வருத்தப்படுகிறது.பகிர்ந்து கொள்ள முடிவதற்காக நன்றி சொல்வது அன்பு.
முழுமையாகத் தன்னைக் கொடுக்க முடியும்பொழுது அன்பு ஆனந்தத்தின் உச்சத்தைத் தொடுகிறது.

அந்தச் சிறுவன் வளர வளர அந்த மரத்தினிடம் அவன் வருவது குறைந்துகொண்டே வந்தது.
பெரிதாக வளர்ந்துவிட்ட மனிதனுக்கு குறிக்கோள்கள் அதிகரித்துவிட்ட மனிதனுக்கு அன்புகொள்ள நேரம் கிடைப்பது குறுகிக் கொண்டே வரும்
இப்பொழுது அந்தச் சிறுவன் உலக விஷயங்களில் தன் முழு கவனத்தையும் கொண்டுவிட்டான்.

ஒருநாள் அவன் கடந்துசெல்லும்போது அந்த மரம் அவனிடம் சொல்லியது.

நான் உனக்காகவே காத்திருக்கிறேன் ஆனால் நீ வருவதில்லை. நான் தினமும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்தச் சிறுவன் கேட்டான் உன்னிடம் என்ன இருக்கிறது?நான் ஏன் உன்னிடம் வர வேண்டும்?
உன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?நான் பணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
நான் எனும் ஆணவம் எப்பொழுதும் காரியத்தில் குறிகொண்டதாகவே இருக்கும்.ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் மட்டுமே ஆணவம் தேடி வரும்.

ஆனால் அன்பு பயன்கருதாதது.அன்பிற்கு அன்புகொள்வதே அதன் பயன் பரிசு.ஆச்சரியப்பட்ட அந்த மரம் கேட்டது நான் ஏதாவது கொடுத்தால் மட்டும்தான்
நீ வருவாயா? எதையும் பிடித்து வைத்துக்கொள்வது அன்பு அல்ல.
ஆணவம் சேர்த்துக்கொண்டே போகும் ஆனால் அன்பு
எந்த நிபந்தனையும் விதிக்காமல்அளித்துக்கொண்டே இருக்கும்.

எங்களுக்கு அந்த ஆணவநோய் இல்லை எனவே நாங்கள் ஆனந்தமாய் இருக்கிறோம்.என்றது அந்த மரம்.

எங்களிடம் மலர்கள் மலர்கின்றன பல கனிகள் எங்களிடம் பழுக்கின்றன நாங்கள் இதமளிக்கும் நிழலைத் தருகிறோம்.
நாங்கள் தென்றலில் ஆடுகிறோம்பாடுகிறோம்.

வெள்ளையுள்ளம் கொண்ட பறவைகள் எங்கள் கிளைகளில் தாவித் திரிகின்றன எங்களிடம் பணம் எதுவும் இல்லாதபோதும் அவை இனிய கானம் பாடுகின்றன.

பணத்துடன் நாங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டால்அந்தநாள் முதல் நாங்களும்
கோவிலுக்குப் போக வேண்டியதாகி விடும்

பலமிழந்த மனிதர்களாகிய உங்களைப் போலவே-எப்படி அமைதியைப் பெறுவது
எப்படி அன்பைப் பெறுவது என்று கற்றுக்கொள்ள.
எனவே பணம் வேண்டாம் எங்களுக்கு பணத்தின் தேவை எதுவும் இல்லை.
அந்தச் சிறுவன் சொன்னான் பின் ஏன் நான் உன்னிடம் வர வேண்டும்?
நான் எங்கு பணம் இருக்கிறதோ அங்கு போகிறேன்.எனக்குப் பணம்தான் வேண்டும்.
ஆணவம் பணத்தைக் கேட்கிறது ஏனெனில் அதற்கு அதிகாரம் வேண்டும்.
அந்த மரம் சிறிது யோசித்துவிட்டுக் கூறியது.
எனது அன்பே வேறு எங்கும் நீ போக வேண்டாம்
எனது பழங்களைப் பறித்து அவைகளை விற்பனை செய்.அந்த வகையில் உனக்குப் பணம் கிடைக்கும்.
அந்தச் சிறுவன் உடனே பிரகாசமானான்.
அவன் அந்த மரத்தின் மீதேறி அதன் எல்லாப் பழங்களையும் பறித்துக்கொண்டான்:
கனியாத பழங்களைக்கூட உலுக்கி எடுத்துக் கொண்டான்.
அந்த மரம் மகிழ்ச்சியடைந்தது அதன் சில கொம்புகளும் கிளைகளும் முறிந்துவிட்ட போதிலும்
அதனுடைய பல இலைகள் நிலத்தில் உதிர்ந்துவிட்ட போதிலும்.
தான் உடைந்தாலும் கூட அது அன்பை சந்தோஷப்பட வைக்கிறது
ஆனால் முடிவதையெல்லாம் எடுத்துக்கொண்ட பின்னும் ஆணவம் சந்தோஷமடைவதில்லை.
ஆணவம் எப்பொழுதும் இன்னும் அதிகத்திற்கே ஆசைப்படுகிறது.
அந்தச் சிறுவன் ஒருமுறைகூடத் திரும்பிப்பார்த்து
அதற்கு நன்றி சொல்லவில்லை ஆனால் அதையெல்லாம் அந்த மரம் கவனிக்கவேயில்லை.
அது அதனுடைய நன்றியுணர்வில் நிரம்பியிருந்தது- தனது கனிகளைப் பறித்து விற்றுக்கொள்ளச் சொன்னதை
அந்தச் சிறுவன் ஏற்றுக்கொண்டதிலேயே அது நன்றியுணர்வு கொண்டது.

அதன்பின் அந்தச் சிறுவன் நீண்டகாலத்திற்குத் திரும்பி வரவேயில்லை.
இப்போது அவனிடம் பணம் இருந்தது ஆகவே பரபரப்பாக இருந்தான்-
இருக்கும் பணத்திலிருந்து இன்னும் பணம் பண்ணும் வேலை.
அந்த மரத்தை அவன் சுத்தமாக மறந்துவிட்டான்.
ஆண்டுகள் பல கழிந்தன.அந்த மரம் சோகத்தில் ஆழ்ந்தது.
அது அந்தச் சிறுவனின் வருகைக்காக ஏங்கியது-எப்படி மார்பில் பால் நிரம்பிய நிலையிலுள்ள தாய்
தன் மகனைத் தவறவிட்டுவிட்டு தவிப்பாளோ அதுபோல.
அவளுடைய முழு ஜீவனும் தனது மகனுக்காக ஏங்கும் அவள் பயித்தியம் போல தனது மகனைத் தேடுவாள்-
எப்படியாவது அவன் வந்து அவளை லேசாக்கிவிடமாட்டானா என்று.

அந்த மரத்தின் உள் கதறல் அத்தகையதாயிற்று அதன் முழு ஜீவனும் வேதனையில் துடித்தது.

பல வருடங்களுக்குப் பிறகு தற்போது வளர்ந்த ஓர் ஆளாக அந்தச் சிறுவன் அந்த மரத்தினிடம் வந்தான்.
அந்த மரம் கூறியது வா என் சிறுவனே வா என்னைக் கட்டித்தழுவிக்கொள்.
அந்த மனிதன் சொன்னான் அந்தப் பாசத்தையெல்லாம் நிறுத்திக்கொள்.
அவையெல்லாம் குழந்தைப் பருவ சங்கதிகள். நான் இன்னும் குழந்தையல்ல.
ஆணவத்தின் பார்வைக்கு அன்பு பயித்தியக்காரத்தனம் குழந்தைத்தனமான கற்பனை.

ஆனால் அந்த மரம் அவனை அழைத்தது:
வா வந்து என் கிளைகளில் ஊஞ்சலாடு. வா... ஆடு.
வா... என்னோடு விளையாட வா.

அந்த மனிதன் கூறினான் இந்தப் பயனற்ற பேச்சையெல்லாம் முதலில் நிறுத்து! நான் ஒரு வீடு கட்ட வேண்டும்.
நீ எனக்கு ஒரு வீட்டைத் தர முடியுமா?
அந்த மரம் வியப்படைந்தது: ஒரு வீடா! நான் வீடில்லாமல் தானே இருக்கிறேன்.
மனிதன் மட்டும்தான் வீடுகளில் வாழ்கிறான். மனிதனைத் தவிர வேறு எவரும் வீடுகளில் வாழ்வதில்லை.
அப்படி நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கொண்டுவிட்ட அவனுடைய நிலையை கவனித்தாயா?

அவனது கட்டிடங்கள் எவ்வளவு பெரியதாகியதோ அந்தஅளவு மனிதன் சிறிதாகிப் போனான்.

நாங்கள் வீடுகள் கட்டி வாழ்வதில்லை ஆனாலும் நீ எனது கிளைகளை தாராளமாய் வெட்டி எடுத்துக் கொள்ளலாம் பின் அவைகளைக் கொண்டு ஒரு வீடு கட்டிக்கொள். என்றது.
கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் அந்த மனிதன் ஒரு கோடாலியைக் கொண்டு வந்தான் அந்த மரத்தின் எல்லாக் கிளைகளையும் வெட்டிக் கொண்டான்.
இப்போது அந்த மரம் வெறும் ஒற்றை மரத்தண்டாய் ஆகிப்போனது.
ஆனால் அன்பு இவை போன்றவைகளைப் பற்றி
கவலைப் படுவதில்லை -அன்பு கொண்டவருக்காக அதன் அங்கங்கள் துண்டிக்கப்பட்டாலும்.
அன்பு என்றால் கொடுப்பது: அன்பு எப்பொழுதும் கொடுக்கத் தயாராயிருக்கிறது.
அந்த மரத்திற்கு நன்றி சொல்லவேண்டும் என்றுகூட அவன் நினைக்கவில்லை. அவன் அவனுடைய வீட்டைக் கட்டிக்கொண்டான்.
நாட்கள் வருடங்களாக உருண்டோடியது. அந்தக் கிளைகளையிழந்த மரத்தண்டு காத்திருந்தது.... காத்திருந்தது.

அது அவனுக்கு அழைப்புவிட நினைத்தது ஆனால் அதற்கு பலமூட்டும் அதன் கிளைகளோ இலைகளோ இப்போது அதனிடம் இல்லை.

காற்றடித்தது ஆனால் அந்தக் காற்றிடம் ஒரு செய்தியைக் கொடுத்தனுப்பக் கூட அதனால் இப்போது முடியவில்லை.

இருந்தபோதிலும் அதனுடைய ஆன்மாவில் ஒரே ஒரு பிரார்த்தனையே ஒலித்துக் கொண்டிருந்தது:
வா வா என் அன்பே வா. ஆனால் எதுவுமே நிகழவில்லை.
காலம் ஓடியது அந்த மனிதனுக்கு இப்போது வயதாகிவிட்டது.
ஒருமுறை அதைக் கடந்து போகும்போது அவன் வந்தான் வந்து அந்த மரத்தினடியில் நின்றான்.
அந்த மரம் உடனே கேட்டது உனக்காக நான் செய்யக்கூடியது இன்னும் ஏதாவது இருக்கிறதா?
நீ மிக மிக நீண்டகாலம் கழித்து வந்திருக்கிறாய்.
அந்த வயதான மனிதன் சொன்னான் நீ எனக்கு வேறு என்ன செய்ய முடியும்?
நான் இப்போது தூர தேசங்களுக்குப் போக வேண்டும் - அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக
அதற்குப் பயணப்பட எனக்கு ஒரு படகு வேண்டும்.

உற்சாகத் துள்ளலோடு அந்த மரம் கூறியது எனது அன்பே அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை
எனது மரத்தண்டை வெட்டிக்கொள் அதிலிருந்து ஒரு படகு செய்துகொள்.

ஆனால் தயவுசெய்து ஞாபகத்தில் வைத்துக்கொள் -நான் உனது வரவிற்காக எப்பொழுதும் காத்துக் கொண்டிருப்பேன்.

அந்த மனிதன் ஒரு ரம்பத்தை எடுத்து வந்தான் மரத்தண்டை வெட்டிச் சாய்த்தான்
அதிலிருந்து ஒரு படகு செய்தான் கடல்பயணம் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
இப்போது அந்த மரம் ஒரு வெறும் அடிக்கட்டை.
அது காத்திருந்தது - அதன் அன்பானவனின் வருகைக்காக.
அது காத்திருந்தது மேலும் அது காத்திருந்தது மேலும் அது காத்திருந்தது.
அந்த மனிதன் ஒருபோதும் திரும்பவில்லை:ஆணவம் எங்கே ஏதாவது கிடைக்குமோ
அங்கு மட்டுமே போகும்.
ஆனால் அந்த மரத்திடமோ எதுவுமேயில்லை கொடுப்பதற்கு சுத்தமாக எதுவுமில்லை.
அடைவதற்கு எதுவுமில்லாத இடம்நோக்கி ஆணவம் ஒருபோதும் போகாது
ஆணவம் என்றுமே பிச்சைக்காரன்தான் அது எப்போதும் யாசித்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அன்பு ஒரு அறக்கட்டளை.
அன்பு ஒர் அரசன் ஒரு பேரரசன்!
அன்பை விட உயர்ந்த ஒரு அரசன் எங்காவதுண்டா?
ஒருநாள் இரவு அந்த அடிக்கட்டையின் அருகில் நான் ஓய்வுகொண்டேன்.
அது என்னிடம் குசுகுசுத்தது என்னுடைய அந்த நண்பன் இன்னும் திரும்பி வரவில்லையே.
அவன் ஒருவேளை முழுகிப் போயிருப்பானோ அவன் ஒருவேளை தொலைந்து போயிருப்பானோ
என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.
அந்தத் தொலைதூர தேசங்கள் ஏதாவதொன்றில் அவன் காணாமல் போயிருக்கலாமல்லவா.
அவன் இப்போது உயிரோடுகூட இல்லையோ என்னவோ.
அவனைப் பற்றிய ஏதாவது செய்திக்காக எவ்வளவு நான் ஏங்குகிறேன் தெரியுமா?
எனது வாழ்வின் கடைசிகாலத்தை நெருங்கிவிட்ட இந்த சமயத்தில்அவனைப் பற்றித் தகவல் ஏதாவது கிடைத்தால்கூட நான் திருப்திப் பட்டுக் கொள்வேன்.
அதன் பிறகு நான் சந்தோஷமாக இறந்து விடுவேன்.
ஆனால் என்னால் அவனை அழைக்க முடிந்தாலும்கூட அவன் வர விரும்ப மாட்டான்.

என்னிடம் கொடுப்பதற்கு இனி எதுவும் இல்லை ஆனால் அவனுக்கோ எடுத்துக்கொள்ளும் மொழி மட்டும்தான் புரியும்.
ஆணவத்திற்கு எடுத்துக்கொள்ளும் மொழி மட்டுமே புரியும். ஆனால் கொடுக்கும் மொழியே அன்பு.
நான் இதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை.
மேலும் இதற்கு மேல் சொல்ல எதுவும் பாக்கியும் இல்லை.

வாழ்க்கை அந்த மரத்தைப்போல ஆகமுடிந்தால் தனது கிளைகளைபரந்து விரிந்து பரவச்செய்தால் அதனால்
எல்லோரும் அதன் நிழலில் பாதுகாப்புப் பெற முடிந்தால்

அப்போது அன்பு என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
எந்த வேதப் புத்தகமும் கிடையாது. எந்த வழிகாட்டலும் இல்லை.
எந்த அகராதியும் கிடையாது அன்புக்கு.
எந்த குறிப்பிட்ட கொள்கைகளும் கிடையாது அன்புக்கு.
அன்பைப் பற்றி நான் எப்படிப் பேச முடியும் என்று நான் ஆச்சரியமே படுகிறேன்!
விளக்குவதற்கு அவ்வளவு கஷ்டமானது அன்பு.
ஆனால் அன்பு இதோ இருக்கிறது!